உலகம் (திரைப்படம்)
உலகம் (Ulagam) என்பது 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். இராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குமரேசன், நாகைய்யா, எம். வி. ராஜம்மா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] கதைகதை மூன்று தலைமுறைகளைக் கொண்டதாக உள்ளது. சபாபதி ஒரு சராசரி வாழ்கை வாழும் மனிதர். அவர் அழகியான மீனாவை மணக்கிறார். பின்னர் சபாபதி நல்வாய்ப்பால் செல்வத்தையும் அந்தஸ்தையும் அடைகிறார். இணையருக்கு சங்கர், மோகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சங்கர் தன் பெற்றோரின் விருப்பப்படி பத்மாவை மணக்கிறார். மோகன் கல்லூரியில் படிக்கிறார். உடல் பயிலும் மாணவியான லலிதா மோகனை நேசிக்கிறாள். ஆனால் மோகன் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. லலிதா வழக்கறிஞர் படிப்புக்காக வெளிநாடு செல்கிறாள். மோகனின் உறவினரான லீலா தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்து மருத்துவம் படித்து வருகிறாள். மோகன் அவளை நேசிக்கிறார். லீலா முதலில் தயங்கினாலும், பின்னர் அவரது காதலை ஏற்றுக்கொள்கிறாள். திருமணத்திற்கு முன்பே அவள் கர்ப்பமடைகிறாள். லலிதா வழக்கறிஞராகி வெளிநாட்டிலிருந்து திரும்புகிறாள். மோகனுக்கும் லீலாவுக்கும் இடையிலான காதலை அவள் அறிகிறாள். அவர்களைப் பிரித்து மோகனை தன் வலையில் வீழ்த்த அவள் பல வழிகளில் முயல்பிறாள். இருப்பினும், அவளின் எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்து இறுதியில் ஒரு கார் விபத்தில் இறந்துவிடுகிறாள். அதிர்ச்சியால் லீலாவின் கர்ப்பம் கலைந்துவிடுகிறது. மோகனும் லீலாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். மோகன் உயர் படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். இதற்கிடையில், சங்கருக்கும் பத்மாவுக்கும் சந்தர், ஸ்வர்ணா என்னும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். சந்தருக்கு 20 வயதும், ஸ்வர்ணாவுக்கு 16 வயதும் இருக்கும்போது பத்மா இறந்துவிடுகிறாள். சங்கர் ஏழைப் பெண்ணான பிரேமாவை இரண்டாவதாக மணக்க விரும்புகிறார். ஆனால் சந்தர் தன் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை எதிர்க்கிறார். பிரேமா கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். தன் தந்தை திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண் அவள்தான் என்பதை அறியாமல், சந்தர் அவளை மீட்டு, லீலாவிடம் சிகிச்சைக்காக அழைத்து வருகிறார். அவள் இப்போது ஒரு மருத்துவராகிவிட்டாள். சந்தரின் இரத்தம் பிரேமாவுக்கு ஏற்றப்படுகிறது. சந்தர் பிரேமாவை காதலிக்கிறார். காவல் ஆய்வாளரான கோவிந்தசாமி விசாரணைக்காக வருகையில் பிரேமாவின் அழகில் கவரப்படுகிறார். ஆனால் பிரேமா அவரை ஏற்க மறுக்கிறாள். இதனையடுத்து பிரேமா மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்கிறார். சந்தர் தனது தந்தையுடன் வசிக்க விரும்பவில்லை. அவர் லீலாவுடன் தங்குகிறார். மோகன் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், கோவிந்தசாமி அவரது மனதில் விஷத்தைக் கலக்கும் விதமாக, சந்தர் மற்றும் லீலாவைப் பற்றிய பொய்யான கதைகளை அவிழ்த்து விடுகிறார். சந்தர் இப்போது லீலாவின் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார். அவர் பிரேமாவின் வீட்டிற்குச் சென்று, தன் தந்தை திருமணம் செய்யவிருந்தவர் அவள்தான் என்பதை அறிகிறார். அவளின் நிலைக்கு வருந்துகிறார். பிரேமாவை தற்கொலைக்கு தூண்டியவர் சந்தர் என்று காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி குற்றம் சாட்டுகிறார். கோவிந்தசாமி சந்தரை கைது செய்து சிறையில் அடைக்கிறார். இந்தச் சிக்கல்கள் எவ்வாறு தீருகின்றன என்பதே கதையாகும்.[2] நடிப்புஇப்பட்டியலில் உள்ள பெயர்கள் தி இந்துவில் வெளியான பட்டியலைக் கொண்டும்,[1] பாட்டுப் புத்தகத்தைக் கொண்டும் உருவாக்கபட்டது.[2]
தயாரிப்புஇந்தப் படத்தை இந்தியாவில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த எம். எச். எம். மூனாஸ் தயாரித்தார். இந்தப் படம் பிரபஞ்சம் என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது. படத்தில் ஒரு மல்யுத்தப் போட்டியும் இடம்பெற்றிருந்தது. தயாரிப்பாளர் நேயர்களுக்கு ஒரு போட்டியை நடத்தினார், அதற்காக மொத்தம் ரூ 100,000 பரிசுத் தொகை என அறிவிக்கபட்டது. படத்தின் நுழைவுச் சீட்டில் ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன, அதற்கான பதில்கள் முத்திரையிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டு "ஈஸ்டர்ன் பேங்க் ஆஃப் இந்தியா"வில் பாதுகாத்து வைக்கபட்டதாக அறிவிக்கப்பட்டது. சரியான விடையை எழுதுபவருக்கு முதல் பரிசு ரூ 25,000, இரண்டாம் பரிசு 15,000, மூன்றாம் பரிசு 10,000 பரிசு என அறிவிக்கபட்டது. அந்த நாட்களில் இது மிகப் பெரிய தொகையாகும். மொத்தம் 309 பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் எல்லோரும் பங்கேற்கலாம் என்றாலும், ஒவ்வொரு நுழைவுச் சீட்டுடனும் நுழைவுச் சீட்டின் எதிர்த் தாளையும் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.[1] இருப்பினும், போட்டியின் முடிவுகள் குறித்து எந்தப் பதிவும் இல்லை.[3] படத்தின் 100 பிரதிகள் ஒரே நேரத்தில் தயாரிக்கபட்டன.[4] நடன அமைப்பை கே. கே. சின்ஹா, கே. மாதவன், ஜெயசங்கர் ஆகியோர் மேற்கோண்டனர். பாடல்கள்இப்படத்திற்கு எம். எஸ். ஞானமணி இசையமைத்தார். பாடல் வரிகளை எம். எச். எம். மூனாஸ், கவி குஞ்சரம், கே. பி. காமட்சிசுந்தரம், பி. ஹனுமந்த ராவ், குயிலன் (அறிமுகம்), தமிழ் ஒளி ஆகியோர் எழுதினர்.[3]
வெளியீடும் வரவேற்பும்உலகம் 1953 சூலை 10 அன்று வெளியானது.[4][5] இந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. இருப்பினும், வரலாற்றாசிரியர் ராண்டார் கை, "அற்புதமான நட்சத்திர நடிகர்கள், மூனாஸ் வெளியிட்ட பரிசுத் திட்டங்கள் மற்றும் விளம்பர உத்திக்காக இந்தப் படம் நினைவுகூரப்படுகிறது, இதை அக்காலத்தவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!" என்றார்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia