இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. Relevant discussion may be found on the talk page. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம்.
கச்சத்தீவு ஒப்பந்தம் (Katchatheevu Agreement) என்பது பாக் நீரிணையில் அமைந்துள்ள, இந்தியாவுக்கு உரிமையான கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது குறித்தான ஒப்பந்தமாகும். கச்சத்தீவு ஒப்பந்தம், இந்தியத் தலைமையமைச்சர் இந்திராகாந்தியும் இலங்கைத் தலைமையமைச்சர் சிறீமாவோ பண்டாரநாயக்காவும் கையொப்பமிட்டு 1974-ஆம் ஆண்டு சூலை 8 முதல் செயலுக்கு வந்தது.[1][2]
1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது ஆதம் பாலத்திற்குத் தெற்கே உள்ள மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா பரப்புகளில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் ஒப்பந்தமாகும். 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை.[3]
கச்சத்தீவில் இந்தியர்களுக்கு உள்ள உரிமைகள்
கச்சத்தீவு ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்றும் அங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம் என்றும் இரண்டு உரிமைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை.[3][4].[2]
நீதிமன்றத்தில் வழக்கு
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தரவில்லை என 2013-இல் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கியுள்ளது. [5]கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என தமிழ்நாட்டு அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தப்படி கச்சத்தீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என இந்திய ஒன்றிய அரசு, நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துள்ளது.[6] தமிழ்நாட்டின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் ஒன்றிய அரசின் செயல் குறித்து, தமிழ்நாட்டு முதல்வரும் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதிக்கு தமிழக மக்களுக்கு நியாயம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.[7][8]
கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்தான சட்ட விமரிசனங்கள்
இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. Relevant discussion may be found on the talk page. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம்.
கச்சத்தீவு ஒப்பந்தம் சட்ட ஏற்பு பெற வேண்டுமானால் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 368-இன் படி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 1-இல் சட்டத் திருத்தம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்திய ஒன்றிய அரசு அவ்வாறு திருத்தம் எதனையும் மேற்கொள்ளவில்லை.
மேலும், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 3-இன் படி, மாநில எல்லைகள் மாற்றம் பற்றி செய்யப்படும் சாதாரணச் சட்டம் கூட நாடாளுமன்றத்தில் இயற்றப்படவில்லை.[9]
1974 கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை குறித்த பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது. “பாக் நீரிணைக்கும் ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை – இந்திய வரலாற்று நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்” என்று சட்டச் சொற்களில் குறிக்கப்படும் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தாகிய போது 1958 ஆம் ஆண்டு ஐ.நா. சட்டம் செயலில் இருந்தது.
‘கடல் பரப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அவை ஒப்பந்தம், 1958’ (1958 UN convention on continental shelf) இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லையை பிரித்துக் கொள்ளும் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறையையும் கூறுகிறது. இரண்டு அண்டை நாடுகள் தங்களுக்கிடையிலுள்ள கடல் எல்லையை வரையறுக்கும் போது தங்களுக்கிடையே இருக்கிற கடல் பரப்பைச் சரிபாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கடற்கரைகளிலிருந்தும் சம தொலைவில் இந்த எல்லைக் கோடு கிழிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக எல்லை வரையறுப்பில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவ்வொப்பந்ததில் அதற்கான சிறப்புக் காரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
1974 ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு பின்பற்றப்படவில்லை. இராமேசுவரத்திற்கும்தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல் மைல். சம தொலைவில் எல்லைக் கோடு வகுப்புதென்றால் 15 மைலில் அக்கோடு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே நீடித்து இருக்கும். ஏனெனில் கச்சத்தீவு இராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் தலைமன்னாரிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ளது. இவ்வொப்பந்தத்தில் வேண்டுமென்றே சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டுள்ளது[சான்று தேவை].
ஆனால் 1974 –ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் சம தொலைவுக் கோட்பாடு மீறப்பட்டு 10 மைலுக்கு 20 மைல் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. கச்சத்தீவை இலங்கையிடம் அளித்துவிட வேண்டும் என்ற நோக்கம்[சான்று தேவை] தவிர இந்தப் பிறழ்ச்சிக்கு வேறு காரணம் எதுவும் இல்லை. 1958ஆம் ஆண்டு ஐ.நா. சட்டப்படி இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருந்தால் அதனை ஒப்பந்தத்தில் எடுத்துரைத்து நிலைநாட்டியிருக்க வேண்டும். 1974 இந்திராகாந்தி - சிறீமாவோ ஒப்பந்தத்தில் அவ்வாறான சிறப்புக் காரணம் எதும் சொல்லப்பட வில்லை.