சிருங்காரம் 2007 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் சாரதா ராமநாதன் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம்[2][3][4][5]. எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் இப்படத்தின் திரைக்கதை, வசனம் அமைப்பதில் இணைந்து பணிபுரிந்துள்ளார்[6]. பத்மினி ரவி இப்படத்தைத் தயாரித்தார்[7][8].அறிமுக நாயகி அதிதி ராவ் ஹைதாரி[9][10][11] இரு வேடங்களிலும் மற்றும் மனோஜ் கே. ஜெயன், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 1920 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பதாகக் கதை அமைந்தது[12]. தேவதாசி முறையைக் கதைக்களமாகக் கொண்ட திரைப்படம்[13].
பரதநாட்டிய கலைஞரான வர்ஷினிக்கு இந்தியா குடியரசாக அறிவிக்கப்படும் தினத்தன்று நடைபெறும் விழாவில் நடனமாட இந்தியாவின் தலைநகரத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. அவளை குழந்தையிலிருந்து வளர்த்து வரும் கோயில் அர்ச்சகர் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று கோயிலில் நாட்டியமாடும் காமா என்ற நடனப் பெண்ணிடம் அறிமுகம் செய்கிறார். அதன் பின் கதை கடந்த காலத்திற்குச் (1920 ஆம் ஆண்டு) செல்கிறது. கோயிலில் நடன மங்கையாக (தேவதாசி) இருக்கும் பெண் தன் வயது முதிர்வின் காரணமாக தன் வம்சத்தைச் சேர்ந்த மதுரா என்ற பெண்ணைக் கோயிலில் நடன மங்கையாக இருக்கத் தேர்வு செய்கிறார். தஞ்சாவூர் சமஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் மிராசு சுகுமார், மதுராவின் அழகில் ஈர்க்கப்படுகிறார். கோயிலில் தேவதாசியாக இருப்பவர்கள் மிராசுவின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள் என்பது மரபு. ஆனால் மதுராவிற்கோ நடனத்தில் தன் திறமையை வளர்த்து மிகச்சிறந்த நடன மங்கையாக வேண்டும் என்பதே இலட்சியம்.
கோயிலில் பணி செய்யும் கீழ் சாதியைச் சேர்ந்த பணியாள் சிவாவிற்கு மதுராவின் நடனம் என்றால் மிகப் பிரியம். "வந்தே மாதரம்" என்ற புரட்சிக் குழுவில் இணைந்திருக்கும் சிவா, மதுராவிடம் தவறாக நடக்க முயலும் மிராசுவை எச்சரிக்கிறான். இதனால் பொய்க்குற்றம் சாற்றப்பட்டு அவனை ஊரை விட்டு வெளியேற உத்தரவிடுகிறார்கள். ஊரைவிட்டு வெளியேறும் சிவா தன் குழுவுடன் இணைந்து செயல்படுகிறான். மிராசு, மதுராவைப் பயன்படுத்தி தஞ்சாவூர் ஆட்சியரை மயக்கி தன் காரியங்களை சாதித்துக் கொள்ள நினைக்கிறான். ஆனால் அவன் திட்டத்திற்கு உடன்பட மறுக்கும் மதுரா கோயிலிலிருந்து வெளியேறுகிறாள்.
மதுரா கோயிலை விட்டு வெளியேறுவதால் அவளது சகோதரி காமா தேவதாசியாக்கப்படுகிறாள். மிராசுவின் தீய எண்ணங்களை அறியும் காமா, மதுராவைப் போல் கோயிலைவிட்டு வெளியேற முயற்சிக்கிறாள். மதுரா தற்போது "வந்தே மாதரம்" குழுவில் சிவாவுடன் இணைந்துவிட்டதாக அறிகிறாள் காமா. அச்சமயம் கோயிலிலுள்ள புனிதமான பொருள் ஒன்று தொலைந்து போகிறது. அப்பொருளை திருடிச்சென்றதாக மதுராவின் மீது பழி சுமத்தப்படுகிறது. அவளைக் கைது செய்ய உத்தரவிடுகிறான் மிராசு. ஆனால் சிவா தானே திருடியதாக பழியேற்று சிறைக்குச் செல்கிறான். அக்குற்றத்திற்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கர்ப்பிணியாக இருக்கும் மதுரா பெண் குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்துபோகிறாள். அந்தக் குழந்தையே வர்ஷினி. வர்ஷினி உருவத்தில் தன் தாய் மதுராவைப் போலவே இருக்கிறாள். அதன்பின் வர்ஷினி என்ன செய்தால் என்பது மீதிக்கதை.
படத்தின் இசையமைப்பாளர் பத்ம பூஷன்லால்குடி ஜி. ஜெயராமன். பாடல்களை ஸ்வாதி வி.ஏ.ஆர். ஜெயராமன் எழுதியுள்ளார். இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார்[33][34]. சிருங்காரம் மட்டுமே இவர் பணிபுரிந்த ஒரே திரைப்படம்[35][36].