ஆட்டுச் சண்டை![]() ஆட்டுச் சண்டை, கிடா முட்டு, தகர்ச்சணை்டை அல்லது கிடாகட்டு (Ram fighting) என்பது செம்மறியாடுகளை மோதவிட்டு நடத்தும் ஒரு தமிழர் விளையாட்டாகும்.[1] இது உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. முன்பு தமிழ்நாட்டில், திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் கிடாகட்டு சிறப்பாக நடைபெற்றுவந்தது.[2] இதில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார் உள்ளதால் இந்தியாவில் நடத்த இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் சில இடங்களில் மறைமுகமாக இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆடுகளின் வெற்றியை மையமாக கொண்ட சூதாட்டமும் சில இடங்களில் நடக்கிறது. ஆடுகள்வெள்ளாட்டு வகையறா ஆடுகள் இந்த சண்டை இனத்தில் சேராது. தமிழ்நாட்டில் செம்மறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் நாட்டு செம்மறி ஆடுகளில் கமுதி, கம்பம், எட்டையபுரத்தைச் சேர்ந்த பொட்டுக் கிடா, கச்சைக்கட்டி கருப்புக் கிடா, இராமநாதபுரம் கண் கருப்புக் கிடா போன்ற வகைகளில் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த விளையாட்டுக்கு தடை உள்ளதால் இந்த இன ஆடுகள் அருகிவருகின்றன. ஆட்டை தயார் செய்தல்சண்டைக்காக தயார்படுத்தப் படுத்தும் விதமாக இந்த செம்மறி ஆடுகளை குட்டியாக இருக்கும்போதே வாங்கி வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கும்போது ஆட்டுக் கொம்பின் மூலகுருத்தை விட்டுவிட்டு மேலோட்டைமட்டும் உடைத்து விடுவார்கள். பின் மறுகொம்பு சற்று பெரியதாக வளர்ந்ததும் மீண்டும் உடைத்து எடுப்பார்கள் அதன் கொம்புகளை இவ்வாறு மூன்று முதல் ஐந்து முறை பிடுங்கிவிடுவர்.[3] இதன்பிறகு முளைக்கும் கொம்பு பெரியதாகவும் உறுதியாகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கும். இந்த ஆட்டை ஜல்லிக்கட்டு மாட்டை தயார் செய்வதுபோல உயர் தரமுள்ள உணவாக துவரம் பொட்டு, உளுந்து குருணை, இரும்புச் சோளம், நிலக்கடலை, கொண்டக் கடலை, பச்சரிசி, பாசிப்பயறு, கொள்ளு, கம்பு, பேரீச்சம்பழம், மக்காச்சோளம், கோதுமைத் தவிடு, அகத்திக் கீரை, கடலைப் புண்ணாக்கு, போன்ற பிரத்தியேக உணவுகளை கொடுத்து நல்ல வலிமை உள்ளதாக வளர்ப்பர். சிலர் நாட்டுக்கோழி முட்டை, பசும்பால் போன்றவற்றையும் அளித்து வளர்ப்பர். இவற்றிற்கு நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி போன்றவை அளித்து அவற்றின் உடல் உறுதியாக ஆக்கப்படுகின்றன.[4] போட்டி விதிமுறைகள்போட்டியில் கலந்து கொள்ளும் ஆடுகளை மோதவிடுவர். அதிகபட்சம் 50 முட்டல்கள் நடக்கும்.[3] மோதலில் ஈடுபடும் ஆடு பின்வாங்கி ஓடிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ தோற்றுவிட்டதாக அறிவிக்கப்படும். 50 முட்டலையும் தாண்டி இரண்டும் சமபலத்துடன் களத்தில் நின்றிருந்தால் அவைகளை நடுவர்கள் பிரித்து சற்று தொலைவாக மைதானத்தின் இரு எதிர்முனைகளுக்கு கொண்டுசென்று விடுவித்து மோத விடுவார்கள். அந்த இறுதி ஒற்றை மோதலில் தடுமாறிய கிடா தோற்றதாக அறிவிக்கப்படும்.[5] பழந்தமிழகத்தில் ஆட்டுச் சண்டை![]() பழந்தமிழகத்தில் ஆட்டுச் சண்டையானது தகர்ச்சணை்டை என அழைக்கப்பட்டது. தகர் என்பது செம்மறியாடு. செம்மறி ஆட்டுக் கடாக்கள் இரண்டினை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் விளையாடாக இது இருந்தது. விலங்குகளில் ஆணைக் குறிக்க வழங்கப்படும் மரபுச் சொற்களில் ஒன்று தகர் என்னும் சொல்.[6] இவற்றில் ஆண்-ஆட்டைக் குறிக்கும் செற்களில் ஒன்று தகர்.[7] போரிடும்போது தகர் பின்வாங்கிப் பின்வாங்கித் தாக்கும்.[8] தகரின் மலையிலுள்ள கொம்புகள் வேல் நுனி போலக் கூர்மையாக இருக்கும்.[9] அவை முறுக்கிக்கொண்டிருக்கும்.[10] மலைச்சாரல்களில் வாழும் இவற்றின் ஒர் இனம் வருடை.[11][12] வருடையாட்டுக் குட்டிகள் யாழிசைக்கு ஏற்ப வயிரியர் மகளிர் துள்ளிக் குதித்து ஆட்டம் காட்டுவது போலத் துள்ளி விளையாடும்.[13] துருவை என்னும் வெண்ணிறச் செம்மறி ஆடுகளோடு சேர்ந்து வருடையாடு மேய்வதும் உண்டு.[14] ஏழகத்தகர் என்னும் அதன் இனம் நீர்ப்பெயற்று என்னும் கீழைக்கடற்கரைத் துறைமுகப் பட்டினத்தில் அக்காலத்தில் எகினம் [15] போலச் சுழன்று விளையாடியது.[16] இந்த இனம் காவிரிப்பூம்பட்டினம் கீழைக் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் ஞமலி என்னும் வேட்டைநாய்களோடு சேர்ந்து இணக்கமாகத் தகர் விளையாடியது.[17] போரிடப் பயன்படுத்தப்படும் தகரை மேழகத்தகர் என்பர்.[18] காவிரிப்பூம்பட்டினத்தின் உறைக்கிணற்றுப் புறஞ்சேரியில் மேழகத்தகர் விளையாட்டும், சிவல் விளையாட்டும் [19] நடந்தன.[20] அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia