ஆந்தைகள் நன்கு அறியப்பட்ட இரவாடிகளாகும். எனினும் சில ஆந்தைகள் பகலாடிகள்
இரவாடுதல் என்பது இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கி, பகலில் உறங்கும் ஒரு விலங்குப் பண்பினைக் குறிக்கும். இத்தகைய பண்புடைய விலங்குகள் இரவாடிகள் எனப்படும்.[1]
இரவாடும் விலங்குகள் கூர்மையான காதுகளையும் மோப்பத் திறனையும் கொண்டிருக்கும். இவற்றின் கண்கள் இருட்டில் பார்ப்பதற்கேற்ப தகவமைந்திருக்கும். பூனை, ஆந்தை, வவ்வால் முதலியன இரவாடும் விலங்குகளாகும். சில இரவாடிகள் பகலிலும் நன்றாகப் பார்க்க வல்லன (பூனை). சில இரவில் மட்டுமே நன்றாகப் பார்க்கும் திறன் பெற்றிருக்கும்.[2][3][4]
தகவமைப்பு
பாலை நிலங்களில் வாழும் விலங்குகளில் சில பகல் நேரத்தில் உள்ள மிகுந்த வெப்பத்தினால் ஏற்படும் உடல் நீரிழப்பைத் தவிர்க்க இரவாடுமாறு தகவமைப்பைப் பெற்றுள்ளன. இது தவிரவும் பல காரணிகள் உள்ளன. இரவாடிப் பறவைகள் பகலாடிகளைப் போல வண்ணமயமான இறகுகளைக் கொண்டிருக்காது. மங்கலான நிறத்தில்தான் இறகுகளைக் கொண்டிருக்கும். பகலில் எதிராளிகளின் பார்வையில் இருந்து மறைந்திருக்க இவ்வாறான தகவமைப்பை இரவாடிப் பறவைகள் பெற்றுள்ளன.[5]