உதுமானிய கலீபகம்
உதுமானிய கலீபகம் (ஒட்டோமன் கலீபகம், Ottoman Caliphate, துருக்கிய: Hilâfet makamı) இசுலாமிய கலீபகங்களின் வரிசையில் அமையப்பெற்ற கடைசி கலீபகம் ஆகும். துருக்கிய ஒட்டோமன் பேரரசின் ஒரு அங்கமாக இது இருந்தது. ஒட்டோமன் பேரரசின் எட்டாவது சுல்தானான முதலாம் சலீம், 1517ல் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளை அடுத்து எகிப்தின் மாம்லுக் பேரரசு முடிவுக்கு வந்தது[1]. இதனை அடுத்து அந்த அந்த பேரரசின் பாதுகாப்பில் இருந்த அப்பாசியக் கலீபகத்தின் கடைசி கலீபாவான மூன்றாம் அல்முத்தவக்கில் துருக்கியின் இசுதான்புல் நகரில் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவர் தனது கலீபா பதவியையும் அதற்கான முத்திரையையும் முதலாம் சலீமிடம் கையளித்ததை[2] அடுத்து, உதுமானிய கலீபகம் ஆரம்பமாகியது. இதையடுத்து 1517ல் முதலாம் சலீம் தன்னை முதலாம் உதுமானிய கலீபாவ அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கொண்டார். உதுமானிய கலீபகம் அராபியர் அல்லாதவர்களால் ஆளப்பட்ட ஒரே கலீபகம் ஆகும். இவர்களின் ஆட்சியில் மெக்கா மதினா போன்ற முக்கிய இசுலாமிய புனிதத்தலங்கலும் கைப்பற்றப்பட்டன[3][4]. மேலும் இவர்களின் ஆட்சியிலேயே கலீபகம் என்பது மதத்தலைமை என்பதையும் தாண்டி அரசியல் தலைமை என்ற முக்கியத்துவத்தையும் பெற்றது. ஐரோப்பா மற்றும் உருசியா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இசுலாமியர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் இவர்களின் ஆட்சி முக்கிய பங்கு வகித்தது. சுமார் நான்கு நூற்றாண்டுகள் வரை தொடர்ந்த இந்த கலீபகம் முதலாம் உலகப் போரில் ஒட்டோமன் பேரரசு தோல்வியை சந்தித்ததை அடுத்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதன் கடைசி கலீபாவான இரண்டாம் அப்துல் மசீத் 1924ல் இறந்ததை தொடர்ந்து இந்த கலீபகம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து முசுத்தபா கமால் அத்தாதுர்கின் தலைமையில் அமைக்கப்பட்ட துருக்கிய தேசிய இயக்கம், மத சார்பற்ற துருக்கியை அமைப்பதின் ஒரு அங்கமாக இசுலாமிய கலீபா பதவியை ரத்து செய்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia