சாகரிகா கோஸ்
சாகரிகா கோஸ் (Sagarika Ghose) (பிறப்பு: 1964 நவம்பர் 8) ஓர் இந்திய பத்திரிகையாளரும், கட்டுரையாளரும், எழுத்தாளரும் ஆவார்.[1][2] 1991 முதல் பத்திரிகையாளராக இருந்த இவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவுட்லுக் , இந்தியன் எக்சுபிரசு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். பிபிசி வேர்ல்டு செய்தித் தொலைக்காட்சியில் முதன்மை நேர தொகுப்பாளராகவும் சிஎன்என்-ஐபிஎன் செய்தி வலையமைப்பில் துணை ஆசிரியராகவும் இருந்தார். இவர் பத்திரிகைத் துறையில் பல விருதுகளை வென்றுள்ளார். இந்திரா காந்தியின் சுயசரிதையான, இந்திரா: இந்தியாஸ் தி மோஸ்ட் பவர்புல் பிரைம் மினிஸ்டர் உட்பட இரண்டு புதினங்களையும் எழுதியுள்ளார். சூலை 2014 இல் சி.என்.என்-ஐ.பி.என் துணை ஆசிரியர் பதவியை விட்டு வெளியேறினார். இவர் ஒரு ரோட்ஸ் அறிஞரும் (1987) ஆவார். இவர் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆலோசனை ஆசிரியராக உள்ளார்.[3] சொந்த வாழ்க்கைதில்லியின் புனித இசுடீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1987 ஆம் ஆண்டில் ரோட்ஸ் உதவித்தொகை பெற்ற இவர், ஆக்சுபோர்டு மாக்டலென் கல்லூரியிலிருந்து நவீன வரலாற்றில் இளங்கலை பட்டத்தையும், ஆக்ஸ்போர்டு செயின்ட் ஆண்டனி கல்லூரியிலலிருந்து ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றார்.[4] 1991 முதல், இவர் டைம்ஸ் ஆப் இந்தியா, அவுட்லுக் , தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பணிபுரிந்தார். மேலும், சி.என்.என்-ஐ.பி.என் என்ற செய்தி வலையமைப்பில் துணை ஆசிரியராகவும் முக்கிய நேரத் தொகுப்பாளராகவும் இருந்தார்.[5][6] இவர் முன்னர் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாகவும் இந்திய பொது தொலைக்காட்சி வலையமைப்பான பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை இயக்குநராகவும் இருந்த பாஸ்கர் கோஸின் மகள் ஆவார்.[7] இவரது இரண்டு அத்தைகளில் முன்னாள் தூதரான அருந்ததி கோஸ், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரூமா பால் ஆகியோர் அடங்குவர். முன்னாள் இந்திய தேர்வுத் துடுப்பாட்ட வீரர் திலீப் சர்தேசாயின் மகனும் பத்திரிகையாளரும் செய்தி தொகுப்பாளருமான ராஜ்தீப் சர்தேசாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இஷான் என்ற ஒரு மகனும், தாரினி என்ற ஒரு மகளும் உள்ளனர்.[8] தொழில்1991 முதல் இவர் பத்திரிகையாளராக இருந்து வருகிறார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவுட்லுக் பத்திரிகை மற்றும் இந்தியன் எக்சுபிரசு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் "கேள்வி நேர இந்தியா" என்ற நிகழ்ச்சியை வழங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.[7] சிஎன்என்-ஐபிஎன் செய்தி வலையமைப்பில் துணை ஆசிரியராகவும், முதன்மை நேர தொகுப்பாளராகவும் இருந்தார்.[5][6] இவரது எழுத்துக்கள் மற்றும் ஒளிபரப்புகள் இவரது பிரபலத்தையும் வலதுசாரி பார்வையாளர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற்றுள்ளன. 2013ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடனான இவரது டுவிட்டர் நேர்காணல், இந்திய அரசியல்வாதி ஒருவர் தேர்தலுக்கு முன்னர் ஒரு சமூக ஊடக நேர்காணலை வழங்கிய முதல் நிகழ்வாக அமைந்தது. நிறுவனத்தின் துணை ஆசிரியராக இருந்த இவர் முகேசு அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட பின்னர் இவர் சிஎன்என்-ஐபிஎன்னிலிருந்து விலகினார்.[9][10] ரவிசங்கர் நேர்காணல் சம்பவம்9 நவம்பர் 2011 அன்று ஒரு நிகழ்ச்சியில், இவர் இந்து சமய ஆன்மீகத் தலைவர் ரவிசங்கரை "ஜாயினிங் அஸ் டுநைட்" என்ற நிகழ்ச்சியில் பல கேள்விகளைக் கேட்டு, அவருடைய பதில்களுக்கு முரணாகவும் விமர்சித்தார். ரவிசங்கர் திரையில் தோன்றும் போதெல்லாம், வீடியோ ஊட்டத்தில் "சிஎன்என்-ஐபிஎன் நேரடி நிகழ்ச்சி" எனக் காட்டப்பட்டது. இருப்பினும், அது முன்னதாகவே பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரது அறிக்கைகள் திருத்தப்பட்டு இவரது நேரடி கேள்விகளுக்கான பதில்களாக வழங்கப்பட்டன. இது விமர்சிக்கப்பட்டபோது, இவர் "தொழில்நுட்ப சிக்கல்களை" மேற்கோள் காட்டினார். இவரும் செய்தி நிறுவனமும் பின்னர் முறையான மன்னிப்பு கேட்டனர்.[11] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia