ஆக்ரா கால்வாய்![]() ஆக்ரா கால்வாய் (Agra Canal) இந்தியாவின் ஒரு முக்கியமான நீர் பாசனத் திட்டமாகும். இக்கால்வாய் தில்லியிலுள்ள ஓக்லா என்னுமிடத்திலிருந்து தொடங்குகிறது, ஓக்லா தடுப்பணையில் தொடங்கும் ஆக்ரா கால்வாய், நிசாமுதீன் பாலத்தின் வழியாக நீரோட்டமாக பாய்கிறது.[1] 1874 ஆம் ஆண்டு இக்கால்வாய் திறக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் குர்கான், மதுரா, ஆக்ரா மற்றும் பாரத்பூர் மாவட்டங்களுக்குச் செல்வதற்கான நீர்வழிப் போக்குவரத்திற்காக இக்கால்வாய் பயன்படுத்தப்பட்டது. 1904 ஆம் ஆண்டு முதல் நீர்வழிப்போக்குவரத்து நிறுத்தப்பட்டு தற்பொழுது நீர்ப்பாசனத்திற்காக மட்டும் பயன்படுகிறது. தற்பொழுது ஆக்ரா கால்வாய் குர்கான் மாவட்டத்தில் செல்வதில்லை ஆனால் முற்காலத்தில் குர்கான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பரிதாபாத் வழியாகச் செல்கிறது. தெற்கு தில்லிக்கு 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புறநகர் பகுதியான ஓக்லா என்னுமிடத்தில் யமுனை நதியிலிருந்து ஆக்ரா கால்வாய் நீரைப் பெறுகிறது. யமுனா நதிக்கு குறுக்காக மணலால் ஆன அடித்தளம் மீது சிற்றணை கட்டப்பட்ட இத்திட்டம் வட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக கருதப்படுகிறது. சுமார் 800 கஜம் நீளம் மற்றும் ஆற்றின் கோடைகால நீர் அளவிற்கு மேலே ஏழு அடி உயரும் கொண்டதாக இச்சிற்றணை அமைந்திருந்தது. ஓக்லாவிலிருந்து இக்கால்வாய் காரி-நாடி மற்றும் யமுனா இடையிலான உயர் நிலத்தில் பாய்ந்து இறுதியாக ஆக்ராவுக்கு சுமார் 20 மைல் கீழே பேன்கங்கா நதியுடன் இணைகிறது. நீர் போக்குவரத்து வழிகள் மூலம் இக்கால்வாய் மதுரா மற்றும் ஆக்ராவுடன் இணைகிறது. ஆக்ரா, உத்தரப் பிரதேசத்திலுள்ள மதுரா, அரியானாவிலுள்ள பரிதாபாத், இராசத்தானிலுள்ள பாரத்பூர் போன்ற பகுதிகளில் சுமார் 1.5 இலட்சம் ஏக்கர் நிலப்பகுதிக்கு இக்கால்வாய் நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia