நீரணி மாடம் என்பது சங்ககாலத் தமிழக மக்கள் பயன்படுத்திய உல்லாசப் படகு ஆகும். இதைத் தானக மாடம், பள்ளி ஓடம் என்றும் அழைப்பர்.[1][2][3]
அமைப்பு
இப்படகு நடுப்பகுதியில் மிகவும் அகன்று இருக்கும். இதன் பின்பக்கம் முன்பக்கத்தை விட உயர்ந்து காணப்படும். அகன்ற நடுப்பகுதியில் ஒரு சிறு மண்டபம் போன்ற அமைப்போ ஒரு சிறு குடிலோ இருக்கும். சில நீரணி மாடங்களில் மேல் நிலாவின் அழகைக் கண்டு இரசிக்க நிலா முற்றமும் அமைக்கப்பட்டிருந்தது. வாழைத் தண்டுகளை வேண்டும் இடம் எல்லாம் ஊன்றி நாசியும் கபோதமும் ஆகிய மாட உறுப்புகளையும் தோற்றுவித்து இருந்தனர். ஒவ்வொரு தளமும் எட்டுகோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இதைப் போன்று ஏழு தளங்கள் அமைந்த நீரணி மாடமும் இருந்தது.[4]
இப்படகு பாண்டிய நாட்டிலும்சோழ நாட்டிலும் நடந்த புனல் விளையாட்டுகளில் பயன்பட்டது.[5] இப்புனல் விளையாட்டில் நீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் போன்றவை அடங்கும்.[6]
அலங்காரம்
நீரணி மாடம் என்பது ஒரு உல்லாசப் படகு என்பதால் அதில் அலங்கார வேலைப்பாடுகளுக்கு குறைவில்லாமல் இருந்தது. அவற்றில் பின்வரும் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.[7][8]
பனை மட்டைகளையும் சிறு மூங்கில்களையும் கமுகு இலைகளையும் கொண்டு மாடம் அமைக்கப்பட்டிருந்தது.
நெட்டி மயிலின் பீலி போன்றவற்றைக் கொண்டு மட்டைகளும் மூங்கில்களும் இலைகளும் இணைக்கப்பட்டன.
வெள்ளை மயிலின் தோகையும் மான்கண், முத்து, பொன் போன்றவற்றால் ஆன சாரளங்களால் தூண்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவை மேலும் ஒளிவீசித் திகழும் பொருட்டுப் பொன்னிற ஓவியங்களைத் தீட்டிவைத்தும் இருந்தனர். அந்த ஓவியங்கள் பலகைகளைச் அழகுற அமைத்து வண்ணம் தீட்டிய நுண்ணிய நூலானாலும் கூட வரையப்பட்டிருந்தன.