காசாபிளாங்கா கடற்சண்டை
காசாபிளாங்கா கடற்சண்டை (Naval Battle of Casablanca) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு கடற்படைச் சண்டை. டார்ச் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் விஷி பிரான்சின் படைகள், அமெரிக்கப் படைகள் காசாபிளாங்கா துறைமுகத்தில் தரையிறங்குவதைத் தடுக்க முயன்று தோற்றன. நவம்பர் 8, 1943ல் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனி ஆதரவு விஷி பிரான்சு அரசின் கட்டுப்பாட்டிலிருந்த வடக்கு ஆப்பிரிக்கா மீது படையெடுத்தன. இதற்கு டார்ச் நடவடிக்கை என்று பெயரிடப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக மொரோக்கோ நாட்டுத் துறைமுகம் காசாபிளாங்காவை அமெரிக்கப் படைகள் தாக்கின. காசாபிளாங்கா துறைமுகத்திலிருந்த விஷி பிரெஞ்சுக் கடற்படை இத்தாக்குதலை எதிர்கொண்டது. அமெரிக்கப் படையிறக்கம் துவங்கும் முன்னரே நேச நாட்டுத் தூதுவர்கள் விஷி பிரெஞ்சுத் தளபதிகளை சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். மேலும் விஷி அரசுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் அளித்திருந்ததால் விஷிப் படைகள் அமெரிக்கப் படையிறக்கத்தை எதிர்க்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் பிரெஞ்சுப் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிகளும் அமெரிக்கப் படைப்பிரிவுகளைத் தாங்கி வந்த போக்குவரத்துக் கப்பல்களைத் தாக்கத் தொடங்கின. மூன்று நாட்களுக்கு அமெரிக்க பிரெஞ்சு கடற்படைகளிடையே கடும் சண்டை நடந்தது. பல அமெரிக்க போக்குவரத்துக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன; 174 அமெரிக்கப்படைகள் நீரில் மூழ்கி இறந்தனர். சண்டையின் இறுதியில் 4 பிரெஞ்சு டெஸ்டிராயர்களும் 5 நீர்மூழ்கிகளும் மூழ்கடிக்கப்பட்டன; 462 பிரெஞ்சு மாலுமிகள் உயிரழந்தனர். மேலும் பல பிரெஞ்சு கப்பல்கள் சேதமடைந்தன். பிரெஞ்சுக் கடற்படை அழிக்கப்பட்டவுடன் நவம்பர் 10ம் தேதி காசாபிளாங்கா நகரம் அமெரிக்கப்படைகளிடம் சரணடைந்தது. |
Portal di Ensiklopedia Dunia