எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு
சார்லசு II (Charles II,எசுப்பானியம்: Carlos II) (6 நவம்பர் 1661 – 1 நவம்பர் 1700) ஆப்சுபர்கு அரசமரபைச் சேர்ந்த கடைசி எசுப்பானிய அரசராவார். எசுப்பானிய நெதர்லாந்தும் (தெற்கு நெதர்லாந்து) அமெரிக்காக்களிலிருந்து எசுப்பானியக் கிழக்கிந்தியா வரை பரவியிருந்த எசுப்பானியாவின் கடல்கடந்த பேரரசும் இவரது ஆட்சியின் கீழ் இருந்தது. "மயக்குபவர்" (எசுப்பானியம்: el Hechizado),[1] என்றழைக்கப்பட்ட சார்லசு அவரது உடல்,அறிவு, உளக் குறைபாடுகளுக்காக அறியப்பட்டார். பல தலைமுறைகளாக ஆப்சுபர்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் புரிந்து வந்தமையால் இக்குறைபாடுகள் இவருக்கு வந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே இவரது ஆட்சி பலவீனமாக இருந்தது. 1700இல் குழந்தைகளின்றி வாரிசின்றி இறந்தார். அரியணை ஏறுவதற்கு உரிமையிருந்த அனைத்து ஆப்சுபர்கு வாரிசுகளும் இவருக்கு முன்னரே மரித்து விட்டனர். தனது உயிலில் தனக்குப் பின்னால் 16 வயதேயான ஆன்ஷூவின் பிரபு பிலிப்பை முடிசூட நியமித்தார்; இவர் பதினான்காம் லூயியின் முதல் மனைவியும் சார்லசின் ஒன்றுவிட்ட சகோதரியுமான மாரியா தெரசாவின் பேரனாவார்.[2] (எனவே பிரான்சை ஆண்ட பிரான்சிய அரசர் லூயி XIVயின் பேரனுமாவார்). ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் இதனால் வலுப்பெறும் பிரான்சிய-எசுப்பானிய உறவு அதிகாரச் சமநிலையை பாதிக்கும் எனக் கருதின. எனவே இவரது மறைவிற்குப் பிறகு எசுப்பானிய மரபுரிமைப் போர் ஏற்பட்டது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia