எட்டுத் திக்கும் மதயானை
எட்டுத் திக்கும் மதயானை (1998) நாஞ்சில் நாடன் எழுதிய நாவலாகும்.[1][2][3] நாஞ்சில் நாடனின் ஆறாவது நாவலன இப்புதினம் பூலிங்கம் என்ற கதா பாத்திரத்தின் வழியாக வாழ்வின் போராட்டங்களையும் சிக்கல்களையும் விவரிக்கிறது. மும்பை குற்றவுலகைப் பற்றிய சித்தரிப்பை வெளிப்படுத்தும் வகையில், எட்டுப் பக்கமும் மதம் பிடித்த யானை நின்றால் எப்படியிருக்குமோ வாழ்க்கை அதைப் போல துன்பங்கள் சூழ்ந்த வாழ்வைப் பற்றிப் பேசுகிறது இப்புதினம். இந்நூலை ஆ.மாதவனுக்கும், நீல.பத்மநாபனுக்கும் ஆசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். கதைச் சுருக்கம்எட்டுத்திக்கும் மதயானை மும்பை குற்றவுலகைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கியப்படைப்பு என கருதப்படுகிறது. பூலிங்கமும், செண்பகமும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள். கல்லூரியில் ஒரு நாள் பூலிங்கம் செண்பகத்திடம் பேசியதால் பூலிங்கத்தை செண்பகத்தின் அப்பா ஊரில் வைத்து அடித்துவிடுகிறார். அவமானமடைந்த பூலிங்கம் செண்பகம் வீட்டு வைக்கோல் போரைத் தீக் கொளுத்திவிட்டு மும்பை செல்கிறான். அங்கு வயிற்றுப் பசிக்காக மது, கஞ்சா மற்றும் சாராயம் கடத்துகின்றான். சில நாட்கள் சிறையிலும் இருக்கின்றான். பிற மொழிகளையும் கற்றுக் கொள்கின்றான். செண்பகத்திற்கும் பூலிங்கத்திற்கும் தவறான தொடர்பு இருந்திருக்கலாம் என்ற வதந்தியால் செண்பகத்திற்குத் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது. பின்னர் மும்பையில் வேலை பார்க்கும் ஒருவருக்கும் செண்பகத்திற்கும் திருமணம் நடக்கிறது. மும்பையில் செண்பகம் பூலிங்கத்தை தற்செயலாக சந்திக்கின்றான். செண்பகத்தின் கணவனுக்கும் செண்பகத்துக்குமான உறவு நிலை சரியில்லை. கடைசியில் பூலிங்கமும் செண்பகமும் இணைந்து வாழலாம் என முடிவு செய்கின்றனர் என்பதாக கதை அமைகிறது.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia