உருசிய நாட்டுப்பண்
உருசிய நாட்டுப்பண் (The State Anthem of the Russian Federation உருசிய மொழி: Госуда́рственный гимн Росси́йской Федера́ции, tr. Gosudarstvenný gimn Rossijskoj Federací; IPA: [ɡɐsʊdarˈstvʲɪnɨj ˈɡʲimn rɐˈsʲijskoj fʲɪdʲɪˈratsɨj]) என்பது உருசியாவின் நாட்டுப்பண் ஆகும். இது முதலில் சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் இசைகோர்வையாக்கப்பட்டு, வரிகள் சேர்க்கப்பட்டது. இதற்கு இசையமைத்தவர். அலெக்சாந்தர் அலெக்ஸ் ஆன்ட்ரோவ் ஆவார். இதற்கான வரிகளை செர்ஜி மிக்கால் கோவ் மற்றும் கேப்ரியல் எல்-ரெஜிஸ்டான் ஆகியோர் இணைந்து எழுதினர். இவர்கள் எழுதிய பாடல்வரிகளை சேர்த்து நாட்டுப்பண்ணானது உருவானது.[3] இந்த சோவியத் நாட்டுப்பண் 1944 முதல் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1953 இல் ஜோசப் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு, அவரால் கொண்டுவரப்பட்ட பாடலின் வரிகள் நீக்கப்பட்டன. 1956 இல் இசை வடிவம் மட்டும் பின்பற்றப்பட்டது. 1970 இல் கவிஞர் மிக்கால்கோவ், முந்தைய பாடலில் சில திருத்தங்களைச் செய்துகொடுத்தார். 1977 இல் இது ஏற்கப்பட்டது. அந்தப் பாடல் மீண்டும் நாட்டுப்பண்ணானது. 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் அரசியல், பொருளாதாரக் குழப்பங்கள் ஏற்பட்டன. இதனால் சோவியத் ஒன்றியம் போரிஸ் எல்ட்சின் காலத்தில் சிதறியது. மாநிலங்கள் எல்லாம் தனித்தனியே பிரிந்து போயின. உருசியா மட்டும் தனி நாடாக மாறியது. முன்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்த பெரும்பாலான மாநிலங்களுக்கு தனித்தனியே நாட்டுப்பண்கள் இருந்தன. சோவியத் ஒன்றியத்தில் உருசிய நாட்டுக்குமட்டும் தனியாக நாட்டுப்பண் இல்லாமல் இருந்தது. இதன் பிறகு மிகைல் க்லிங்கா என்பவரின் வரிகளற்ற இசைவடிவம் 1990 இல் நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்டது.[4] ஆனால் 1993 இல்தான் உறுதிபடுத்தப்பட்டது.[5] இந்நிலையில் இந்த இசைக்கு ஏற்பப் பாடல் வரிகளை எழுதி அனுப்புமாறு பொதுமக்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் வந்தவை எதுவுமே சரியில்லை என அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனால் வரிகளே வேண்டாம் இசை மட்டுமே இருந்து விட்டுப் போகட்டும்' எனச் சொன்னார் அதிபர் விளாதிமிர் பூட்டின். இருந்தாலும் பாடல்வரிகள் இல்லாது நாட்டுப்பண் இசைக்கப்படுவது குறித்து உருசிய விளையாட்டு வீரர்கள் போன்றோர் அதிபர் புதினைச் சந்தித்து, பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் போன்ற சமயங்களின்போது சொற்கள் இல்லாத நாட்டுப்பண்ணை பாடுவது தங்களுக்கு உற்சாகம் தருவதாக இல்லை என்று குறைபட்டனர். உடனே அதை ஏற்றுக்கொண்ட அதிபர், நாட்டுப்பண் பாடலைத் தேர்வு செய்யுமாறு தேசிய கவுன்சிலில் கேட்டுக்கொண்டார். மீண்டும் போட்டி அறிவிக்கப்பட்டது. ஆறாயிரத்துக்கும் அதிகமாகப் பாடல்கள் வந்தன. அவற்றில் 20 பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இசையமைக்கப்பட்டன. இறுதியில் மிகால்கோவ் எழுதி, அலெக்ஸான்ட்ரோவ் இசை அமைத்த பாடல் நாட்டுப்பண்ணானது. 2000 ஆம் ஆண்டு திசம்பர் 30, அன்று முறையாக உருசிய நாட்டுப்பண் பாடப்பட்டது. அதிகாரப்பூர்வ வரிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia