கில்பர்த்து நியூட்டன் இலூயிசு
கில்பர்த்து நியூட்டன் இலூயிசு (Gilbert Newton Lewis)இராயல் சொசைட்டியின் முன்னாள் உறுப்பினர்[1] (அக்டோபர் 25 (அல்லது 23)[2], 1875 – மார்ச்சு 23, 1946)[3][4] ஒரு அமெரிக்க இயற்பிய வேதியியலாளர் ஆவார். இவர் சகப் பிணைப்பு மற்றும் எதிர்மின்னி இரட்டை போன்ற கண்டுபிடிப்புகளுக்காக நன்கறியப்பட்டவர் ஆவார்; இவரது இலுாயிசு புள்ளி வாய்ப்பாடு மற்றும் இணைதிறன் பிணைப்புக் கோட்பாடு தொடர்பான பங்களிப்புகள் வேதியியற் பிணைப்பு தொடர்பான நவீன கோட்பாடுகளை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றின எனலாம். மேலும், இலுாயி வெப்ப இயக்கவியல், ஒளி வேதியியல் மற்றும் ஓரிடத்தான்களைப் பிரித்தெடுத்தல் போன்ற வேதியில் பிரிவுகளுக்கும் வெற்றிகரமான பங்களிப்பைச் செய்துள்ளார். இலுாயிசு தனது அமிலங்களும் காரங்களும் கோட்பாட்டிற்காகவும் நன்கறியப்பட்டவர் ஆவார்.[5] கில். நியூ. இலுாயிசு 1875 ஆம் ஆண்டு வேமெளத்தில், (மாசாச்சுசெட்டு) பிறந்தார். தனது இளங்கலைப் பட்டத்தை 1896 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார்.1899 ஆம் ஆண்டில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியலில், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை முடித்த பின்பு, ஓராண்டு காலம் அங்கேயே வேதியியல் கற்பிப்பவராகப் பணிபுரிந்தார். பின்னர், அவர் செருமனி மற்றும் பிலிப்பீன்சு நாடுகளில் பணிபுரிந்தார். [6] பின்னர், லுாயிசு கலிபோர்னியாவிற்குச் சென்று மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் 1907 ஆம் ஆண்டு உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1911 ஆம் ஆண்டில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) வேதியியல் கற்பித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பெர்க்லியின் வேதியியலுக்கான கல்லுாரியின் முதல்வரானார். அங்கு அவர் தனது வாழ்நாளின் மீதிக்காலத்தை செலவிட்டார். ஒரு பேராசிரியராக, வெப்ப இயக்கவியற் கருத்தியலை வேதியியல் கலைத்திட்டத்தில் உள்ளடக்கி வெப்ப இயக்கவியலின் வேதியியல் என்ற கணித தொடர்புடன் கூடிய ஒரு பிரிவினைக் கொண்டு வந்தார். அவர், பல்வேறு கரிம மற்றும் கனிம வேதிச்செயல்முறைகள் தொடர்பான கட்டிலா ஆற்றலை அளக்கத் தொடங்கினார். 1916 ஆம் ஆண்டில், அவர் வேதியியற் பிணைப்பு தொடர்பான தனது கோட்பாட்டை முன்மொழிந்தார். மேலும், தனிம அட்டவணையில் தனிமங்களின் எதிர்மின்னிகள் தொடர்பான கூடுதல் தகவல்களையும் தந்தார். 1933 ஆம் ஆண்டில், அவர் ஓரிடத்தான்களைப் பிரித்தல் தொடர்பான தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார். லுாயிசு ஐதரசன் தொடர்பான தனது பணியில் கன நீரின் மாதிரியை சுத்திகரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். பின்னர், அவர் அமிலங்கள் மற்றும் காரங்கள் தொடர்பான தனது கோட்பாட்டின் மீது கவனம் செலுத்தினார். தனது வாழ்வின் இறுதி நாட்களில், அவர் ஒளி வேதியியலில் சில வேலைகளை மேற்கொண்டார். 1926 ஆம் ஆண்டில், ஒளியணு என்ற புதிய சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தினார். இந்தச் சொல் கதிர்வீச்சு ஆற்றலின் மிகச்சிறிய அலகைக் குறிக்கும். நோபல் பரிசுக்காக 41 முறை பரிந்துரைக்கபட்டிருந்தாலும்,[7] கில். நியூ. இலூயிசு வேதியியலுக்கான நோபல் பரிசினை ஒரு முறை கூட வென்றதில்லை. 1946 ஆம் ஆண்டு, மார்ச்சு 23 இல் இலூயிசு ஐதரசன் சயனைடை வைத்து ஆய்வு மேற்கொண்ட காலத்தில் பெர்க்கிலி பரிசோதனைக் கூடத்தில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. பலர் அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தினை முன்வைத்தனர். இலூயிசிற்குப் பிறகு, அவரது குழந்தைகள் தங்களின் தந்தை வேதியியலிலி விட்டுச் சென்ற பணியினைத் தொடர்ந்தனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia