நாவரசு கொலை வழக்குநாவரசுக் கொலை வழக்கு இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின், கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின், இராசா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்ற முதலமாண்டு மாணவரான பொன்.நாவரசு 1996 ஆம் ஆண்டு நவம்பர் 6[1] அன்று அதே கல்லூரியில் பயிலும் இரண்டாமாண்டு முதுநிலை மாணவரான ஜான்டேவிட்டின் பகடிவதைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டார். அவர் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டியெடுத்து ஆற்றில் வீசியெறிந்தார் ஜான் டேவிட். இக்கொலைச்சம்பவத்திற்காக ஜான் டேவிட்டுக்கு கடலூர் நீதிமன்றம் 1998, மார்ச் 11 அன்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. பின் மேல்முறையிட்டீன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தால் அக்டோபர் 8, 2001[2] அன்று விடுதலை செயல்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கு தமிழக காவல் துறையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு[3] செய்யப்பட்டது. ஏப்ரல் 2011இல் உச்ச நீதிமன்றம் ஜான் டேவிடுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஆனால் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை அடுத்தடுத்து அனுபவிக்காமல், ஒரே நேரத்தில் அனுபவிக்கவேண்டுமென்றும் தீர்ப்பளித்தது. தீர்ப்பைத் தொடர்ந்து காவல் துறையிடம் சரணடைந்த ஜான் டேவிட் தற்போது சிறையில் உள்ளார்.[4][5] கொலை செய்யபட்ட மாணவர் நாவரசுவின் தந்தை சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான முனைவர் ப.க.பொன்னுசாமி [6]என்பவர் ஆவார். தங்களின் ஒரே மகனை இழந்த நாவரசுவின் பெற்றோர் வருங்காலத் தலைமுறையினரை நல்லவர்களாக ஆக்கும் பொருட்டு பொன் நாவரசு அறக்கட்டளை என்ற அமைப்பை 1997 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் துவக்கினர். இக்கொலை வழக்கின் பாதிப்புகளால், தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை (Tamil Nadu Prohibition of Ragging Act) 1997இல் தமிழ்நாடு அரசு இயற்றியது.[7] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia