கோபாலசாமி மகேந்திரராஜாகோபாலசாமி மகேந்திரராஜா (இயக்கப்பெயர்: மாத்தையா) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இவர் 1978 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து 1987 ஆம் ஆண்டு அதன் உப தலைவராக உயர்ந்தார். 1989 இல் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார். இந்தியாவின் றோ அமைப்புக்குப் புலிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவிக்கு வரத் திட்டமிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் 1993 இல் புலிகளால் கைதுசெய்யப்பட்டு, 1994 டிசம்பர் 28 ஆம் நாள் மரணதண்டனை விதிக்கப்பட்டார். வாழ்க்கைச் சுருக்கம்1956 ஆம் ஆண்டு இலங்கையின் வடமாகாணத்தின் பருத்தித்துறையில் பிறந்த மகேந்திரராஜா, 1978 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். புலிகள் அமைப்புக்குள் வளச்சியடைந்த இவர் விரைவாக வன்னிப் பகுதியின் பிரதிநிதி என்ற பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதேவேளை யாழ்ப்பாணப் பகுதிக்கு பிரதிநிதியாக இருந்த கிட்டு 1987 மார்ச் 31 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு வீச்சில் சிக்கி காயப்பட்டு தனது ஒரு காலை இழந்தப் பின் கிட்டுவின் பொறுப்புகள் மாத்தையாவிற்குத் வழங்கப்பட்டன. இப்படியாக மாத்தையா வே. பிரபாகரனின் நேரடிக் கவனத்தையும் மற்றும் விடுதலைப் புலிகள் மத்தியில் முக்கியத்துவத்தையும் பெற்றார். ஈழ இயக்கங்களிடையே ஏற்பட்ட சண்டைகளின் போது பல கொலைகள் செய்தார். இதற்குப் பிறகு வட-கிழக்குப் பகுதி இடைக்கால அரசு அமைப்பதான இந்திய ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகள் சார்பாக இரண்டாம் நிலைத் தலைவர் என்ற தகுதியில் மாத்தையா கையெழுத்திடும் அளவுக்கு அவரது முக்கியத்துவம் அதிகமானது. அப்போது அரசியல் பிரிவான மக்கள் முண்ணனியின் முக்கியப் பொறுப்பில் இருந்த மாத்தையா கொழும்பில் பல பேர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். அவரது செயற்பாடுகள் தொடர்பான சந்தேகம் புலிகள் அமைப்பில் ஏற்படத்தொடங்கியது. மாத்தையாவைப் பற்றிய முதல் சந்தேகம் புலிகளின் வேவுத்துறைத் தலைவரான பொட்டு அம்மானுக்கு 1989 ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டசம்பவத்திலிருந்து ஏற்பட்டது. இதன் பிறகு புலிகளின் ஒரு பிரிவு மாத்தையாவின் தளத்திலிருந்து பரிமாறப்படும் அனைத்துச் செய்திகளையும் இடைமறித்துக் கேட்கலானது. போதிய தகவல் சேகரிக்கப்பட்டவுடன் மாத்தையா மீது குற்றப்பத்திரிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு மக்கள் முன்னாள் வாசித்துக் காட்டப்பட்டது. மேலும் அதற்கான பதில் கூறுவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் மாத்தையா இந்த குற்றப்பத்திரிக்கையை அலட்சியப்படுத்தினார். மேற்படி சம்பவத்திற்குப் பின் மாத்தையா அரசியல் பிரிவின் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அகதியாய் வந்தோரின் நலமும் மற்றும் காயமடைந்த புலிகளின் நலம் பேணும் துறையின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். அவருக்கு ஒரு சலுகையாக அவரின் 75 பேரைக்கொண்ட பாதுகாப்புக் குழுவும் அனுமதிக்கப்பட்டது.இதன் பின் தொடர்ச்சியாக மாத்தையாவின் இடத்திற்கு பேபி சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் மாத்தையாவின் கீழிருந்த ஒருவரைக் கைது செய்து விசாரித்தில் இந்திய உளவு நிறுவனமான றோவுடன் மாத்தையாவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. பொட்டு அம்மன் தலைமையில் கமாண்டோ தலைவர் சொர்ணம், பால்ராஜ் மற்றும் கடற்புலித் தலைவர் சூசை உள்ளடக்கிய விடுதலைப் புலிகள் அணியொன்று 1993 மார்ச் 31 ஆம் நாள் கொக்குவிலில் அமைந்திருந்த மாத்தையாவின் தங்குமிடத்தை தாக்கி மாத்தையாவைக் கைது செய்தது. பின்னர் சாவகச்சேரியில் உள்ள ஒரு முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது. பின்னர் 1994 டிசம்பர் 28 ஆம் நாள் அவருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.[1] இந்திய உளவு நிறுவனமான றோ (ரா, RAW – Reasearch and Analysis Wing) உடன் இரகசிய தொடர்புகள் பேணி புலிகள் அமைப்புக்கு அல்லது பிரபாகரனுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 1994 புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.[2] மேற்கோள்கள்
உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia