சாம்பல் கூழைக்கடா
சாம்பல் கூழைக்கடா (Spot-billed pelican) என்பது கூழைக்கடா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தெற்காசியாவில் தென் ஈரானிலிருந்து இந்தியா முழுவதுவும், கிழக்கு இந்தோனேசியா வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது பெரிய உள்நாட்டு மற்றும் கடலோர நீர்நிலைகள், குறிப்பாக பெரிய ஏரிகளில் காணப்படும் பறவை ஆகும். தொலைவில் இருந்து பார்க்கும்போது, மற்ற கூழைக்கடாக்களில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காண்பது கடினம். ஆனால் அருகிலுருந்து காணும்போது இவற்றின் மேல் தாடையில் உள்ள புள்ளிகள், பிரகாசமான வண்ணங்கள் இல்லாமை, சாம்பல் நிற இறகுகள் ஆகிய தனித்த அடையாளங்களால் இவற்றை அடையாளம் காணமுடியும். சில பகுதிகளில், இந்த பறவைகள் மனித குடியிருப்புகளுக்கு அருகில் தங்கள் குடியிருப்பைக் கொண்டு கூடு கட்டுகின்றன. விளக்கம்![]() சாம்பல் கூழைக்கடா என்பது பெரிய அளவிலான நீர்ப் பறவையாகும். தென்னிந்தியப் பகுதியில் காணப்படும் பூர்வீக பறவைகளில் பெரிய பறவைகளில் ஒன்றாகும். இருப்பினும் இவை கூழைகடாக்களில் மிகவும் சிறிய பறவைகளில் ஒன்றாகும். இவை 125–152 செமீ (49–60 அங்குலம்) நீளமும் 4.1–6 கிலோ (9.0–13.2 பவுண்டு) எடையும் கொண்டவை. இறக்கைகள் விரித்த நிலையில் இவற்றின் அகலம் 213 முதல் 250 செமீ (7 அடி 0 முதல் 8 அடி 2 அங்குலம்) வரை மாறுபடும் அதே சமயம் பொதுவாக பெரிய பறவைகள் 285 முதல் 355 மிமீ (11.2 முதல் 14.0 அங்குலம்) வரை இருக்கும். [2] இதன் தலையும், கழுத்தும் வெண்மை நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி சாம்பல் தோய்ந்த வெண்மை நிறத்திலும், முதுகு, பிட்டம், வால் போர்வை இறகுகள் சாம்பல் தோய்ந்து அழுக்கு வெள்ளை நிறத்தில் இருக்கும். மேல் அலகில் மஞ்சள் முனை கீழ்நோக்கி வளைந்து இருக்கும். கீழ் அலகில் நெடுக்க தொங்கும் பை உள்ளது. பை இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து ஊதா நிறம் வரை இருக்கும். மேலும் பெரிய வெளிர் புள்ளிகள் காணப்படும். மேலும் மேல் தாடையின் பக்கங்களிலும் புள்ளிகள் காணப்படுகின்றன. உடலின் அடிப்பகுதி சாம்பல் நிறம் தோய்ந்த வெண்மை நிறத்தில் இருக்கும். வால் குறுகளாக வட்டமாக இருக்கும். [3] புதிதாக பொரித்த குஞ்சுகள் வெள்ளை நிற இறகால் மூடப்பட்டிருக்கும். பின்னர் அவை சாம்பல் நிற புள்ளிகள் கொண்ட இறகுகளாக மாறும். அலகில் உள்ள புள்ளிகள் ஒரு ஆண்டுக்குப் பிறகுதான் தோன்றும். முழுக்க வளர்ந்த இனப்பெருக்க இறகுகள் இவற்றின் மூன்றாம் ஆண்டில் தோன்றும். [4] பரவலும் வாழ்விடமும்![]() தீபகற்ப இந்தியா, இலங்கை, கம்போடியா போன்ற இடங்களில் மட்டுமே இந்த இனங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. மாலத்தீவுகள், பாக்கித்தான், வங்கதேசம் போன்ற பிராந்தியங்களின் பல பகுதிகளில் இதன் இருப்பு பற்றிய அறிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. [3] இவற்றின் முக்கிய வாழ்விடமாக ஆழமற்ற நன்னீர் உள்ள பகுதி ஆகும். சாம்பல் கூழைக்கடாக்கள் புலம்பெயர்பவை அல்ல, ஆனால் இவை உள்ளூர் பகுதிகளில் இயங்குவதற்காக அறியப்படுகின்றன. மேலும் இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில் பரவலாக இடம்பெயர்கின்றன. ![]() இந்த இனம் பொதுவாக கூட்டமாக கூடுகட்டி வாழ்பவை. பெரும்பாலும் மற்ற நீர்ப்பறவைகள் கூடுகட்டும் இடங்களில் தாங்களும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. சதுப்பு நிலங்களுக்கு அருகிலும் சில சமயங்களில் மனித குடியிருப்புகளுக்கு அருகிலும் மரங்களில் கூடுகள் கட்டும். பல பெரிய கூட்டங்கள் பதிவு செய்யபட்டுள்ளன. பல கூட்டங்கள் மறைந்தும் போயின. 1906 சூனில், சி.இ ரீனியஸ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளத்தில் இந்தப் பறவைகள் கூடுகட்டியுள்ள ஒரு பகுதிக்கு சென்றார். அங்கு உள்ள கிராம மக்கள் இந்தப் பறவைகளை புனிதமானவையாகக் கருதினர். [5] அதே பகுதிக்கு 1944 இல் மீண்டும் சென்று பார்வையிடப்பட்டது, அங்கு 10 கூழைக்கடா கூடுகளும் கிட்டத்தட்ட 200 மஞ்சள் மூக்கு நாரைகளின் கூடுகளும் இருப்பது கண்டறியப்பட்டது. [6] பர்மாவில் உள்ள சிட்டாங் ஆற்றில் 1877 ஆம் ஆண்டில் "மில்லியன் கணக்கான" கூழைக்கடாக்கள் இருந்ததாக இ.டபிள்யூ ஓட்ஸ் கூறினார். மேலும் 1929 ஆம் ஆண்டில் இ. சி. ஸ்டூவர்ட் பேக்கர் இவை பெருநாரைகளுடன் ஆயிரக்கணக்கான கூடுகளைக் கொண்டி குடியிருந்ததாக அறிவித்தார்: இந்த குடியிருப்புகள் 1930 கள் மற்றும் 1940 களுக்கு இடையில் காணாமல் போனதாக பி.இ. ஸ்மிதீசால் தெரிவிக்கப்பட்டது. [7] மற்றொரு பெருங் கூட்டம் 1902 இல் கடப்பா மாவட்டத்தில் உள்ள புச்சுபல்லே என்ற சிற்றூரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கூழைக்கடாக்கள் மார்ச் மாதத்தில் மஞ்சள் மூக்கு நாரைகள் கூட்டதுடன் கூடு கட்டியிருந்தன. [8] இந்த கூட்டம் மீண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. [7] கொல்லேறு ஏரிப் பகுதியில் ஒரு கூட்டம் 1946 ஆம் ஆண்டு கே. கே. நீலகண்டனால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் இங்கள் கிட்டத்தட்ட 3000 கூழைக்கடாக்கள் கூடு கட்டியிருந்தன. [7] [9] இருப்பினும் இந்தக் கூட்டம் 1975 இல் காணாமல் போனது. [10] [11] [12] வாழ்விட இழப்பு மற்றும் மனிதர்களின் இடையூறுகள் காரணமாக, சாம்பல் கூழைக்கடாக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் தென்கிழக்கு ஆசியாவில் (சீனாவின் சில பகுதிகள் [13] உட்பட) ஏராளமான பறவைகள் அழிந்துவிட்டன. [14] இந்த இனத்தின் அறிவயல் பெயரில் பிலிப்பீன்சு குறிக்கப்பட்டுள்ளது. அங்கு 1900 களின் துவக்கத்தில் இந்த இனங்கள் ஏராளமாக இருந்தன ஆனால் 1960 களில் குறைந்துவிட்டது மேலும் உள்நாட்டில் அழிந்துவிட்டது. [15] தென்னிந்தியாவில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது. [16] 2007 செம்பட்டியலினால் இவற்றிற்கு அதிகரிக்கபட்ட பாதுகாப்பால் இவற்றின் எண்ணிக்கையில் மீண்டு வர உதவியது. இந்த இனங்களின் நிலை அச்சுறுத்தல் நிலைக்கு உள்ளான உள்ளான நிலையில் இருந்து அச்சுறுத்தலுக்கு அண்மித்த நிலைக்கு மாறியுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. [1] நடத்தையும், சூழலியலும்![]() இவை மிகவும் அமைதியானவை, இருப்பினும் இவை சிலசமயங்களில் தங்கள் கூடுகளில் கூச்சலிடலாம், உறுமலாம். இவை கூடு கட்டி வாழும் குடியிருப்பைப் பற்றிய சில ஆரம்பகால விளக்கங்கள் இவை அவற்றில் அமைதியுடன் தனித்தன்மையாக இருப்பவை என்று கூறுகின்றன. ஆனால் பெரும்பாலான குடியிருப்புகள் சத்தமுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.[7] மற்ற கூழைக்கடாக்களைப் போலவே, இவை தண்ணீரின் மேற்பரப்பில் நீந்தும்போது தன் வாயில் உள்ள பெரிய பையினால் மீன்களை பிடிக்கின்றன. வெள்ளை கூழைக்கடாக்களைப் போலல்லாமல், இவை பெருக் கூட்டமாக சேர்ந்து உணவு தேடாது. பொதுவாக தனித்தனியாக அல்லது சிறிய கூட்டங்களாக மீன் பிடிக்கும். இருப்பினும் சிலசமயங்களில் குழுவாக இணைந்து நீரில் வரிசையாக இருந்து இறக்கைகளை தட்டி மீன்களை ஆழமற்ற பகுதிகளை நோக்கி விரட்டி பின்னர் வேட்டையாடும். தங்கள் இருப்பிடத்துக்கு அல்லது உணவு தேடும் பகுதிகளுக்கு பறக்கும் போது, சிறிய குழுக்களாக v வடிவில் பறக்கும். பகலில் வெப்பமான நேரத்தில், உயரமாக ஏறும் வெப்பமான காற்றில் இவை மிதந்து செல்லும். இரவில் இவை ஓரளவுக்கு தீவனம் தேடும்.[17] இப்பறவைகள் மரங்களில் கூடுகள் கட்டும். இவற்றின் இனப்பெருக்க காலம் அக்டோபர் முதல் மே வரை என மாறுபடும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து இவற்றின் இனப்பெருக்க காலம் துவங்குகிறது.[18] [19] இவை பொதுவாக மற்ற நீர்ப்பறவைகளுடன், குறிப்பாக மஞ்சள் மூக்கு நாரைகளுடன் கலந்து ஒரே பகுதியில் நெருக்கமாக கூடு கட்டுகின்றன. மூன்று முதல் நான்கு வெள்ளை நிற முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் பின்னர் அழுக்காகிவிடும். முட்டைகளில் இருந்து சுமார் 30-33 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை கூட்டிலேயே வளர்கின்றன.[18] பிடித்து வளர்க்கபடும் குஞ்சுகள் இரண்டு வயதிற்குப் பிறகு இனப்பெருக்கம் செய்கின்றன. [20] இவற்றின் கீழ் அலகில் நீளவாக்கில் தொங்கும் பை மீன் பிடிக்கும் வலைபோல இவற்றிற்கு பயன்படுகின்றன. வெயில் காலத்தில் அப்பயில் இருந்து வடியும் நீர் இவற்றின் உடல் வெப்பத்தை தணிக்கப் பயன்படுகிறது.[21] பண்பாட்டில்இந்த இனம் ஒரு காலத்தில் கிழக்கு வங்காளத்தின் சில பகுதிகளில் உள்ள மீனவர்களால் குறிப்பிட்ட மீன்களை பிடிக்க பொறியாக பயன்படுத்தப்பட்டது. அந்த மீனவர்கள் இப்பறவையின் எண்ணெய் சுரப்பு கொலிசா மற்றும் அனபாஸ் போன்ற சில மீன்களை ஈர்ப்பதாக நம்பினர். [22] டி. சி. ஜெர்டனின் காலத்திலிருந்தே இந்தப் பறவைகள் மனித வாழ்விடங்களுக்கு அருகாமையில் கூடு கட்டி வாழ்ந்தது தெரியவருகின்றது. இவை வாழும் இடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் பல மறைந்துவிட்டாலும் மற்றவை பாதுகாக்கப்பட்டு, கூடு கட்டும் குடியிருப்புகளைக் கொண்ட சில சிற்றூர்கள் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன. கொக்ரெபெல்லூர், கூத்தங்குளம், உப்பலபாடு ஆகியவை இவற்றின் கிடியிருப்புகளைக் கொண்ட நன்கு அறியப்பட்ட சிற்றூர்களாகும். [11] [23] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia