செதில்கள் அதிக அளவில் கீலுடையதாகவும் கீலிணைப்புகளின் ஓரங்கள் இரம்பப்பற்களைப் போல இருப்பதாலும் இப்பாம்பிற்கு இரம்பச்செதில் விரியன் [அ] வாட்செதில் விரியன்- Saw-scaled viper என்ற பெயர் வந்தது.
இது சலசலவென்றும் புஸ்ஸென்றும் ஒலிப்பதால் ஊது சுருட்டை, குறட்டைப் பாம்பு என்று அழைக்கப்படுகிறது.
அழகிய கம்பளம் போன்ற நிறமுடையதால் கம்பள விரியன் என்றும் அழைக்கப்படுகிறது [3]
உடல் தோற்றம்
புல் விரியன்
தலை முக்கோண வடிவில் இருக்கும்; அதில் அம்பு வடிவில் வெள்ளைக்குறி காணப்படும். தலை கழுத்தை விடவும் பெரியது. தலையின் மேற்பரப்பிலுள்ள செதில்கள் சிறியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
தடிமனான, சிறிய உடலையுடையது.
கண் பெரியதாகவும் கண்மணி செங்குத்தாகவும் உள்ளது.
வால் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
E. carinatus பக்கவாட்டில் வளைந்து செல்லுதல்
இயல்பு
அளவில் சிறியதாக இருந்தாலும் (45 - 60 செ.மீ.), இதன் நஞ்சு அல்லது நச்சு சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு (hemotoxin) வகையைச் சேர்ந்தது; வீரியம் வாய்ந்தது; தொல்லை தரப்பட்டால் உடன் தாக்கக்கூடியது; பெரும்பாலான இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களே காரணமாகின்றன.[4]
தொந்தரவு தரப்படும்போது, இது தன் உடலை இரு சுருள்களாக எண் 8 வடிவத்தைப் போல சுருட்டிக்கொண்டு அச்சுருள்களை ஒன்றோடொன்று தொடர்ச்சியாக உராய்விக்கும்; அப்போது உப்புக்காகிதத்தைத் தேய்த்தால் உண்டாகும் ஒலி போன்ற சலசலப்பு உரக்கக் கேட்கும்.[3]
பெரும்பாலும் இரவில் நடமாடக்கூடியது; காலை வெயிலில் குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
காய்ந்த வெளி, மணல்/பாறைப் பாங்கான சமவெளி/மலை, மலைப்பாங்கான இடத்திலுள்ள பாறைப்பகுதி ஆகிய இடங்களில் அதிகம் காண முடியும்.
பகலில் பாறைகளுக்கடியில், மரப்பட்டைகளுக்குப் பின்னால், முட்செடிகளின் அடி போன்ற இடங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.