டுரூபாக் கடற்கால்வாய் சண்டை
டுரூபாக் கடற்கால்வாய் சண்டை (Battle of Drøbak Sound) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இசுக்கேண்டிநேவியாவில் நிகழ்ந்த ஒரு கடற்படை சண்டை. நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நார்வே மீதான நாசி ஜெர்மனியின் படையெடுப்பில் பங்கு கொண்ட ஜெர்மானியக் கப்பல்களை நார்வே கடலோர பீரங்கிக் குழுமங்கள் தாக்கி தாமதப்படுத்தின. ஏப்ரல் 9, 1940 அன்று நார்வே மீதான ஜெர்மானியப் படையெடுப்பு தொடங்கியது. வெசெரியூபங் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த இதில் கடல்வழியாக ஜெர்மானியப் படைகள் நார்வே மீது படையெடுத்தன. நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவைக் கைப்பற்றி நார்வே நாட்டு மன்னர் ஏழாம் ஹாக்கோனைக் கைது செய்யவும், நார்வே அரசாட்சியை நாசிச ஆதரவாளர் விட்குன் குவிஸ்லிங் கையில் ஒப்படைக்கவும் ஜெர்மானியர்கள் திட்டமிட்டனர். இதற்காக ஒரு கடற்படைக் குறிக்கோள்பிரிவு (naval taskforce) ஓஸ்லோவைக் கைப்பற்ற அனுப்பபட்டது. ஓஸ்லோ கடல்நீரேரி (Oslofjord) வழியாக அக்குறிக்கோள் படை ஓஸ்லோவை அணுகிய போது ஆசுக்கர்சுபோர்க் கோட்டையின் பீரங்கிக் குழுமங்களால் தாக்கப்பட்டது. ஆசுக்கர்சுபோர்க் கோட்டையில் உள்ள பீரங்கிகள் பழமையானவை அவற்றால் தங்கள் கப்பல்களுக்கு சேதம் உண்டாக்க முடியாது என்று ஜெர்மானியர்கள் எண்ணியிருந்தபடியால் இத்தாக்குதலை எதிர்கொள்ள அவர்கள் தயார் நிலையில் இல்லை. குறிக்கோள்படையின் முதன்மைக் கப்பலான கனரக குரூசர் புளூக்கர் மீது பல நார்வீஜிய பீரங்கி குண்டுகள் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அடுத்து ஆசுக்கர்சுபோர்க் கோட்டையின் நீர்மூழ்கிக் குண்டு குழுமங்கள் வீசிய நீர்மூழ்கிக் குண்டுக்கள் புளூக்கரை மூழ்கடித்தன. புளூக்கர் மூழ்கியபின்னர் ஜெர்மானியக் குறிக்கோள்படை பின்வாங்கி விட்டது. அதற்கு பதிலாக வான்வழியாக படைகளைத் தரையிறக்கி ஓஸ்லோவைக் கைப்பற்றினர் ஜெர்மானியர்கள். ஆசுக்கர்சுபோர்க் கோட்டையின் வலிமையை உணர்ந்து கொண்ட ஜெர்மானியர்கள் குண்டுவீசி வானூர்திகளின் மூலம் குண்டுவீசி அதைச் செயலிழக்கச் செய்தனர். ஏப்ரல் 10ம் தேதி ஆசுக்கர்சுபோர்க்கோட்டை சரணடைந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொண்டு நார்வே அரச குடும்பமும், அரசும் ஓஸ்லோவிலிருந்து தப்பிவிட்டனர். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia