கார்த்திகேயன் முரளி
கார்த்திகேயன் முரளி (Karthikeyan Murali) இந்தியாவின் சதுரங்க கிராண்ட்மாசுட்டர்களில் ஒருவராவார். 1999 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இவர் பிறந்தார் [1]. இரண்டு முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இவர் தற்போது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் பணிபுரிகிறார். தஞ்சாவூரில் பிறந்த கார்த்திகேயன் ஐந்து வயதில் இருந்தே சதுரங்கத்தைக் கற்றுக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு டிசம்பரில், பிரேசில் நாட்டின் , கால்டாசு நோவாசில் நடைபெற்ற 12- வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார் [2][3][4]. மேலும், இவர் 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் நகரத்தில் நடைபெற்ற 16-வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் வென்றார். 2014 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற மாசுட்டர்சு சதுரங்கப்போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சமநிலை பெற்றார் [5]. வடமேற்கு அங்கேரி நகரமான கையோர் நகரில் நடைபெற்ற 16-வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு மிகவும் உதவியாக இருந்தார் [6]. இதற்குப் பின்னர் நடைபெற்ற போட்டியில் இவர் கிராண்ட்மாசுட்டர் பட்டம் வெல்வதற்கான அனைத்து தகுதியையும் நிறைவு செய்தார். 2015 ஆம் ஆண்டு திருவாரூர் நகரில் நடைபெற்ற தேசிய முதல்நிலை சதுரங்க சாம்பியன் போட்டியில் இவருடன் இணையாக 8.5 புள்ளிகள் பெற்ற விதித் சந்தோசு குசராத்தியை சமன்முறிவு போட்டியில் வென்றார் [7][8]. 2016 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற 54 ஆவது சாம்பியன் கோப்பைப் போட்டியிலும் கார்த்திகேயன் முரளி வெற்றிபெற்றார். தொடக்கத்தில் அரவிந்த் சிதம்பரத்திடம் ஒரு ஆட்டத்தில் தோல்வியை எதிர்கொண்டு மந்தமாக துவங்கிய போதிலும், இறுதி ஆட்டத்தில் விதித் சந்தோசு குசராதிக்கு எதிரான மிக முக்கியமான ஆட்டத்தில் நேரக்கட்டுபாட்டை பயன்படுத்தி இரண்டு வெற்றிகளைப் பெற்று இறுதியில் முன்னணியோடு சாம்பியன் கோப்பையை வென்றார் [9]. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia