கி. ஆம்ஸ்ட்ராங்
கி. ஆம்ஸ்ட்ராங் (K. Armstrong, ஜனவரி 31, 1977 - சூலை 5, 2024) என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவின் முன்னாள் மாநிலத் தலைவராவார். 2024 ஆம் ஆண்டு சூலை மாதம் 5ஆம் நாள் தனது வீட்டின் வாசலில் படுகொலை செய்யப்பட்டார்.[2][3] இளமைக் காலம்ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு மகனாக 1977 சனவரி 31ஆம் நாள் பிறந்தார்.[4] திருப்பதி வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் படித்து, வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். சட்டக்கல்லூரி வளாகக் கலவரம்சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் 2008 நவம்பர் 12 இல் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்ற கலவரத்தில் இவர் மீது வழக்குப்பதியப்பட்டது. அதன் காரணமாகக் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளியே வந்தார்.[5] 2016 இல் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.[6] அரசியல் வாழ்வு2000ஆம் ஆண்டு புரட்சி பாரதம் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 2006-இல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 99ஆவது வட்டத்தின் மாமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.[4] 2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7] 2007 முதல் இறக்கும் வரை 17 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார்.[8] படுகொலை2024 சூலை 5ஆம் நாள் வெள்ளி மாலையில் தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஆறு நபர்கள் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.[9] இந்தப் படுகொலைக்கு நாடு முழுவதிலுமிருந்து பல கட்சித் தலைவர்கள் கண்டனமும் இரங்கலும் தெரித்தனர். சென்னை முழுவதும் காவல்துறை கண்காணிப்பைப் பலப்படுத்தினர்.[10] இக்கொலைக்குத் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட எட்டு நபர்கள் சரணடைந்துள்ளனர்.[11][12] சரணடைந்த திருவேங்கடம் என்ற நபர் காவல்துறை விசாரணையின் போது தப்பியோட முயன்றதாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதல் கொலையின் மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சந்தேகம் எழுப்பினர்.[13] ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜாவைக் காவல்துறையினர் செப்டம்பர் 22 ஆம் நாள் கைது செய்யும் போது தப்பியோடியதாக அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.[14] 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் அளித்துள்ளனர். அதில் முதல் குற்றவாளியாக நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக சம்போ செந்திலும், மூன்றாவது குற்றவாளியாக அஸ்வத்தாமனும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதான 28 நபர்களில் 25 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia