கிரக்கத்தோவா
கிரக்கத்தோவா (Krakatoa, இந்தோனீசீயம்: Krakatau) என்பது ஓர் எரிமலைத் தீவாகும். இது சாவகத்துக்கும் சுமாத்திராவுக்கும் இடையில் உள்ள சுந்தா நீரிணையில் அமைந்திருக்கிறது. தீவுக் கூட்டத்துக்கும், அதன் முக்கிய தீவுக்கும் அதன் எரிமலைக்கும் கிரக்கத்தோவா என்ற பெயரே வழங்கி வருகிறது. இது வரலாற்று ரீதியாக பல முறை வெடித்திருப்பதாகப் பதியப்பட்டுள்ளது. இதன் பெரும் வெடிப்பு 1883 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 26 - 27 இல் இடம்பெற்றது. இதுவே அண்மைக் காலத்தில் இடம்பெற்ற பெரும் எரிமலைக் குமுறல்களில் பெரும் அழிவைத் தந்தது எனக் கருதப்படுகிறது. இதன் தாக்கம் 200 மெகாதொன் டி.என்.டி அளவுக்கும், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட சின்னப் பையன் என்ற அணுகுண்டின் தாக்கத்தின் 13,000 மடங்கு அதிகமானது எனவும் கருதப்படுகிறது[1], . ![]() 1883 குமுறலில் 25 கன கிலோமீட்டர் அளவு பாறைகள், தூசு, மாக்கல் (pumice) என்பன வீசப்பட்டன[2]. இக்குமுறலின் ஒலி 3,110 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரம் வரையும், 5,000 கி.மீ. தூரத்தில் மொரீசியஸ் வரையும் கேட்டது. மொத்தம் 165 கிராமங்களும் நகரங்களும் அழிந்தன. குறைந்தது 36.417 பேர் கொல்லப்பட்டனர். இக்குமுறலை அடுத்து சுனாமி அலைகளும் கிளம்பி பலத்த சேதத்தை உண்டு பண்ணியது. கிரக்கத்தோவா தீவின் மூன்றில் இரண்டு பகுதிகள் இந்த எரிமலைக் குமுறலினால் அழிந்தன. 1927 ஆம் ஆண்டு எரிமலைக் குமுறல்களை அடுத்து இங்கு அனாக் கிரக்கத்தோவா என்ற புதிய தீவு உருவானது. இது கிட்டத்தட்ட 2 கி.மீ. ஆரையும் கடல் மட்டத்தில் இருந்து 200 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia