சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவர். இவர் சோழன் செங்கணான் என்பவரோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டார். சிறையில் வாடிய அவர் ஒருமுறை தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடிக்க மறுத்து ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அப்போது அவர் தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது[1].

பாடல்

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?

அக்கால வழக்கம்

பிறந்த குழந்தை இறந்துவிட்டாலும், பிறக்கும்போதே சதைப் பிண்டமாகப் பிறந்துவிட்டாலும் அந்தப் பிறவிக் குழந்தையை ஆண்மகன் அல்லவென்று எண்ணி அதனை வாளால் காயப்படுத்துவர். இப்போது நான் காயமில்லாமல் வஞ்சகத்தால் பிடிபட்டுக் கிடக்கிறேனே, நான் ஆண்மகன் ஆவேனா?

அன்றியும் என் வயிற்றுத் தீயைத் தணித்துக்கொள்வதற்காகத் தண்ணீரைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன். இதனை உண்ணவும் வேண்டுமா? (உண்ணக்கூடாது என்று எண்ணி நீரையும் உண்ணாமல் கிடந்து நா வறண்டு உயிர் நீத்தான்) சங்ககாலத் தண்டனை இவ்வாறு இருந்தது.

அருஞ்சொல்

மதுகை = மன வலிமை
கேளல் கேளிர் = பகைவர் தந்த உறவாளி (காவலன்)
வேளாண் = உதவும் ஆண்மை
சிறுபதம் = சிற்றுணவாகிய தண்ணீர்

மூன்று பேர்

கணைக்கால் இரும்பொறை என்னும் பெயருடன் மூவேறு காலகட்டங்களில் சேர அரசர்கள் வாழ்ந்ததை முன்னோரின் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சோழன் செங்கணான் வரலாற்றை இங்கு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  1. சங்ககாலப் புலவனாகவும் காணப்படும் இந்தச் சேர மன்னன் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் சோழன் செங்கணானோடு போரிட்டபோது, சோழனால் சிறைபிடிக்கப்பட்டு, உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் தன்மான வீரனாய் உயிர் துறந்தவன். புறநானூறு 74 பாடலுக்குத் தரப்பட்டுள்ள குறிப்பு காலம் கி.பி. 125-150. இவன் சங்ககாலச் சேரர்களின் கடைசி அரசன்.
  2. களவழி நாற்பது நூலைக் கேட்டு விடுவிக்கப்பட்டவன். கழுமலம் என்னும் ஊரில் போரிட்டவன். காலம் சற்று முன்பின்னாக கி.பி. 400
  3. கோயில் கட்டிய கோச்செங்கணான் வரலாற்றோடு குழம்பிக் கிடப்பவன். காலம் சற்று முன்பின்னாக கி.பி. 500

காண்க

குறிப்புகள்

  1. புலியூர்க் கேசிகன், 2004. பக். 126

வெளி இணைப்பு

சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடல் புறநானூறு 74] ]

உசாத்துணைகள்

  • புலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரை, பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya