அந்திரேயா பலாடியோ
அந்திரேயா பலாடியோ (Andrea Palladio, 30 நவம்பர் 1508 – 19 ஆகத்து 1580) வெனிசுக் குடியரசில் செயற்பட்டுவந்த ஒரு இத்தாலியக் கட்டிடக்கலைஞர். உரோம, கிரேக்கக் கட்டிடக் கலையினதும், விட்ருவியசினதும் செல்வாக்குக்கு உட்பட்ட பல்லாடியோ, கட்டிடக்கலை வரலாற்றில் பெரிய அளவில் செல்வாக்குச் செலுத்திய ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருடைய கட்டிடங்கள் எல்லாமே வெனிசுக் குடியரசுப் பகுதிகளிலேயே அமைந்திருந்தன. ஆனால், அவரது கற்பித்தல்களின் சுருக்கம் கட்டிடக்கலையின் நான்கு புத்தகங்கள் என்னும் ஆய்வு நூலில் தரப்பட்டதால் அவருக்குப் பரவலான ஏற்புக் கிடைத்தது.[2] விச்சென்சா நகரம், அதன் 23 கட்டிடங்களுடன் பல்லாடியோவினால் வடிவமைக்கப்பட்டது. வெனெட்டோவின் பல்லேடியன் வில்லாக்கள் ஒருங்கே யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியல் இடப்பட்டுள்ளது. வரலாறுபல்லாடியோ 1508 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பதுவா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற் பெயர் ஆன்ட்ரே டி பியெட்ரோ டெல்லா கொண்டோலா.[3] அவருடைய தந்தையான "டெல்லா கொண்டோலா" என அழைக்கப்பட்ட பியெட்ரோ ஒரு ஆலை உரிமையாளராக இருந்தார். தொடக்கத்திலிருந்தே பல்லாடியோவுக்குக் கட்டிட வேலை அறிமுகமான ஒன்றாகவே இருந்தது. பாதுவாவில், பார்த்தொலொமியோ கவாசா டா சொசானோ என்னும் சிற்பி ஒருவரின் சிற்ப வேலைத் தலத்தில் பல்லாடியோவுக்கு ஒரு கல் வெட்டுபவராக அனுபவம் கிடைத்தது. பார்த்தொலொமியோ கவாசாவே, பதூவாவில் உள்ள சாந்தா மரியா டெய் கார்மினியின் சில சிற்ப வேலைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.[4] கவாசா டா சொசானோவின் கீழ் கடுமையான வேலைச் சூழல் இருந்தது. தனது 16 ஆவது வயதில் பல்லாடியோ விச்சென்சாவுக்குச் சென்றார். அவரது வாழ்க்கையின் பெரும் பகுதியை அவர் அந்த நகரிலேயே கழித்தார். அங்கே, கல்வெட்டுவோர், கட்டிட வேலைக்காரருக்கான முன்னணி வேலைத்தலமாக இருந்த பெடெமுரோ கலையகத்தில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அவர் கற்கட்டுவேலையாட்கள், செங்கல் கட்டுவோரின் குழு ஒன்றில் இணைந்தார். நினைவுச் சின்னங்களையும், அலங்காரச் சிற்பங்களையும் செய்வதற்கான ஒரு கல்வேலைக்காரராக அவர் பணியில் அமர்த்தப்பட்டார். இச்சிற்பங்கள் மைக்கேல் சான்மிச்சேலியின் "மனரிசம்" என்னும் பாணியைப் பின்பற்றியனவாக இருந்தன. பல்லாடியோவின் தொழிலில் ஒரு முக்கியமாக கட்டமாக அமைந்தது, 1538 -1539 காலப்பகுதியில் அவர் மனிதத்துவக் கவிஞரும் அறிஞருமான ஜியான் ஜார்ச் டிரிசினோவின் கீழ் பணிபுரிந்தது ஆகும். டிரிசினோ, கிரிக்கோலி வில்லாவை மீளக்கட்டியபோது அவர் பல்லாடியோவின் வேலையில் ஆர்வம் கொண்டார். டிரிசினோ, விட்ருவியசின் ஆய்வுகளின் செல்வாக்குக்கு உட்பட்டவராக இருந்தார். பிற்காலத்தில் பல்லாடியோவின் கருத்துக்களும், செந்நெறிக் கட்டிடக்கலை குறித்த அவரது மனப்பாங்கும் விட்ருவியசின் செல்வாக்கின் விளைவாகும். விச்சென்சாவின் முன்னணிப் புலமையாளர் என்றவகையில் டிரிசினோ, கலைகள், அறிவியல்கள், செந்நெறி இலக்கியங்கள் ஆகியவற்றை மதிப்பதற்கு இளைஞரான பல்லாடியோவை ஊக்குவித்தார். பல்லாடியோ உரோமில் பண்டையக் கட்டிடக்கலை பற்றிக் கற்பதற்கு டிரிசினோ வாய்ப்பளித்தார்.[5] அத்துடன் அவர் பிற்காலத்தில் அறியப்பட்ட பெயரான "பல்லாடியோ" என்ற பெயரைக் கொடுத்தவரும் டிரிசினோவே. இப்பெயர் அறிவுக்கான கிரேக்கக் கடவுளான பல்லாஸ் ஆதேனேயைக் குறிப்பதுடன், டிரிசினோ எழுதிய நாடகம் ஒன்றின் பாத்திரத்தின் பெயராகவும் உள்ளது. 1550 இல் டிரிசினோ இறந்த பின்னர் பல்லாடியோவுக்கு பார்பரோ சகோதரர்களின் ஆதரவு கிடைத்தது. கார்டினர் டானியேல் பார்பரோ, பல்லாடியோ செந்நெறிக் கட்டிடக்கலை கற்பதை ஊக்குவித்ததுடன், 1554 இல் பல்லாடியோவையும், தனது சகோதரரான மார்க்கன்டோனியோ பார்பரோவையும் உரோம் நகருக்கு அழைத்துச் சென்றார். பெரும் செல்வாக்குள்லவர்களாக் இருந்த பார்பரோக்கள், பல்லாடியோவை வெனிசுக்கு அறிமுகப்படுத்தினர். இறுதியாக அங்கே பல்லாடியோ வெனிசுக் குடியரசின் தலைமைக் கட்டிடக்கலைஞர் ஆனார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia