பத்ரகாளியம்மன் கோவில், சிவகாசி

பத்ரகாளியம்மன் கோவில் Badrakali Amman Temple
பத்ரகாளியம்மன் கோவில் Badrakali Amman Temple is located in தமிழ்நாடு
பத்ரகாளியம்மன் கோவில் Badrakali Amman Temple
பத்ரகாளியம்மன் கோவில் Badrakali Amman Temple
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவு:சிவகாசி
ஆள்கூறுகள்:9°27′23″N 77°47′52″E / 9.45639°N 77.79778°E / 9.45639; 77.79778
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

பத்ரகாளியம்மன் கோவில், சிவகாசி (Badrakali Amman Temple, Sivakasi) தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்திலுள்ள, சிவகாசி நகரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் திராவிடக் கட்டிடக்கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோவில், 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் ஐந்தடுக்குகள் கொண்ட நுழைவாயில் கோபுரத்தையும் அனைத்து சந்நிதிகளையும் உள்ளடக்கிய கருங்கல்லாலான சுற்றுச் சுவரையும் கொண்டுள்ளது.

கட்டிட அமைப்பு

நுழைவாயிலுக்கு முன்னுள்ள தூண்களாலான மண்டபம்

பத்ரகாளி, சிவனின் மனைவியான பார்வதியின் உக்கிரமான அவதாரமாகக் கருதப்படுகிறார். பத்ரகாளி அம்மன் கோவிலானது சிவகாசி நகரின் மிக முக்கிய அடையாளமாக உள்ளது.[1] இக்கோவிலின் இராச கோபுரமானது, முன்புறத்தில் 66 அடி (20 மீட்டர்) அகலமும் பக்கவாட்டில் 44 அடி (13மீட்டர்) அகலமும் 110 அடி (34 மீட்டர்) உயரமும் கொண்டதாகும். இந்தக் கோபுரம் மற்ற கோவில்களை போல் சந்நிதிக்கு நேராக அமையவில்லை. கோவிலின் தலைமைத் தெய்வமான பத்ரகாளி, நுழைவாயில் கோபுரத்தின் இடப்புறத்தில் மேற்கு நோக்கியமைந்த சந்நிதியில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கருவறையின் மேலமைந்த விமானம் தங்கத்தகடுகளால் வேயப்பட்டதாகும். சந்நிதிக்கு நேர்முன்பாக பெரியத் தெப்பக் குளமும் மணிக் கோபுரமும் அமைந்துள்ளன. இங்கு ஏரம்ப விநாயகர் என்றழைக்கப்படும் உக்கிரத் தோற்றத்துடன் ஐந்து தலைகளோடு கூடிய விநாயகரின் சந்நிதி உள்ளது. வழக்கமாக விநாயகரின் இத்தோற்றமானது அவர் தனது தாய் பார்வதியிடமிருந்துப் பெற்ற சிங்க வாகனத்துடன் இருக்கும். ஆனால் அவர் இக்கோவிலில் பெருச்சாளி வாகனத்தில் தோற்றமளிக்கிறார். கருவறையைச் சுற்றி பார்வதியின் எட்டு அவதார வடிவங்களுடன் கூடிய சந்நிதிகள் அமைந்துள்ளன. கோவில்குளத்தின் அருகே ஐயப்பன், முருகன், அகோர மூர்த்தி ஆகிய தெய்வங்களுக்கு சிறு கோவில்கள் அமைந்துள்ளன.[2]

வரலாறு

கோவிலின் உட்புறத்தில் அமைந்துள்ள தெப்பக்குளம்

1800 ஆம் அண்டுகளில் வணிக ஆர்வம் மிக்க நாடார் சமுதாயத்தினர் சிவகாசி நகரில் தங்களின் வணிக தளத்தினை அமைத்தனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் வணிகத்தில் அவர்களின் வேகமான எழுச்சி, மறவர் சமுதாயதினருடனான மோதலுக்கு வழிவகுத்தது. நாடார்கள் பத்ரகாளி அம்மன் கோவில் மற்றும் நகரின் வடக்கில் இருந்த பல சிறிய கோவில்களுக்கான உரிமை கொண்டிருந்தனர். சிவகாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 1899 ஆம் ஆண்டு அவர்கள் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். இந்நிகழ்வு சிவகாசி கலவரம் என்று அறியப்படும் தொடர் கலவரத்திற்கு வித்திட்டது. கலவரம் நிகழ்ந்தபோது தொடர்ந்து பல நாள்களுக்கு பத்ரகாளியம்மன் கோவில் மூடப்பட்டதுடன் திருவிழாக்களும் இரத்து செய்யப்பட்டன. இக்கலவரத்தின்போது 22 பேர் கொல்லப்பட்டனர். 800 வீடுகளும் நகரின் மையப் பகுதியிலிருந்த பெரியத் தேரும் (திருவிழாக் காலங்களில் கோவிலால் பயன்படுத்தப்படுவது) தீக்கிரையாக்கப்பட்டன. இறுதியாக, இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பிறகு 1899 ஆம் ஆண்டு சூலை மாத நடுவில் இக்கலவரம் முடிவுக்கு வந்தது.[3][4][5][6]

திருவிழாக்கள்

இக்கோவிலில் உள்ள பூசாரிகள் தினந்தோறும் மற்றும் திருவிழாக் காலங்களிலும் உரிய பூசைகளைச் செய்கின்றனர். வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை, இரு வாரத்திற்கொரு முறை நடத்தப்பட வேண்டிய வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. இக்கோவில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். முழுநிலவு நாளில் மட்டும் நாள்முழுதும் திறந்திருக்கும். பங்குனிப் பொங்கல் மற்றும் சித்திரைப் பொங்கல் ஆகிய ஆண்டுத் திருவிழாக்கள் மாரியம்மன் மற்றும் பத்ரகாளி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு முறையே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பத்து நாட்களுக்கு நடத்தப்படுகின்றன.[7]

மேற்கோள்கள்

  1. "Visitor attracts at Sivakasi". Sivakasi municipality. 2011. Archived from the original on 17 பிப்ரவரி 2013. Retrieved 29 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Anantharaman, Ambujam (2006). Temples of South India. East West Books (Madras). pp. 181. ISBN 978-81-88661-42-8.
  3. Hardgrave, Robert (1969). The Nadars of Tamil Nadu. University of California Press. p. 118.
  4. "Current Topics". Star (Christchurch, New Zealand): p. 4. 1 August 1899. http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=TS18990801.2.67. பார்த்த நாள்: 2009-11-08. 
  5. Clothey, Fred W. (2006). Ritualizing on the Boundaries: Continuity And Innovation in the Tamil Diaspora. University of South California. pp. 89–90. ISBN 9781570036477.
  6. Kent, Eliza F. (2004). Converting Women: Gender and Protestant Christianity in Colonial South India. New York: Oxford University Press. p. 299. ISBN 0-19-516507-1.
  7. "Sivakasi History". Sivakasi Municipality. 2011. Archived from the original on 2013-01-08. Retrieved 2012-12-29.

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya