திரிபுரனேனி இராமசாமி
திரிபுரனேனி இராமசாமி (சவுத்ரி) (Tripuraneni Ramaswamy ) (தெலுங்கு త్రిపురనేని రామస్వామి) (ஜனவரி 15, 1887 - ஜனவரி 16, 1943) ஆந்திராவில் வாழ்ந்த ஒரு வழக்கறிஞர், நாடக ஆசிரியர் மற்றும் சீர்திருத்தவாதி. இன்றைய ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் Angaluru கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இராமசாமி. தனது 23ஆம் வயதுக்குப் பின்னர் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி அடைந்த இராமசாமி அதே ஆண்டில் இரு நாடகங்களை எழுதினார். 1914 இல், அவர் பிரிட்டனுக்குச் சென்று சட்டம் பயின்றார். அதே போல் டப்ளினில் ஆங்கிலம் இலக்கியம் மற்றும் நவீன ஐரோப்பிய கலாச்சாரம் படித்தார். இந்த நேரத்தில், அங்கிருந்தபடியே ஆந்திராவில் வெளிவந்து கொண்டிருந்த கிருஷ்ணா பத்ரிகா எனும் வார இதழில் எழுதினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்ட இராமசாமி பல தேசபக்திப் பாடல்களை எழுதினார். இந்தியாவிற்கு திரும்பிய இராமசாமி சிலகாலம் தெனாலி நகரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சாதி ஒழிப்பு, சமுதயாய சீர்திருத்தம் போன்றவைகளில் கவனம் செலுத்தலானார்.[1] தனது பகுத்தறிவு எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவியாக இலக்கியத்தைப் பயன்படுத்திக் கொண்ட இராமசாமி நடைமுறைக்கு ஒவ்வாத பல மூடநம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடினார். அவரது புகழ் பெற்ற நூலான சூத்ர புராணம் பழைய புராணங்களைக் கடுமையாகத் தாக்கியது. பெரியார், அம்பேத்கர், புலே போன்ற பல சமூக சீர்திருத்தவாதிகளைப் போல இராமசாமியும் காங்கிரசைக் கடுமையாக எதிர்த்தார். புலே அவர்களைப் போலவே இவரும் ஆங்கில ஆட்சியையே விரும்பினார். இவர் எழுதிய சம்புக வதம் எனும் கவிதை நூல் காந்தியடிகள் மற்றும் இந்துக் கட்சியினர் விரும்பிய இராமராஜ்யத்தில் சூத்திரர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சத்தை உண்டாக்கியது. இந்துத் திருமணச் சடங்குகளை எதிர்த்த இராமசாமி எளிமையான விவாக விதி ஒன்றை ஏற்படுத்தினார். எளிமைத் திருமணங்கள் பலவற்றைத் தானே முன்னின்று நடத்தியும் வைத்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia