சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் (Sher-e-Bangla Cricket Stadium) அல்லது ஷேர்-ஈ-பங்களா தேசிய துடுப்பாட்ட அரங்கம் (SBNS), வங்காளதேசத்தில் தாக்காவின் மிர்பூர் தாணா மாவட்டத்தில் உள்ள ஓர் துடுப்பாட்ட அரங்கமாகும். 2006ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரங்கம் 35,000 பார்வையாளர்களைக் கொள்ளும்.[1] துவக்கத்தில் "மிர்பூர் அரங்கம்" எனப் பெயரிடப்பட்டிருந்தாலும், வங்காளதேச அரசு பின்னர் இதற்கு ஷேர் - ஈ- பங்களா துடுப்பாட்ட அரங்கம் என மறுபெயரிட்டது. வங்காளதேசத்தின் மிகவும் மதிக்கப்படும் தலைவரும் 1940களில் விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கெடுத்தவருமான ஏ. கே. ஃபசுலுல் ஹக் நினைவாக இந்தப் பெயர் இடப்பட்டது. தாக்கா நகரின் மையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. தாக்காவின் நகரினுள்ளேயே இருந்த பங்கபந்து தேசிய அரங்கத்திலிருந்து இங்கு மாறியது மிகுந்த கண்டனத்திற்கு உள்ளானது; இருப்பினும் துடுப்பாட்டத்திற்கே உரித்தான அரங்கத்தை விரும்பிய வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் இந்த அரங்கத்தை கட்டியது. இந்தத் துடுப்பாட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள நீர்வடிகால்கள் துணைக்கண்டத்திலேயே சிறந்த அமைப்புகளாகும். முன்னர் இருந்த தடகள ஆடுகளத்தை முற்றிலும் பெயர்த்தெடுத்து புதிய கற்களும் மண்ணும் இட்டு தயார் செய்கையில் பிவிசி குழாய்களை இட்டு நீர் வடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மையத்திலிருந்து எல்லைகள் 29 அங்குலம் தாழ்வாக உள்ளன. எனவே மழை நின்ற சிலமணித் துளிகளிலேயே துடுப்பாட்டத்தை துவங்க முடியும். இந்த அரங்கத்தில் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மே 2007ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே நடைபெற்றது. 2011 உலகக்கிண்ணத்திற்காக சீரமைக்கப்பட்டது. மேற்கோள்கள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia