புன்னப்பரா-வயலார் போராட்டம்
புன்னப்பரா-வயலார் போராட்டம் (Punnapra-Vayalar uprising, அக்டோபர், 1946) பிரித்தானிய இந்தியாவின் திருவிதாங்கூர் மன்னராட்சியில் அந்நாட்டுப் பிரதமர் (திவான்) சே. ப. இராமசுவாமி ஐயர் மற்றும் அரசுக்கு எதிராக எழுந்த பொதுவுடமையாளர்களின் போராட்டமாகும்.[1] பொதுவுடமைக் கட்சி உறுப்பினர்கள் திவானின் படைகளால் கொல்லப்பட்டனர்; அக்டோபர் 24இல் புன்னப்பராவில் 200 பேரும் அக்டோபர் 27இல் வயலாரில் 150க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டனர். மொத்த உயிரிழப்பு ஆயிரத்திற்கும் மேலானதாக மதிப்பிடப்படுகின்றது.[1] பேரா. சிறீதர மேனோன் போன்ற சில வரலாற்றாளர்கள் [2] (இணையதளமொன்றில் இவர் தனது கூற்றைத் திரும்பிப் பெற்றதாக கூறப்பட்டுள்ளது[3]) இது திருவிதாங்கூர் அரசின் 'திருவிதாங்கூர் தனிநாடு' அறிவிப்பிற்கு எதிரான போராட்டமாகக் கருதுகின்றனர். இந்த நிகழ்வைக் குறித்த புரிதல் இன்னமும் விவாதிக்கப்படுகின்றது. சிலர் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் ஈழவர் இன கயிறு தொழிலாளர்களை அரசுக்கு எதிராகத் தூண்டியதாக குற்றம் சாட்டுகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற தலைவரான டி கே வர்கீசு வைத்யா, "பொதுவுடமை இந்தியா" நிறுவும் பெரும்புரட்சிக்கு இந்தப் போராட்டம் முன்னோட்டமாகப் பதிவு செய்துள்ளார். ஆலப்புழாவைச் சுற்றியுள்ள பகுதிகள் பொதுவுடமைக் கட்சியின் கோட்டையாக விளங்கியது. அங்கிருந்த பொதுவுடமைக் கட்சித் தொண்டர்கள் திவானுக்கு எதிராக அக்டோபர் 1946இல் திரண்டெழுந்தனர். அங்கு நடைமுறையில் தங்கள் ஆட்சியை நிறுவினர். இதன் விளைவாக திருவிதாங்கூர் காவல்துறையினர் தாக்கப்பட்டனர்; சிலர் கொல்லப்பட்டனர். இதனால் கவலையுற்ற திவான் ஆலப்புழாவில் அக்டோபர் 25, 1946இல் இராணுவச் சட்டத்தை அறிவித்தார். திருவிதாங்கூர் படைகள் அக்டோபர் 27இல் வயலாரைச் சூழ்ந்தனர். திருவிதாங்கூர் கடற்படையும் மூன்று புறமும் நீர் சூழ்ந்த வயலாரை முற்றுகையிட்டது. படைகள் உட்புகுந்த அக்டோபர் 27 அன்று மட்டும் 150 பேர் கொல்லப்பட்டனர்; பலர் மோசமான காயங்களுடன் பின்னர் உயிரிழந்தனர். அதேநாளில் மாவட்டத்தின் பிற இடங்களில் குறைந்தது 130 மக்கள் கொல்லப்பட்டனர். உள்ளூர் மக்களும் பத்திரிகைகளும் இதற்கும் கூடுதலானோர் இறந்ததாகவும் உடல்களைப் படைத்துறையே அழித்துவிட்டதாகவும் கூறுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக சிலர் மதிப்பிடுகின்றனர். ஒருதரப்பினர் மட்டுமே வன்முறையில் ஈடுபடவில்லை; போராட்டத்தின் துவக்கத்தில் பொதுவுடமையாளர்களிடம் சரணடைந்த காவல்துறையினரை அவர்களும் கொன்றனர். காவல்துறை ஆய்வாளர் வேலாயுதன் நாடார் பொதுவுடமையாளர்களுடன் பேச முன்வந்தபோது குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனால் காவல்துறையும் படைத்துறையும் கடினமாக நடந்து கொண்டனர். திருவிதாங்கூர் காவல்துறை வன்முறையால் அரசியல் இயக்கத்தை அடக்கியதோடு பல செயற்பாட்டாளர்களையும் விசாரணையின்றி காவலில் வைத்தனர். பின் விளைவுகள்பொதுவுடமை சகாக்களை கொன்றதால் பொதுவுடமையாளர்களும் பொதுவுடமைக் கட்சியல்லாதோரும் ஐயருக்கு எதிராக மாறினர். சூன் 3, 1947இல் ஐக்கிய இராச்சியம் பிரிவினைக்கானக் கோரிக்கையை ஏற்று இந்தியாவை விட்டு வெளியேறத் தீர்மானித்தது. திருவிதாங்கூர் மகாராசா தன்னை தனிநாடாக அறிவிக்க விரும்பினார்.[4][5][6] திவான் இராமசாமி ஐயரின் ஆதரவுடன் சித்திரைத் திருநாள் சூன் 18, 1947இல் தனிநாடாக விடுதலை அறிக்கையை வெளியிட்டார்.[4][5][6] திருவிதாங்கூரின் இந்த நடவடிக்கையை இந்தியா ஏற்காததால் திவானுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.[7] இராமசாமி ஐயர் தனிநாட்டிற்கு மாறாக தன்னாட்சி மிக்க பகுதியாக உரிமைகள் கோரினார். சூலை 23, 1947இல் உடன்பாடு காணப்பட்டது. சூலை 25, 1947 அன்று சோசலிச செயற்பாட்டாளரான கே.சி.எஸ்.மணி என்ற பிராமண இளைஞர் சுவாதித் திருநாள் ராம வர்மாவின் பிறந்தநாள் கச்சேரியன்று இராமசாமி ஐயரைக் கொல்ல முயற்சித்தார்.[5][8][9] மேற்கோள்கள்
நூற்கோவை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia