தினேஸ் சந்திமல்
லொகுகே தினேஸ் சந்திமல் (Lokuge Dinesh Chandimal, சிங்களம்: දිනේෂ් චන්දිමාල් பிறப்பு: நவம்பர் 18, 1989), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரரும், இலங்கை அணிகளின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1][2] இலங்கையின் தென் மாகாணத்தில் இவர் பலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வலது கை மட்டையாளரான இவர் இலங்கை அணி விளையாடிய முதல் பகல் இரவு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தலைவராக இருந்தார். இலங்கை அணியின் குச்சக்காப்பாளராகவும் விளையாடி வருகிறார். 2012 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதிலும், 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் கோப்பை வெல்வதிலும் முக்கியக் காரணமாக இருந்தார். முதலில் இவர்தான் 2014 ஆம் ஆண்டின் இருபது 20 போட்டியைத் தலைமை தாங்கினார். ஆனால் மெதுவாக பந்துவீசியதால் இவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.[3] 2019 செப்டம்பர் 26 இல், இவர் இலங்கைத் தரைப்படை சேவையில் இணைந்து இலங்கை இராணுவ விளையாட்டு அணியில் விளையாடினார்.[4][5] 2020 ஆகத்தில், இலங்கை இராணுவ அணிக்காக சரசென்ஸ் ஸ்போட்ஸ் கழக அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி இலங்கையின் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 354 ஓட்டங்களைப் பெற்று சாதனை புரிந்தார்.[6] தனிப்பட்ட வாழ்க்கைடிசம்பர் 26, 2004 இல் இவரின் இல்லம் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையால் அழிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 14 ஆகும்.[7] இவர் தனது நீண்ட நாள் தோழியான இஷிகா ஜெயசேகரா என்பவரை மே 1, 2015 இல் கொழும்பில் திருமணம் செய்தார்.[8][9][10] சர்வதேச போட்டிகள்2010 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். தொடரின் துவக்கத்தில் இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும் விளையாடினார். பின் சூப்பர் எய்ட் சுற்றில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார். புளோரிடாவில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக இந்தியா, சிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய மூன்றுநாடுகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 118 பந்துகளில் 111 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் மிக குறைந்த வயதில்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்த இலங்கைத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் 6 இலக்குகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று இந்திய அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது. டிசம்பர், 2011 ஆம் ஆண்டில் டர்பனில் நடைபெற்ற தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் இரண்டாவதுபோட்டியில் இவர் அரிமுகமானார். இவரின் முதல்போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 58 ஓட்டங்களும், இரண்டாவது ஆட்டப்பகுதியில் 54 ஓட்டங்களும் எடுத்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் இரு ஆட்டப்பகுதியிலும் 50 ஓட்டங்கள் எடுத்த முதல் இலங்கை வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் தென்னாப்பிரிக்காவில் இலங்கை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்ய உதவினார்.[11] பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக இலக்குகளை கேட்ச் பிடித்த 6 ஆவது சர்வதேச வீரர் மற்றும் முதல் இலங்கை வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்குமுன் டாரென் சமி, அஜின்கியா ரகானே,பீட்டர் போரன், கோரி ஆன்டர்சன் மற்றும் பாபர் ஹயாத் ஆகியோர் இந்தச் சாதனை புரிந்துள்ளனர்.[12] சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia