தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழ் (Certified Information Systems Security Professional) என்பது (ISC)² என்றும் அழைக்கப்படும் சர்வதேச தகவல் அமைப்பு பாதுகாப்பு சான்றிதழ் கூட்டமைப்பால் வழங்கப்பட்ட ஒரு சுயாதீன தகவல் பாதுகாப்புச் சான்றிதழாகும் .
சனவரி, 2022 நிலவரப்படி, உலகளவில் 1,52,632 (ISC)² உறுப்பினர்கள் இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளனர். [1]
சூன் 2004 இல், தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழை அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலகமானது ISO/IEC தரநிலை 17024:2003 இன் கீழ் அங்கீகாரம் அளித்தது. [2][3] இதனை DoDD 8570 சான்றிதழ் தேவைக்காக தகவல் உறுதி தொழில்நுட்பம் (IAT), மேலாளரவியல் (IAM) மற்றும் கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியாளர் (IASAE) வகைகளில் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை முறையான படிப்பாக அங்கீகரிக்கத்துள்ளது. [4]
மே 2020இல், இலண்டனின் தேசிய கல்வி அங்கீகார தகவல் மையம், தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழை முதுகலை படிப்பிற்கு நிகரான 7ஆம் நிலையாக மதிப்பிட்டது. [5][6] இதன் மூலம் மின்வெளிப் பாதுகாப்பு வல்லுநர்கள் தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழை தங்களது மேற்படிப்பு வாய்ப்புகளை மேற்கொள்ள வழிவகை செய்யும் என கருதப்படுகிறது.[7]
வரலாறு
1980களின் மத்தியில், தரப்படுத்தப்பட்ட, விற்பனையாளர்-நடுநிலை சான்றிதழ் திட்டத்திற்கான தேவை எழுந்தது. நவம்பர் 1988இல், தரவு செயலாக்க மேலாண்மைச் சங்க உறுப்பினரன கணினிப் பாதுகாப்பிற்கான சிறப்பு ஆர்வக் குழு இது தொடர்பாக ஆர்வமுள்ள பல நிறுவனங்களையும் ஒன்றிணைத்தது. சர்வதேச தகவல் அமைப்புகள் பாதுகாப்பு சான்றிதழ் கூட்டமைப்பு அல்லது "(ISC)²" 1989 ஆம் ஆண்டின் மத்தியில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டது. [8]
1990இல், அறிவு பொது அமைப்பு ஒன்றினை நிறுவுவதற்கான முதல் பணிக்குழு உருவாக்கப்பட்டது. [9] இதன் முதல் பதிப்பு 1992இல் இறுதியானது, 1994இல் அறிமுக ஆவணம் வெளியானது.
2003இல், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் எனும் சமிக்கைப் புலனாய்வின் மத்திய உற்பத்தியாளர் மற்றும் முகமையாளர் அமைப்பு ISSEP திட்டத்திற்கான அடிப்படையாக இதனை ஏற்றுக்கொண்டது. [10]
தேவைகள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட (ISC)² தகவல் பாதுகாப்புத் திரளங்களில் குறைந்தபட்சம் ஐந்து வருட நேரடி முழுநேர பாதுகாப்பு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நான்கு வருட கல்லூரிப் பட்டம், தகவல் பாதுகாப்பில் முதுகலைப் பட்டம் அல்லது பல சான்றிதழ்களில் ஒன்றைப் பெற்றிருக்கும் பட்சத்தில் ஐந்தில் ஓராண்டு குறைக்கப்படலாம். [11] ஐந்து வருட அனுபவம் இல்லாத ஒரு நபர், தேவையான தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் . அந்தத் தேர்ச்சியானது அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் செல்லுபடியாகும். அந்த ஆறு ஆண்டுகளில் அந்த நபர் தேவையான அனுபவத்தைப் பெற்றிருப்பதோடு CISSP ஆக சான்றிதழுக்குத் தேவையான ஒப்புதல் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான அனுபவத்தை அந்த நபர் பெற்ற பின்னர் தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழ் நிலை அடைந்தவராக கருதப்படுவார். [12]
ஒழுக்கக் கோட்பாடு விதிகளை ஏற்பதாக உறுதியளித்தல்.[13]
குற்றம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்தல்.[14]
தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழுக்கான கொள்குறித் தேர்வில் தேர்ர்சி பெற வேண்டும்.(175 கேள்விகள் வரை உள்ள தேர்வு சுமார் 4மணி நேரம் நடைபெறும்) மொத்தமுள்ள 1000 புள்ளிகளில் 700க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற வேண்டும். தேர்வின் 8 திரளங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.[15]
உறுப்பினர்களின் எண்ணிக்கை
சனவரி 1, 2022இன் படி இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,52,632 ஆகும். [16]