நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை என்று நீரா ராடியா என்ற தொழில்முறை அரசியல் தரகருக்கும்[1] அரசியல்வாதிகள், தனியார் வணிகக் குழுமங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இதழாளர்களிடையே [2] 2008-2009 ஆண்டில் நடைபெற்ற உரையாடல்களை கண்காணித்த இந்திய வருமானவரித் துறையினரின் ஒலிநாடாக்களின் பொதுவெளிக் கசிவிற்குப் பிந்தைய சர்ச்சைகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு முன்னரே திட்டமிடப்பட்டதாகவும் மற்றும் பிற அரசியல் சட்டத்திற்கு புறம்பான முறைகேடுகள் நிகழ்ந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் இந்திய வருமானவரித் துறை 2008-2009ஆம் ஆண்டுகளில் நிதிக்குற்றங்கள், வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடான நிதிமாற்றல்களை கண்காணிக்கும் பொருட்டு நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை 300 நாட்கள் கண்காணித்து வந்தது.[10]
இந்த உரையாடல்களை மே 2010 அன்று இந்தி இணைய இதழ் (படாஸ்4மீடியா) ஒன்றில் முதல் செய்தி வெளியானது.[11] மேலும் தகவல்களுக்கு தகவல் பெறும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தது.[12]
2010 நவம்பரில், ஓப்பன் மாகசின்[13] மூத்த இதழாளர்கள்,அரசியல்வாதிகள், வணிக குழுமங்கள் ஆகியோருடன் நீரா ராடிய நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்களை செய்திக் கட்டுரையாக வெளியிட்டது.இதனை தொடர்புடைய அனைவருமே மறுத்தனர்.[14] மத்தியப் புலனாய்வுத் துறை இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விற்பனை குறித்த 8000 தொலைபேசி உரையாடல் பதிவுகளை கைக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.[15]