இண்டன்பர்க் ரிசர்ச்எல்எல்சி (Hindenburg Research) என்பது ஒரு நிதி ஆய்வு நிறுவனமாகும். இது 2017ஆம் ஆண்டில் நாதன் ஆண்டர்சனால் நிறுவப்பட்டது. [2] இது நியூயார்க் நகரத்தை தளமாக கொண்டு இயக்குகிறது. 1937ஆம் ஆண்டு ஏற்பட்ட இண்டன்பர்க் பேரழிவை நினைவூட்டுவதாக இந்நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டது. இந்த பேரழிவு மனிதனால் உருவாக்கப்பட்ட தவிர்க்கக்கூடிய பேரழிவாக வகைப்படுத்தப்பட்டது.[3] இந்த நிறுவனம் பெரு நிறுவனங்களில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்வதை தனது பணிகளில் ஒன்றாக கொண்டிருக்கிறது. ஆய்வுக்குப் பிறகு இதன் வலைத்தளம் வழியாக பெருநிறுவனங்களின் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் குறித்த அறிக்கைகளை வெளியிடுகிது.[4]அதானி குழுமம், நிகோலா,[5] குளோவர் சுகாதாரம்,[6] கண்டி, [7] லார்ட்ஸ்டவுன் மோட்டார்ஸ் ஆகியவை குறித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.[8] இதன் அறிக்கைகள் "மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன" என்பதற்கான உறுதியைக் கொண்டுள்ளன.[9]
செயல்பாடுகள்
இண்டன்பர்க் ரிசர்ச் ஒரு பெருநிறுவனத்தை எடுத்துக் கொண்டு அதன் பொதுப் பதிவுகள், நிறுவன ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தல் மற்றும் அதன் ஊழியர்களுடன் பேசுதல் போன்றவற்றை ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் செய்கிறது. பின்னர் அந்த நிறுவனத்தைப் பற்றிய விசாரணை அறிக்கையைத் தயாரிக்கிறது. இந்த அறிக்கை இண்டன்பர்க்கால் தன் குறிப்பிட்ட கூட்டாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இறுதியில் அறிக்கை வெளியிடப்படுகிறது. பங்குகளின் விலை குறையும் என்று கணித்து, அதை குறித்த நேரத்தில் தரகர் மூலமாக வாங்கி விற்று லாபம் ஈட்டும் ஷார்ட் செல்லிங் (பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்தால் முதலீட்டாளர் லாபம் பெறும் வகையிலான ஒரு முதலீட்டு முறை.) எனப்படும் வணிகத்தில் இது நிபுணத்துவம் கொண்டது. அதனால் இண்டன்பர்க் இலாபம் ஈட்டுகிறது. [10]
குறிப்பிடத்தக்க ஆய்வுகள்
நிகோலா அறிக்கை
2020 செப்டம்பரில், இண்டன்பர்க் ரிசர்ச் நிகோலா பெருநிறுவனம் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அந்நிறுவனம் "டசன் கணக்கான பொய்களால் கட்டப்பட்ட ஒரு சிக்கலான மோசடிகளைக் கொண்டது" என்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது. மேலும் அதன் நிறுவனரான திரெவர் மில்டனே அதன் பெரும்பாலான மோசடி நடவடிக்கைகளுக்கும் பொறுப்பு என்று குற்றம்சாட்டியது. [2] அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, நிகோலாவின் பங்கு விலை 40% குறைந்தது. [5] இதன் பிறகு செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) நிறுவனத்தின் மீதான விசாரணை தொடங்கியது. [11] மில்டன் முதலில் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், [11] பின்னர் அவர் தனது செயல் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இறுதியில் அவர் கடனீட்டுப் பத்திர மோசடியில் குற்றவாளி என கண்டறியப்பட்டார். [12]
குளோவர் எல்த் ரிப்போர்ட் அண்டு சமத் பலியாபிட்டிய
இண்டன்பர்க் 2021 பெப்ரவரியில் மருத்துவ நன்மைத் திட்டமான கிளோவர் எல்த் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. அந்த நிறுவனம் நீதித் துறையின் விசாரணையில் இருப்பதைப் பற்றி முதலீட்டாளர்களுக்குத் தெரிவிகாமல் அதைப் புறக்கணித்ததாகக் குற்றம்சாட்டியது. தொழில்முனைவரான சமத் பலிகபிட்டிய முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தினார் என்று அறிக்கை குற்றம்சாட்டியது.[6]
அதானி குழும அறிக்கை
2023 சனவரியில், இண்டன்பர்க் இந்தியாவின் அதானி குழுமத்தின் முறைகேடுகளை வெளியிட்டது. அதானி குழுமம் பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அறிக்கை கூறியது. இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் "பல தசாப்தங்களாக வெட்கக்கேடான பங்கு முறைகேடு மற்றும் கணக்கியல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது" என்றது. [13] அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையில் சரிவை சந்தித்தன. [14][15][16] தங்களது இந்த அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று இண்டன்பர்க் அழைப்பு விடுத்ததாக தி கார்டியன் சுட்டிக்காட்டியது. [17][18]
மற்ற ஆய்வுகள்
மேலும் இண்டன்பர்க் நிறுவனமானது இணைய சூதாட்ட நிறுவனமான டிராப்ட்கிங், [19]புவிவெப்ப மின் நிலைய நிறுவனமான ஓர்மட் டெக்னாலஜிஸ், மின்சார மகிழுந்து நிறுவனமான முல்லன் டெக்னாலஜிஸ், [20] எஸ்ஓஎஸ் என்ற சீன கட்டச்சங்கிலி மற்றும் ஆல்ட்காயின் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் பற்றிய அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. [21]