இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு![]() இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு (Unknown years of Jesus) என்பது, இயேசுவின் இளமைப் பருவத்திற்கும் (12 வயது) அவர் தமது 30ஆம் வயதில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கிய காலத்திற்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் அவர் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்குவதற்கான முயற்சியைக் குறிக்கும். கிறித்தவர்களின் புனித நூலாகிய விவிலியத்தில் காணப்படாத பல செய்திகளை உள்ளடக்கி, இயேசுவின் “மறைந்த வாழ்வு” பல விதங்களில் பல நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புனைவுகளை மைய நீரோட்ட கிறித்தவ சபைகள் உண்மையென ஏற்பதில்லை.[1][2] இயேசு பற்றி முக்கியமான இருவகைக் கற்பனைக் கதைகள்புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களிலும் காணப்படாத செய்திகளைக் கூறுவதற்காக எழுந்த நூல்கள் பண்டைக் காலத்திலிருந்தே தோன்றியுள்ளன. இயேசுவைப் பற்றிக் குறிப்பாக இரண்டு காலகட்டங்கள் ”மர்மமாக” உள்ளன. அவை: 1) இயேசுவின் இளமைப் பருவம்பற்றி நற்செய்திச் செய்திகள் பல உள்ளன. ஆனால் அவர் பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் காணாமற்போய், பின்னர் பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களோடு நாசரேத்துக்குப் போய் அங்கே வாழ்ந்துவந்தார் என்று கூறுவதோடு அந்த இளமைப் பருவச் செய்திகள் நின்றுவிடுகின்றன. அதன் பிறகு 18 ஆண்டுகள் கழிந்து, இயேசுவுக்கு 30 வயது ஆனபோது அவர் திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்றும் தமது பணி வாழ்வைத் தொடங்கினார் என்றும் நற்செய்தி நூல்கள் கூறுகின்றன. அப்படி என்றால், 12 வயதிலிருந்து 30 வயது வரை இயேசு என்ன செய்தார்? தம் பெற்றோரோடு வாழ்ந்து வந்தாரா? என்ன தொழில் செய்தார்? வேறு இடங்களுக்கோ நாடுகளுக்கோ போனாரா? - இக்கேள்விகள் ஒரு தொகுப்பு. இவ்வகையான கேள்விகளுக்குப் பலரும் கற்பனைப் புனைவுகளான பதில்களை வரலாற்றில் கொடுத்துள்ளனர். 2) இன்னொரு கேள்வித் தொகுப்பும் உள்ளது. அதாவது இயேசு உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா? அவர் இறந்திருந்தால் அதன் பின் உயிர்பெற்றெழுந்தாரா? வேறு யாராவது இயேசுவின் இடத்தில் சிலுவையில் இறந்திருந்தால் இயேசுவுக்கு என்ன ஆயிற்று? அதன் பிறகு அவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? என்ன செய்தார்? - இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளும் உள்ளன. இவற்றிற்கும் கற்பனைப் புனைவுகளான பதில்கள் பல காலமாகவே தரப்பட்டுள்ளன. “இயேசுவின் மறைந்த வாழ்வு” என்று சொல்லும்போது மேலே கூறப்பட்ட முதல் தொகுதிக் கேள்விகளுக்கு என்ன பதில்கள் தரப்பட்டுள்ளன என்று ஆய்வதுதான் நோக்கமே ஒழிய, இரண்டாம் வகைத் தொகுதி சார்ந்த கேள்விகள் அதில் உள்ளடங்கா.[2][3][4] பிற்காலப் புனைவுகள்இயேசு தம் இளமைக் காலத்தில் பிரித்தானியாவுக்குச் சென்றார் என்றொரு புனைவு ”ஆர்த்தர் மன்னன் புனைவுகளில்” (Arthurian legends) உண்டு. இப்புனைவுகள் ஐரோப்பிய நடுக்காலத்தைச் சேர்ந்தவை.[5] கி.பி. 19-20 நூற்றாண்டுகளில் வேறுசில புனைவுகள் எழுந்தன. அதாவது இயேசு தமது 12ஆம் வயதிற்கும் 30ஆம் வயதிற்கும் இடையே இந்தியாவுக்குப் பயணமாகச் சென்றார் என்றொரு புனைவு; அல்லது யூதேயா பாலைநிலத்தில் “எஸ்ஸேனியர்கள்” (Essenes) என்ற துறவியர் கூட்டத்தில் சேர்ந்து பயின்றார் என்று மற்றொரு புனைவு.[4][6] இன்று விவிலிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுள் மிகப் பெரும்பான்மையோர் மேற்கூறிய புனைவுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது என்று அப்புனைவுகளை ஒதுக்குகின்றனர். இயேசு தம் 12 வயதிலிருந்து 30 வயது வரை என்ன செய்தார் என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை என்பது மட்டுமே அவர்களுடைய பதிலாக உள்ளது.[4][7][8][9] இயேசு சிலுவையில் இறக்கவில்லை என்றும், அவருக்குப் பதிலாக வேறொருவரே இறந்தார் என்றும், அந்நிகழ்ச்சிக்குப் பிறகு இயேசு இன்னும் பல ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார் என்றும் அமைந்த புனைவுளையும் விவிலிய அறிஞர்கள் ஆதாரமற்றவை என்று தள்ளிவிடுகிறார்கள்.[10] இத்தகைய கதைகள் எல்லாம் வெறும் புனைவுகளே என்றும், அவற்றிற்கு யாதொரு வரலாற்று அடிப்படையும் இல்லை என்றும் அவர்கள் எண்பிக்கிறார்கள்.[10][11][12] இயேசுவின் 18 ஆண்டுகள் மறைந்த வாழ்வில் நடந்தது என்ன?![]() இயேசுவின் குழந்தைப் பருவம்குறித்து விரிவான செய்திகளைத் தருகின்ற நற்செய்தி நூல்கள், அவருக்கு 12 வயது நிரம்பியது வரையும்தாம் தகவல்கள் தருகின்றன. அதன் பிறகு அவருக்கு 30 வயது ஆகும் வரையிலான 18 ஆண்டுகள்பற்றி எந்தத் தகவலும் ஆங்கு இல்லை.[4][7][13] இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனதும் என்ன நடந்தது என்பதை மிகச் சுருக்கமாக லூக்கா நற்செய்தி எடுத்துக் கூறுகிறது:
கிறித்தவ மரபுப்படி, இயேசு தம் பெற்றோரோடு கலிலேயாவில் வாழ்ந்துவந்தார்.[14] அந்தக் காலகட்டத்தில் இயேசு குறித்தான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என ீவ யூத சகள்டங்குகள்யூத சமயத்தில் சிறுவர்கள் தம் சிறுபருவத்தைத் தாண்டி, இளமைப் பருவத்தை எட்டுவது 12 வயதைத் தாண்டும்போது ஆகும். அதிலிருந்து அவர்கள் யூத சமயச் சடங்குகளை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள். இதற்கான சடங்கு “பார் மிட்ஸ்வா” (bar mitzvah) என்று அழைக்கப்படுகிறது. அதுபோலவே 30 வயது ஆகும்போது ஓர் ஆண், குருத்துவப் பணி ஆற்றும் வயதை அடைகிறார். இயேசுவின் வாழ்வில் இந்த இரு ஆண்டுகளும் (12, 30) குறிக்கப்படுவது அவருடைய குருத்துவப் பணியைக் காட்டுவதற்காக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.[2] இவ்வாறு இந்த இரு எண்களும் சிறப்புப் பொருள் கொண்டனவாகலாம்.[15] இயேசு தச்சுத் தொழில் செய்தாரா?மாற்கு நற்செய்தியில் வரும் ஒரு சிறு பகுதி இயேசுவின் தொழில்பற்றி ஒரு குறிப்பைத் தருகிறது. இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்து சென்று அங்கு தொழுகைக் கூடத்தில் கற்பித்தார். அப்போது மக்கள் அவருடைய பேச்சுத் திறனைக் கண்டு வியப்புற்று,
என்று கூறினார்கள் (மாற்கு 6:2-3)[16] இயேசு தமது பணிக்காலத்தின் தொடக்கத்தில் தச்சுத்தொழில் செய்திருக்கலாம் என்றும் அத்தொழிலில் அவருக்குப் போதிய அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்றும் இதிலிருந்து தெரிகிறது.[16] மேலும் மத்தேயு நற்செய்தி 13:55இல் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவருடைய ஞானத்தையும் பேச்சுத்திறனையும் கண்டு வியந்து கூறியது கீழ்வருமாறு உள்ளது:
என்று கேட்டார்கள்.[17][18] இதிலிருந்து, தச்சுத் தொழில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பின் தொழிலாக இருந்தது என்றும், இயேசுவும் அத்தொழிலை நன்கு அறிந்தவரே என்றும் ஊகிக்க முடிகிறது. இயேசுவின் மறைந்த வாழ்வுக் காலத்தில் கலிலேயாவும் யூதேயாவும்நாசரேத்து சிறிய ஊராக இருந்தாலும் அதை அடுத்து இருந்த “செப்போரிசு” (Sepphoris) என்ற நகரத்தை மீளவும் கட்டி எழுப்பும் பணியில் பேரளவிலான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்று கூறுகின்ற வரலாற்று ஏடுகள் உள்ளன. எனவே, இயேசுவின் இளமைப் பருவத்திலும் அவர் 20-30 வயதினாராக இருந்தபோதும் கட்டடங்களுக்குத் தேவையான மர வேலைகளில் ஈடுபட்டிருந்ததற்கு அடிப்படை உள்ளது என்று பேட்டி என்னும் அறிஞரும் பிற அறிஞர்களும் கூறுகின்றனர்.[19] எஸ்ஸேனியர் குழுவினரோடு இயேசு பயின்றாரா?1940-50களில் பாலத்தீனத்தின் சாக்கடல் அருகே சில குகைகளில் பண்டைக்கால ஏட்டுச் சுருள்களின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. தோல், பப்பைரசு போன்ற ஊடகங்களில் எழுதப்பட்ட அந்த ஏட்டுப் பகுதிகள் “சாக்கடல் சுருளேடுகள்” (Dead Sea Scrolls) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏடுகளில் சில, இயேசு வாழ்ந்த காலத்தைச் சார்ந்த எஸ்ஸேனியர்கள் என்ற யூத குழுவினரின் படைப்பாக்கமாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இக்குழுவினரிடம் இயேசு ஒரு வேளை கல்வி பயின்றிருக்கக்கூடும் என்றொரு கருத்து உள்ளது. எட்மண்ட் வில்சன் என்பவர் தாம் எழுதிய ஒரு புதினத்தில் இக்கருத்தை முதன்முறையாக 1955இல் வெளியிட்டார்.[20] வேறுசில அறிஞரும் இதே கருத்தை வெளியிட்டனர்.[21] பரிசேயர் குழுவோடு இயேசு பயின்றாரா?இன்னும் சில ஆசிரியர்கள் இயேசு அக்கால யூதேயாவில் பெரும்பான்மையினராக வாழ்ந்த பரிசேயர் குழுவினரிடம் கல்வியறிவு பெற்றிருக்கலாம் என்று நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் தருகின்ற விளக்கம் என்னவென்றால், ஏறக்குறைய இயேசுவுக்கு சமகாலத்து வரலாற்றாசிரியரான பிளாவியுஸ் ஜோசேஃபஸ் என்பவர் பரிசேயர், சதுசேயர், எஸ்ஸேனியர் ஆகிய மூன்று குழுக்களைச் சார்ந்தவர்களிடமும் கல்வி பயின்றார். இயேசு பரிசேயர்களின் இயக்கத்தை நன்கு அறிந்திருந்தார். தம் பணிக்காலத்தில் பரிசேயரோடு பல முறை விவாதங்களில் ஈடுபட்டார். எனவே அவர் கல்வி பெற்ற நாள்களில் பரிசேயரைப் பற்றி அவர் பலவற்றைத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுவர்.[22] இயேசுவின் மறைந்த வாழ்வை விளக்குகின்ற பிற மூலங்கள்கிறித்தவ திருச்சபைகள் அதிகாரப்பூர்வமான நற்செய்தி நூல்களாக ஏற்பவை நான்கு மட்டுமே. அவை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவை ஆகும். இவை தவிர கி.பி. முதல் நூற்றாண்டுகளில் இயேசுவின் போதனை மற்றும் வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறுகின்ற வேறுசில நுல்களும் எழுந்தன. அவற்றைக் கிறித்தவ திருச்சபைகள் அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்பதில்லை. இவை “புற நூல்கள்” (apocrypha) என்று அழைக்கப்படுகின்றன. ஏற்கப்பட்ட நான்கு நற்செய்திகளிலும் இயேசு 12 வயதுமுதல் 30ஆம் வயதுவரை என்ன செய்தார் என்பது பதிவுசெய்யப்படாததால், அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் “புற நூல்கள்” பல புனைவுகளை உருவாக்கின.[23] இளமைப் பருவத்தில் இயேசு பிரித்தானியாவுக்குச் சென்றாரா?இயேசு தம் இளமைப் பருவத்தில் பிரித்தானியாவுக்குச் சென்றார் என்று சில புனைவுகள் எழுந்தன. அவை தரும் தகவல்கள் தமக்குள் வேறுபடுகின்றன. ஒரு கதை இயேசு பிரித்தானிய சென்றதை நற்செய்திகளில் வருகின்ற அரிமத்தியா யோசேப்பு என்பவரோடு தொடர்பு படுத்துகின்றது.இயேசு சிலுவையில் இறந்ததும் அவருடைய உடலைப் பிலாத்துவின் அனுமதியோடு ஒரு கல்லறையில் அடக்கம் செய்தவர்தான் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர். இத்தகவல் மத்தேயு 27:57-61, மாற்கு 15:42-47, லூக்கா 23:30-35, யோவான் 19:38-42 ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இந்த அரிமத்தியா யோசேப்பு என்பவர், இயேசு சிலுவையில் தொங்கியபோது சிந்திய இரத்தத்தை ஒரு கிண்ணத்தில் பிடித்தாராம். அந்தக் கிண்ணத்தை ஒருசிலரிடம் கொடுத்துப் பிரித்தானியாவுக்கு அனுப்பிவைத்தாராம்.[5] இவ்வாறு பிரித்தானியா சென்ற இக்கிண்ணம் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியாவில் எழுந்த ஆர்த்தர் மன்னன் புனை கதைகளோடு (Arthurian cycle) தொடர்புபடுத்தப்பட்டது.[5][5] இயேசு தம் இளமைப் பருவத்தில் பிரித்தானியாவுக்குச் சென்றதாகக் கூறும் இப்புனை கதைப்படி, இயேசு மெண்டிப் பகுதியில் ப்ரிடி என்னும் இடத்தில் வாழ்ந்தாராம். அன்கு கிளாஸ்டன்பரி என்னும் இடத்தில் ஒரு குடிசை கட்டி அங்குத் தங்கியிருந்தாரம்.[24] இக்கதையை உள்ளடக்கி, வில்லியம் பிளேக் என்ற 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞர் ஒரு கவிதை எழுதினார். இக்கதையின் மற்றொரு பாடம் இவ்வாறு உள்ளது: யோசேப்பு என்ற பெயருடைய ஒரு தகர வியாபாரி இருந்தாராம். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பின் மரணத்திற்குப் பிறகு அந்த யோசேப்பு என்பவர் சிறுவன் இயேசுவைத் தம் பாதுகாப்பில் வைத்திருந்தாராம்.[25] இவ்வாறு இயேசுவின் பிரித்தானியப் பயணம் புனை கதையில் உறுதி பெற்றது.[26] வேறு சிலர், இயேசு பிரித்தானியாவுக்குச் சென்று அங்கு, ”த்ரூயிட்” (Druids) என்ற துறவியர் குழுவிடம் கல்வி பயின்றார் என்று புனை கதைகள் எழுதினார்கள்.[27] சிலுவையில் அறையப்படுமுன் இயேசு இந்தியா சென்றார் என்னும் புனைவுலூயி ஜாக்கோலியோ, 1869லூயி ஜாக்கோலியோ என்பவர் (Jacolliot) 1869இல் இயேசுவின் வாழ்க்கை பற்றி La Bible dans l'Inde, Vie de Iezeus Christna என்றொரு நூலைப் பிரஞ்சு மொழியில் எழுதினார்.[28] அந்நூலில் அவர் இயேசு இந்தியாவுக்குச் சென்றார் என்று வெளிப்படையாகக் கூறாவிடினும், இயேசு இந்தியாவுக்குச் சென்றிருக்கக்கூடும் என்ற தம் ஊகத்தைத் தெரிவித்தார்.[29] ஜாக்கோலியோ இயேசுவின் வரலாற்று நிகழ்ச்சிகளையும் கிருஷ்ணரின் வரலாற்று நிகழ்ச்சிகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த இரு வரலாறுகளிலும் வருகின்ற நிகழ்ச்சிகளுக்கிடையே மிகப் பெரும் ஒற்றுமை உள்ளதை அவர் கண்டார். அதிலிருந்து ஜாக்கோலியோ கீழ்வரும் முடிவுக்கு வந்தார்: அதாவது, கிருஷ்ணரின் வராலாறு என்பது ஒரு புனைகதை. அந்தப் புனைகதையையின் அடிப்படையில் இயேசு பற்றிய புனைகதையும் உருவானது. மேற்கூறிய கருத்து ஏற்கத்தகாதது என்று அறிஞர் முடிவுசெய்கின்றனர். முதன்முதலில் “கிறிஸ்து” என்ற பெயர் “கிறிஸ்த்ணா” (Christna) என்ற பெயரின் திரிபு என்று ஜாக்கோலியோ கூறுவது தவறு என்றும், அவர் Krishna என்ற பெயரைத் தம் விருப்பம்போல் மாற்றியுள்ளார் என்றும் தெரிகிறது. மேலும் அவர், .“கிறிஸ்த்ணாவை” அவருடைய சீடர்கள் “இயேசேயுஸ்” (Jezeus) என்று அழைத்ததாகவும் அதற்கு “தூய்மையே உருவானவர்” என்று பொருள் என்றும் கூறுகிறார்.[29] இதை மறுத்து, மாக்ஸ் முல்லர் என்னும் சமசுக்கிருத அறிஞர் “இயேசேயுஸ்” என்ற சொல் சமசுக்கிருத மொழியிலேயே இல்லை என்றும், அச்சொல்லை ஜாக்கோலியோ தம் சொந்த விருப்பப்படி உருவாக்கிக்கொண்டார் என்றும் நிரூபித்துள்ளார்.[30] மேலும், கிருஷ்ணர் வாழ்ந்ததாகக் கூறப்படும் காலமும், இயேசுவின் காலமும் ஒன்றன்று. நிக்கோலாசு நோட்டோவிச், 1887![]() நிக்கோலாசு நோட்டோவிச் (Nicolas Notovich) என்பவர் உருசிய நாட்டவர். 1887இல் அவர் போர்ச் செய்திகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் பணியைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக் பகுதில் அமைந்துள்ள ஹேமிஸ் (Hemis Monastery) என்ற திபெத்திய-புத்த மடத்தில் “மனிதருள் மாமனிதர்:புனித இஸ்ஸாவின் வரலாறு” (Life of Saint Issa, Best of the Sons of Men) என்ற பழைய ஏடு ஒன்றினைக் கண்டுபிடித்ததாகவும் அதில் இயேசுவின் வாழ்க்கை பற்றி அரிய செய்திகள் அடங்கியிருந்ததாகவும் உலகுக்கு அறிவித்தார். “ஈசா” என்பது அரபி மொழியில் இயேசுவைக் குறிக்கும் சொல்.[31][32] நோட்டோவிச் தாம் லடாக் பகுதியின் திபெத்திய-புத்த மடத்தில் கண்டுபிடித்ததாகக் கூறிய பழைய ஏட்டின் மொழிபெயர்ப்பு என்று கூறி பிரஞ்சு மொழியில் La vie inconnue de Jesus Christ (ஆங்கிலம்: Unknown Life of Jesus Christ) என்ற நூலை 1894இல் வெளியிட்டு, அதில் அவர் அந்த ஏட்டை எவ்வாறு கண்டிபிடித்தார் என்பதையும் ”உண்மையான வரலாற்று நிகழ்ச்சியாக” எடுத்துரைத்தார்.[6][32] நோட்டோவிச் வெளியிட்ட நூலும் அதில் அவர் தாமாகவே திபெத்திய-புத்த மடத்தில் கண்டுடித்ததாகக் கூறிய “பழைய ஏடு” பற்றிய செய்தியும் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. அந்நூலை வாசித்த இந்தியவியல் அறிஞரான மாக்ஸ் முல்லர் உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதாவது, முல்லர் கருத்துப்படி, ஒன்றில் லடாக் புத்த மடத்துத் துறவிகள் நோட்டோவிச்சை ஏமாற்றியிருக்க வேண்டும் அல்லது நோட்டோவிச் தாமே இயேசு பற்றி ஒரு கதை புனைந்திருக்க வேண்டும்[33][34] நோட்டோவிச் நுலின் சுருக்கம் இது: இயேசுவின் வரலாறு இசுரயேல் மக்கள் எகிப்துக்குச் சென்றதிலிருந்து தொடங்குகிறது. அவர்களை மோசே எகிப்திய அடிமைத் தளையினின்று விடுவித்தார். பின்னர் உரோமையர் அவர்கள்மேல் வெற்றிகொண்டு அவர்களுடைய நிலத்தை ஆக்கிரமித்தார்கள். அக்கால கட்டத்தில் இயேசு பிறந்தார். 12 வயதுவரை தம் பெற்றோரோடு வாழ்ந்த இயேசு, 13 வயதில் ஒரு வர்த்தகக் குழுவினரோடு சேர்ந்து கவுதம புத்தரின் போதனைகளை அறிந்துகொள்ளும் பொருட்டு இந்தியாவின் சிந்து பகுதிக்கு வந்தார். முதலில் அவர் சமணத் துறவிகளைச் சந்தித்தார். பின்னர் அவர் பாளி மொழி கற்று, பவுத்த துறவிகளோடு 6 ஆண்டுகள் பயின்றார். தொடர்ந்து 6 ஆண்டுகள் இயேசு இந்தியாவின் பல புண்ணியத் தலங்களைச் சந்தித்து அங்கு பயிற்றுவித்தார். தமது 29ஆம் வயதில் அவர் தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று அங்கு போதிக்கலானார். பின்னர் அவர் எருசலேம் நகருக்குச் சென்றார். ஆனால் உரோமை ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து, மற்றும் யூத மதத்தலைவர்கள் இயேசுவைக் கலகக்காரராகப் பார்த்தார்கள். அவர் தம்மைக் “கடவுளின் மகன்” என்று கூறியதாகக் காட்டி, அவர் இறைநிந்தை செய்ததாகக் குற்றம் சாட்டி, அவரைக் கைதுசெய்து அவரைக் கொன்றுபோட்டார்கள். அவரைப் பின்பற்றியவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவருடைய சீடர்கள் அவருடைய போதனைகளை எல்லா இடங்களுக்கும் சென்று பரப்பினார்கள். நோட்டோவிச், இயேசு பற்றிய மேற்கூறிய செய்திகளை லடாக் பகுதி புத்த மடத்தில் கண்டுபிடித்த ஏட்டிலிருந்தும் புத்த துறவிகளிடமிருந்தும் பெற்றதாகக் கூறியது உண்மைதானா என்று அறிய பல ஆய்வாளர்கள் முனைந்தனர். அவர்களுள் ஒருவர் மாக்ஸ் முல்லர். அவர் லடாக்கின் ஹேமிஸ் புத்த மடத்தின் தலைவருக்குக் கடிதம் எழுதி, நோட்டோவிச் பற்றியும் அவர் கண்டெடுத்ததாகக் கூறிய ஏடுபற்றியும் விசாரித்தார். அதற்கு மடத் தலைவர், தாம் பொறுப்பேற்று பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்றும், அக்கால கட்டத்தில் வெளிநாட்டைச் சார்ந்த எவரும் தங்கள் மடத்திற்கு வந்ததில்லை என்றும், நோட்டோவிச் குறிப்பிட்ட “இயேசு பற்றிய பழைய ஏடு” தம் மடத்தில் கிடையாது என்றும் பதில் எழுதினார்.[35] ஆர்ச்சிபால்டு டக்ளஸ் (J. Archibald Douglas) என்ற மற்றொரு ஆய்வாளரும் ஹேமிஸ் இதுபற்றிய ஆய்வில் இறங்கினார். அவர். நேரடியா அந்த மடத்திற்கே சென்று தலைமைத் துறவியைச் சந்தித்து உரையாடியானார். அப்போதும் அத்துறவி மாக்ஸ் முல்லருக்குக் கடிதத்தில் எழுதியதையே டக்ளசிடமும் எடுத்துக் கூறினார். அதாவது நோட்டோவிச் ஒருபோதும் லடாக் புத்தமடத்திற்குச் சென்றதில்லை. நோட்டோவிச் சொன்ன அனைத்துமே கட்டுக்கதை என்பது தெளிவாயிற்று.[35] இந்தியவியல் அறிஞர் லியோப்போல்டு ஃபோன் ஷ்ரேடர் (Leopold von Schroeder) என்பவர் நோட்டோவிச் கூறியது “மாபெரும் புளுகு” (big fat lie) என்று வர்ணித்தார்.[36] வில்கெல்ம் ஷ்னேமெல்கெர் (Wilhelm Schneemelcher என்பவரும் அவ்வாறே கூறியுள்ளார்.[6] நோட்டோவிச் வேண்டுமெனறே கதை எடுத்துக்கட்டி, தம் நூலில் உண்மைபோல் வெளியிட்டதை அறிஞர்கள் வெளிச்சமிட்டுக் காட்டிய பிறகும், அவர் முதலில் தாம் சொன்னது உண்மையே என்று கூறினார்.[37] ஆனால் வரலாற்றாளர்கள் நோட்டோவிச்சின் கதை கட்டுக்கதையே என்று காட்டிய சிறிது காலத்துக்குப் பின்பு நோட்டோவிச் தம் நூலுக்கான ஆதாரங்கள் போலி என்று ஒத்துக்கொண்டார்.[36] “லடாக் புத்த மடத்தில் இயேசு பற்றிய ஆவணத்தை நோட்டோவிச் கண்டெடுத்தார் என்பது முற்றிலும் பொய் என்றும், அத்தகைய ஆவணம் ஒன்று அங்கு கிடையாது என்றும் எல்லா அறிஞர்களும் ஒத்துக்கொள்கின்றனர். தமது போலிக் கதையை வெளியிட்டு அவர் பெரும் செல்வம் சேர்த்தார். பிரபலியமும் அடைந்தார்” என்று பார்ட் ஏர்மான் (Bart D. Ehrman) என்ற அறிஞர் கூறுகிறார்.[38] லேவி எச். டவுலிங், 1908இவர் 1908இல் “இயேசு கிறிஸ்து பற்றிய கும்ப கால நற்செய்தி” (Aquarian Gospel of Jesus the Christ என்றொரு நூலை வெளியிட்டார். அந்நூலில் டவுலிங்குக்கு வானவெளியிலிருந்து வழங்கப்பட்ட ஏடுகளில் இயேசு பற்றி எழுதப்பட்டிருந்தவை அடங்கியிருந்தன என்று அவர் கூறினார். குறிப்பாக, இயேசு தம் 12 வயதிலிருந்து 30 வயது வரை எந்தெந்த இடங்களுக்குப் பயணம் செய்து, கல்வி பயின்று, போதித்தார் என்பது தமக்கு வெளிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். மேலும் இயேசு தம் இளமைப் பருவத்தில் இந்தியா, திபெத்து, பெர்சியா, அசீரியா, கிரீசு, எகிப்து ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று அங்கு கல்வியறிவு பெற்றார் என்றும் அங்கிருந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் என்றும் டவுலிங் தம் நூலில் கூறுகிறார்.[39] டவுலிங் எழுதிய நூலில் உள்ள சில கருத்துகளை எடுத்து, அவற்றை அகமதியா கருத்துகளோடும் பிற சமய இயக்கங்களின் கருத்துகளோடும் இணைத்து ஹோல்கர் கெர்ஸ்டென் (Holger Kersten) என்பவர் இயேசு பற்றிப் புதியதொரு பார்வையை முன்வைத்தார்.[11] மேற்கூறிய புனைவுகளை விவிலிய அறிஞர்கள் ஏற்பதில்லைஇயேசு தம் இளமைப் பருவத்தில் இந்தியா, திபெத்து போன்ற தூர இடங்களுக்குச் சென்று கல்வி பயின்றார் என்றும் அங்கு போதித்தார் என்றும் கூறுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது என்று விவிலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே, விவிலிய அறிஞர்கள், மேலே கூறிய ஜாக்கோலியோ, நோட்டோவிச், டவுலிங் போன்றோர் இயேசு இந்தியாவுக்குச் சென்றார் அல்லது வேறு நாடுகளுக்குப் போனார் என்று கூறுவது வெறும் கற்பனையே என்ற முடிவுக்கு வருகின்றனர். இதற்கு எடுத்துகாட்டாக, கீழ்வரும் ஆசிரியர்களைக் குறிப்பிடலாம்: இராபர்ட் ஃபான் ஃபூர்ஸ்ட்[8], மாற்கஸ் போர்க்[9] ஜான் டோமினிக் க்ரோசான் [7], லெஸ்லி ஹூல்டென். [40], பவுலா ஃப்ரெட்ரிக்சென். [41] சிலுவையில் உயிர்துறக்காமல் இயேசு செலவிட்ட ஆண்டுகள்பற்றிய புனைவுகள்சில நூலாசிரியர்கள் இயேசுவின் வரலாற்றைக் கூறும்போது, இயேசு சிலுவையில் அறையப்பட்டது, உயிர்துறந்தது போன்ற பொருள்கள் பற்றியும், அவர் சிலுவையில் உயிர்துறக்கவில்லை என்றால் பின்னர் வேறு எங்காவது சென்றாரா என்பது பற்றியும் பல புனைகதைகளை உருவாக்கியுள்ளனர். சிலர் இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்படவில்லை என்கின்றனர். வேறு சிலர் அவர் சிலுவையில் அறையப்பட்டாலும் உயிர் துறக்கவில்லை என்கின்றனர். அதன் பிறகு அவர் இயற்கை மரணம் எய்துமுன் அவர் காஷ்மீர் சென்றார் என்றொரு கருத்தும், உரோமை சென்றார் என்றொரு கருத்தும், யூதேயாவின் மசாதா முற்றுகையின்போது அங்கு சென்றார் என்றொரு கருத்தும் வெளியிடப்பட்டுள்ளன.[10][11] திருக்குரான் கருத்துகுரான் 4:157-158 பகுதியின் அடிப்படையில் பெரும்பான்மையான முசுலிம்கள் இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்படவில்லை என்கின்றனர். வேறொருவரை கடவுள் இயேசுபோல் தோற்றமளிக்கச் செய்தார் என்றும், அந்த மனிதரையே சிலுவையில் அறைந்தார்கள் என்பதும் அவர்கள் கருத்து. அவ்வாறு உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டவர் யூதாசாகவோ சிரேன் ஊர் சீமோனாகவோ இருந்திருக்கலாம். மேலும், இயேசு கடவுளின் வல்லமையால் நேரடியாக விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும், அவர் மீண்டும் வருவாரென்றும் முசுலிம்கள் நம்புகின்றனர்.[42] மிர்சா குலாம் அகமத், 1899இசுலாம் சமயத்தின் பிரிவான அகமதியா இயக்கத்தைத் தோற்றுவித்தவர் மிர்சா குலாம் அஹ்மத். முசுலிம்கள் பொதுவாகத் திருக்குரானின் பகுதிகள் என்று ஏற்பனவற்றிற்கும் மேலதிகமான சில பகுதிகளையும் அகமதியா இயக்கத்தினர் திருக்குரானாகவே கருதுகின்றனர். அதன்படி, இயேசு காஷ்மீர் சென்றார் என்றும், அங்கு நூற்று இருபது வயதில் இறந்தார் என்றும் உளதாம். காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 1747இல் இசுலாம் சமயத்து சுபி புலவர்களுள் ஒருவரான குவாஜா முகம்மது ஆசாம் திதமாரி என்பவர் ”காஷ்மீரின் வரலாறு” என்றொரு நூல் எழுதினார். அதில் அவர், “வெளிநாட்டைச் சேர்ந்த ஓர் இறைவாக்கினர்” “யூஸ் ஆசாஃப்” என்னும் பெயர் குறிப்பிட்ட கல்லறையில் காஷ்மீரின் சிறிநகரில் உள்ள ரோசா பால் என்னும் திருத்தலத்தில் கல்லறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.[43] அக்கல்லறை இயேசுவின் கல்லறைதான் என்றொரு புனைவு வரலாறு எழுந்தது. அதாவது, “யூஸ் ஆசாஃப்” என்பது “இயேசு”தான் என்ற கருத்து எழுந்தது. ஆனால் இக்கருத்துக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்றும், இது ஒரு கட்டுக்கதை என்றும் பவுல் பாப்பாஸ் என்னும் அறிஞர் எழுதுகிறார்.[44] மேகர் பாபா, 1929![]() இந்திய ஆன்மிகவாதியான மேகர் பாபா (Meher Baba) என்பவரும் இயேசுவின் இறுதி நாட்கள்பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்துப்படி, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது உண்மையிலேயே இறக்கவில்லையாம். மாறாக, நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்தாராம். அதாவது சாதாரண நினைவு நிலையைக் கடந்து கடவுளோடு ஐக்கியமானாராம். மூன்று நாள்களுக்குப் பின் மீண்டும் நினைவு நிலைக்குத் திரும்பினாராம். பிறகு இயேசு தம் சீடர்களான பர்த்தலமேயு, யூதா போன்ற சிலரோடு தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இரகசியமாகக் கிழக்கு நோக்கிப் புறப்பட்டாரம். இதுவே “இயேசுவின் உயிர்த்தெழுதல்” என்று அழைக்கப்படுகிறது என்று மேகர் பாபா கூறுகிறார். மேலும் அவர் கூற்றுப்படி, இயேசு இரகசியமாக இந்தியா வந்தபின் மேலும் கிழக்கு நோக்கிச் சென்று பர்மாவின் ரங்கூன் சென்று அங்கு சிறிதுகாலம் தங்கியிருந்தார். பின் வடக்காகச் சென்று காஷ்மீர் போய் அங்கே நிலையாகத் தங்கினார் இயேசு என்று மேகர் பாபா கூறுகிறார். இயேசு தம் ஆன்மிகப் பணி முடிவடைந்ததும் தம் உடலை விட்டுச் சென்றாராம். பன்னிரு திருத்தூதர்களும் இயேசுவின் உடலைக் காஷ்மீரின் கான் யார் மாவட்டத்தில் ஹார்வான் என்ற இடத்தில் அடக்கம் செய்தார்களாம்.[45] இயேசு பற்றி மேகர் பாபா புனைந்த இக்கதையை சுவாமி அபேனாந்தா, சங்கராச்சாரியார், சத்ய சாயி பாபா போன்றோரும் வேறு சிலரும் ஏற்கின்றனர்.[46][47] ஹோல்கர் கெர்ஸ்ட்டன், 19811981ஆம் ஆண்டு ஹோல்கெர் கெர்ஸ்டன் என்னும் செருமானிய எழுத்தாளர் “இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்” என்ற நூலில் தம் கருத்தைத் தெரிவித்தார்.[48] அவருடைய கருத்து புதிதன்று. மாறாக, ஏற்கெனவே நோட்டோவிச், மேகர் பாபா போன்றவர்கள் கூறியவற்றைச் சற்றே விரித்து அவர் இயேசுவின் மறைந்த வாழ்வைக் கதையாகப் புனைந்துள்ளார். அதைக் குந்தெர் க்ரேன்போல்ட் என்பவர் தமது “இந்தியாவில் இயேசு என்னும் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி” (Jesus in Indien. Das Ende einer Legende (Munich, 1985)) என்னும் நூலில் ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். வில்ஹெல்ம் ஷ்னேமெல்கெர் என்பவரும் மறுப்பு அளித்துள்ளார்.[11] இக்கதைக்கு அடித்தளம் இல்லை என்பதே அறிஞர் கருத்து.[11] ஜெரால்டு ஒகாலின்சு (Gerald O'Collins) என்னும் அறிஞர் கூற்றுப்படி, கெர்ஸ்டன் புனைந்த கதை ஒரு ஏமாற்று வித்தை.[12] வேறுசில புனைவுகள்இயேசு பற்றி மேலே விளக்கப்பட்ட புனைவுகள் தவிர வேறுசில கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பார்பரா தீரிங் (Barbara Thiering) என்பவர் தாம் 1992இல் எழுதிய Jesus the Man என்ற நூலில் கீழ்வரும் புனைவைத் தருகிறார்: அதாவது, சிலுவையில் இயேசுவும் யூதாசு இஸ்காரியோத்தும் அறையப்பட்டனராம். யூதாஸ் இறந்துபோக, இயேசு சிலுவையில் உயிர்நீக்கவில்லை. பின் அவர் மகதலா மரியாவை மணந்துகொண்டாராம். மத்தியதரைக் கடல் பகுதிகளில் பயணம் செய்தாராம் உரோமையில் இறந்தாராம்.[10][49] 1995இல் கென்னத் ஹோஸ்கிங் என்பவரும் இயேசு சிலுவையில் அறையப்பட்டாலும் உயிர் துறக்கவில்லை என்று கூறுகிறார். சாக்கடல் சுவடிகள் குறிக்கின்ற “நீதி ஆசிரியர்” என்பவர் இயேசுவே என்கிறார் அவர். அவர் கருத்துப்படி, இயேசு உரோமையருக்கு எதிராக நிகழ்ந்த போரில் (கி.பி. 73-73) யூதர்களின் படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு இறந்தாராம்.[10][50] மார்மோன் நம்பிக்கையும் இயேசு அமெரிக்கா சென்றார் என்னும் புனைவும்மார்மோன் மதத்திற்கு அடிப்படையான “மார்மோன் நூல்” என்னும ஏட்டின்படி, இயேசு தாம் உயிர்த்தெழுந்தபின்னர், அமெரிக்காவின் முதல்குடி மக்களைச் சந்தித்தாராம்.[51][52] இயேசுவின் மறைந்த வாழ்வு பற்றி எழுந்த கலை மற்றும் இலக்கியப் படைப்புகள்”விவிலிய மர்மங்கள்” (Mysteries of the Bible) என்ற தலைப்பில் 1996இல் உருவாக்கப்பட்ட செய்திப்படத்தில் இயேசு இந்தியா சென்றார் என்ற கருத்தைப் பற்றிய நேர்காணலில் பல அறிஞர்கள் பங்கேற்றனர்.[53] எட்வர்டு டி. மார்ட்டின் என்பவர் 2008இல் King of Travelers: Jesus' Lost Years in India என்றொரு நூல் எழுதினார். அது Jesus in India என்ற பெயரில் 2008இல் திரைப்படமாக்கப்பட்டது.[54] இயேசு பற்றிய மற்றொரு புனைவு Lamb: The Gospel According to Biff, Christ's Childhood Pal என்ற தலைப்பில் கிறிஸ்தோபர் மூர் என்பவரால் வெளியிடப்பட்டது. அப்புதினத்தில் ஆசிரியர், இயேசுவுக்கு மிக நெருக்கமான சிறுவயது நண்பராக பிஃப் (Biff) இருந்ததாகவும், அந்த நண்பரே இயேசுவின் கதையை எடுத்துக்கூறுவதாகவும் கற்பனை செய்துள்ளார். இயேசு இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்றதாக பிஃப் என்னும் நண்பர் கூறுவதாக நூலாசிரியர் நூலைப் புனைந்துள்ளார்.[55] குறிப்புகள்
மேலும் அறியும்
வெளி இணைப்புBBCயின் தமிழ் காணொலி http://www.youtube.com/watch?v=yiy5uY3Iw2s |
Portal di Ensiklopedia Dunia