கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் பகுதிக்கு அருகிலுள்ள காலடிபேட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[4][5][6] இக்கோயில் சுமார் 450 ஆண்டுகள் தொன்மையான பெருமை கொண்டது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மூலவர் பிரதி போல உருவாக்கப்பட்ட மூலவர் இக்கோயிலில் காட்சியளிக்கிறார்.[7]
இக்கோயிலின் மூலவர் கல்யாண வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் பெருந்தேவி தாயார் ஆவர்.[8] மேலும், உற்சவர் பவளவண்ண பெருமாள் மற்றும் உற்சவ தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் ஆவர்.
கல்யாண வரதராஜ பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி,[9] இராமர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதி[10] ஆகியவை இக்கோயிலின் முக்கிய வழிபாட்டு இடங்களாகும்.