செல்வக் கடுங்கோ வாழியாதன் (செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் | செல்வக் கடுங்கோ வாழி ஆதன்) கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பொறையர் குடிச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் பெயர்கள் 4 வடிவங்களில் குறிப்பிடப்படுகின்றன.
சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவன் பெயரை பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் செல்வக் கடுங்கோ வாழியாதன் எனக் குறிப்பிடுகிறார். சேரர்களில் பொறையர் மரபைச் சேர்ந்த இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந்தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் அரசனானான்[1]. இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார்.
சேரமான் கடுங்கோ வாழியாதன்
சேரமான் கடுங்கோ வாழியாதன் கொங்கு நாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர்களில் ஒருவன். புலவர் கபிலர் ஞாயிற்றோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். [2]
பாடலிலேயே இவனது பெயர் 'செல்வக் கடுங்கோ வாழியாதன்' எனக் குறிக்கப்படுகிறது. புறநானூற்றைத் தொகுத்தவர் இவனைச் 'சிக்கற்பள்ளித் துஞ்சிய சொல்வக் கடுங்கோ வாழியாதன்' என்று குறிப்பிடுகிறார். புலவர் இவனைப் 'பூழியர் பெருமகன்' எனப் போற்றுகிறார். வஞ்சி முற்றம் வஞ்சிப் புறமதிலில் அலைபோதும் பொருநை ஆற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்துகிறார். பகைவர் பணிந்து தந்த திறையை இவன் தன் நகைப்புல இரவலர்களுகெல்லாம் வாரி வழங்கினானாம். புலவருக்கு அவரது சிறுமையை நோக்காது தன் பெருமையை எண்ணி களிறு, மா, ஆனிரை, நெல்லோடு கூடிய போர்களங்கள் ஆகியவற்றை வழங்கினானாம். [3]
பதிற்றுப்பத்து தரும் செய்திகள்
பெயர் விளக்கம்
’செல்வக் கோ’ என்றும், [4] ‘செல்வக் கடுங்கோ’ என்றும் [5] இவன் போற்றப்படுவது நண்பர்களுக்கு இவன் செல்வம் போல் விளங்கியதால் எனத் தெரிகிறது. [6]
தமிழ் மன்றம்
போர் வெற்றியில் கிடைத்த இவனது செல்வமெல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்புக்குப் பயன்பட்டதனாலும் இவனைச் செல்வக்கோ என்றனர். [7]
கபிலர் பாடியது ஏன்
பாரி இறந்தான், காப்பாற்று என்று கபிலர் இவனைப் பாடவில்லையாம். கொடைப் புகழைக் கேள்வியுற்றுப் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பத்துப் பாடல்களைப் பாடினாராம். [8]
மாவள்ளல்
கொடுத்துவிட்டோமே எனக் கவலைப்படுவதோ, கொடுக்கிறோம் என மகிழ்வதோ இல்லாமல் வழங்கும் இவன் மாவள்ளல். [9]
மாய வண்ணன் இவனது நல்லாசிரியன். இவன் ஓதுவதற்காக நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரையே வழங்கினான். அவனை அமைச்சனாகவும் கொண்டான்.
பாடிய புலவர் கபிலர்க்குச் சிறுபுறம் என்று நூறாயிரம் காணமும் (அக்கால நாணயத்தின் பெயர்) பெருபுறமாக ‘நன்றா' என்னும் குன்றின்மீது]] ஏறி நின்று, தன் கண்ணுக்கும் புலவர் கண்ணுக்கும் தெரிந்த ஊர்களையெல்லாவற்றையும் கொடுத்தான்.
இவனுடைய காலத்தில் தமிழகத்தில் சமணம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் சமணத் துறவிகளுக்குப் பாறைக் குகைகளில் படுக்கைகள் உளியால் செதுக்கி உருவாக்கிக் கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. கருவூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு[20] இவனைக் "கோ ஆதன் சொல்லிரும்பொறை" எனக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படுபவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்[21]. இவன் மகன் பெருங்கடுங்கோ என்றும், பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்றும் அக் கல்வெட்டு மூன்று கால்வழியினரைக் காட்டுகிறது. இக் கல்வெட்டு அசோகன் காலத்து எழுத்தில் உள்ளது. இந்த எழுத்துக்குத் தமிழி எனப் பெயர் சூட்டியுள்ளர். இந்த எழுத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆகும்.
↑ஞாயிறே! நீ பகலில் மட்டும் ஒளி வழங்குகிறாய். நீ மாலையில் மாண்டுவிடுகிறாய். இவன் இரவிலும் வழங்குகிறான். அதனால் உன்னைக்காட்டிலும் இவன் மேலானவன். - புறநானூறு 8