சீயோன் தேவாலயம் (Zion Church) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஒரு நற்செய்திப் பறைசாற்றுக் கிறித்தவக் கோவில் ஆகும்.[1] இக்கோவில் 1974 ஆம் ஆண்டில் இன்பம் மோசேசு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூத்த போதகர் வண. ரோசன் மகேசன் ஆவார்.[2]
சீயோன் தேவாலயம் கண்டியில் உள்ள கலங்கரைவிளக்கத் தேவாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] அத்துடன், இலங்கை சுயாதீனத் தேவாலய அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது.[3]
2019 ஏப்ரல் 21 ஆம் நாள் உயிர்ப்பு ஞாயிறு நாளன்று இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.[4] ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு திருப்பலிப் பூசை நடைபெற்ற அன்று காலை 08:45 மணியளவில் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் இசுலாமியத் தீவிரவாதக் குழுவின் உறுப்பினர் என நம்பப்படும் தற்கொலைக் குண்டுதாரி இக்குண்டை வெடிக்க வைத்ததில் குறைந்தது 28 பேர் உயிரிழந்தனர்.[5][6] குண்டுவெடிப்பின் போது தேவாலயத்தின் தலைமைக் குருவானவர் வண. ரோசன் மகேசன் நோர்வே சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.[7]