நேசம் சரவணமுத்து
லூயிசா நேசம் சரவணமுத்து (Luisa Naysum Saravanamuttu, 1897 - சனவரி 19, 1941) இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் ஆவார். 1932, 1936 ஆம் ஆண்டுகளில் அரசாங்க சபைக்கு இடம்பெற்ற தேர்தல்களில் இவர் கொழும்பு வடக்குத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] வாழ்க்கைக் குறிப்புபொறியியலாளரான ஏ. அருணாசலம், எமிலி தங்கம்மா குக் ஆகியோரின் மகளான நேசம் 1897 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். இவர் மருத்துவர் சேர் இரத்தினசோதி சரவணமுத்து என்பவரை 1915 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.[1] இவர்களுக்கு சீதா சரவணமுத்து, வேதாரணியம் சரவணமுத்து, இரத்தினகுமார் சரவணமுத்து, சந்திரா சரவணமுத்து என நான்கு பிள்ளைகள். அரசியலில்நேசத்தின் கணவர் இரத்தினசோதி சரவணமுத்து கொழும்பு வடக்குத் தொகுதியிலிருந்து இலங்கை அரசாங்க சபைக்கு 1931 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். இவர் கொழும்பு மாநகரசபையின் முதலாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தெரிவு செல்லுபடியற்றது எனவும் ஏழு ஆண்டுகளுக்குச் இவரது குடியியல் உரிமை ரத்துச் செய்யப்பட்டது. இதனையடுத்து 1932 மே 30ந் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் நேசம் சரவணமுத்து போட்டியிட்டார்.[1] இடைத்தேர்தலில் நேசம் சரவணமுத்துவுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, சட்டசபையில் அப்போதைய உதவிச் சபாநாயகர் எஃப். ஏ. ஒபயசேகராவும் முக்கியமானவர்கள். நேசம் சரவணமுத்துவை எதிர்த்துப் போட்டியிட்டவர் எச். எம். பீரிஸ். நேசம் சரவணமுத்து 13,114 வாக்குகள் பெற்று 8,681 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் என்ற பெருமைக்கு உரியவரானார்.[1][2][3] இன்னொரு இடைத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை நேசம் சரவணமுத்துவுக்கு ஏற்பட்டது. அவரது தேர்தல் செல்லுபடியற்றது எனத் தேர்தல் ஆட்சேபனை வழக்கில் தீர்ப்பாகியது. எனினும் அவரது குடியியல் உரிமை பறிக்கப்படாததால் இரண்டாவது இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டார்.[4] இரண்டாவது இடைத் தேர்தல் 1932 நவம்பர் 12 ஆம் நாள் நடைபெற்றது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எச். வி. காசிச்செட்டியிலும் பார்க்க 8106 மேலதிக வாக்குகள் பெற்று நேசம் சரவணமுத்து தெரிவானார்.[1] இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் 1936ம் ஆண்டு நடைபெற்றது. நேசம் சரவணமுத்து மீண்டும் வெற்றி பெற்றார். நேசம் சரவணமுத்து சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து 1941 ஜனவரி 19ந் திகதி தனது நாற்பத்தி நான்காவது வயதில் இறந்தார். கணவர் இரத்தினசோதி சரவணமுத்து கொழும்பு மேயராக இரண்டாவது தடவை தெரிவு செய்யப்பட்டதற்குப் பதினோராவது நாள் இவரது இறப்பு நிகழ்ந்தது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia