பேண்தகு வேளாண்மை (Sustainable agriculture) என்பது உயிரினங்களுக்கும், சூழலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் சூழலியல் கொள்கைகளின் அடிப்படையில் வேளாண்மையை வடிவமைத்த வேளாண்மைமுறை ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தாவர விளைச்சல், விலங்கு இனப்பெருக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்தப் பேண்தகு வேளாண்மை , நீண்டகால நோக்கத்தில், இன்றைய தலைமுறை மக்களின் உணவு, உடைத் தேவையை நிறைவுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும். வேளாண்மை தொழிற்பாடுகள் பொருளாதார முறையில் உணவு, உடைசார் வாழ்தகவுடன் அமைதலோடு தொடர்ந்துவரும் தலைமுறை மக்களுக்கும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும். புதுப்பிக்கப்படாத வளங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் கூடுதல் பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.[1] பண்ணைச் சூழலில் இது ஈட்டம் (இலாபம்), சுற்றுச்சூழல் மேலாண்மை, நீதி அல்லது நன்னயம், நலவாழ்வு, வணிகம், குடும்பக் கூறுபாடுகள் ஆகியவற்ரை உள்ளடக்கும். வேளாண்மையின் பேண்தகவை உயர்த்தும் பலமுறைகள் உள்ளன. பேண்தகவு குறிப்பிட்ட வேளாண் விளைபொருளில் கவனம் செலுத்தாமல் பொதுவாகப் பண்ணையின் வணிகச் செயல்முறையிலும் நடைமுறையிலும் கவனத்தைக் குவிக்கிறது.[2]
வேளாண்மை பேரளவில் தன்பதிவைச் சுற்றுச்சூழலில் தடம்பதிக்கிறது;[3] வேளாண்மை சுற்றுச்சூழலை மாற்றி, அம்மாற்றங்கள் ஊடாக தானும் தாக்கமடைகிறது.[4] மக்கள்தொகை உயரும்போது உணவு விளைச்சலும் உயர்தல் வேண்டும். பேண்தகு வேளாண்மை மாற்றமுற்ற சுற்றுச்சூழல் நிலைமைகளில், மக்கள்தொகை உயர்வுக்கு ஏற்ப, உணவு விளைச்சலை மேம்படுத்தும் தகுந்த தீர்வைத் தருகிறது.[4] ஓரிடத்தில் இயற்கை வளங்கள் வரம்புடையன. எனவே திறம்பாடற்ற வேளாண்மை இந்த இயற்கை வளங்களை சிதைவுறச் செய்துவிடும் வாய்ப்புள்ளது. பிறகு அவற்றை மீட்பது அரிதாகிவிடும்.
வரலாறு
பிராங்ளின் எச். கிங் 1907 இல் நாற்பது நூற்றாண்டுகளாக உழவர்கள் எனும் தனது நூகளில் பேண்தகு வேளாண்மையின் மேம்பாடுகளை விவாதிக்கிறார். இந்த நடைமுறை இனிவருங் காலங்களில் மிகவும் இன்றியமியாதது என வற்புறுத்துகிறார்.[5] 'பேண்தகு வேளாண்மை' எனும் சொற்றொடரை ஆத்திரேலிய வேளாண் அறிஞரான கோர்டான் மெக்லிமான்ட் அறிமுகப்படுத்தியுள்ளார்.[6] இது 1980 களில் மக்களிடையே பரவலானது.[7]
பன்னாட்டு தோட்டவளர்ப்பு அறிவியல் கழகம் 2002 இல் டொரொன்டோவில் பன்னாட்டு தோட்டவளர்ப்பு அறிவியல் பேராயத்தைக் கூட்டியது. அதில் தோட்டவளர்ப்பு பேண்தகவைப் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.[8] பிறகு, 2006 இல் சீயோலில் நடந்த கருத்தரங்கில் பேண்தகவு சார்ந்த நெறிமுறைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.[9]
வரையறை
ஐக்கிய அமெரிக்காவின் 1977 ஆண்டைய தேசிய வேளாண் ஆராய்ச்சி, விரிவாக்கம், பயிற்றுவிப்புக் கொள்கைச் சட்டம்,[10] " பேண்தகு வேளாண்மை"யைத் குறிப்பிட்ட இடஞ்சார்ந்த தாவர, விலங்கு இனப்பெருக்க நடைமுறைகளின் நீண்டகால, ஒருங்கிணைந்த அமைப்பாக வரையறுக்கிறது. மேலும் அந்த அமைப்பு தொடர்ந்து பின்வரும் வரன்முறைகளை நிறைவேற்றவேண்டும்:
இன்றைய தலைமுறை மக்களின் உணவு, உடைத் தேவையை நிறைவுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.[10]
வேளாண்பொருள்வளம் சார்ந்துள்ள சுற்றுச்சூழல் தரத்தையும் இயற்கைவள அடித்தளத்தையும் மேம்படுத்தல் வேண்டும்.[10]
பண்ணை வளங்களையும் புதுப்பிக்கவியலா வளங்களையும் தகுந்த முறையிலும் உகந்தமுறையிலும் உயர்திறம்பாட்டோடு பயன்கொண்டு, இயற்கை உயிரியல் சுழற்சிகளையும் கட்டுபாடுகளையும் ஒருங்கிணைக்கவேண்டும்[10]
பண்ணைச் செயல்முறைகளைப் பொருளியல் சிக்கனத்தோடு பேணுதல் வேண்டும்.[10]
உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் .[10]
பிரித்தானிய அறிஞர் யூல்சு பிரெட்டி பேண்தகு வேளாண்மை சார்ந்த முதன்மை வாய்ந்த பின்வரும் நெறிமுறைகளை வரன்முறைப்படுத்திக் கூறுகிறார்:[11]
உணவு விளைச்சல், வேளாண் செயல்முறையில் ஊட்டச் சுழற்சி, மண்வள மீட்பு, தழைச்சத்து (காலக) நிலைநிறுத்தல் போன்ற உயிரியலான, சூழலியலான செயல்முறைகளை உள்ளடக்கவேண்டும்.[11]
சூழலுக்குத் தீங்குதரும் புதுப்பிக்கவியலாத, தொடர்ந்து பேணவியலாத உள்ளீடுகளை குறைந்த அளவுகளில் பயன்படுத்தவேண்டும்.[11]
உணவு விளைச்சலுக்கும் நிலப்பண்படுத்தலுக்கும் உழவர்களின் வினைத்திறனைப் பயன்படுத்தி, அவர்களது தற்சார்பையும் தன்னிறைவையும் மேம்படுத்தல்.[11]
பலவகை விணைத்திற மக்களது ஒத்துழைப்ப்புடனும் கூட்டுழைப்புடனும் தீங்குயிர் மேலாண்மை, பாசனம் போன்ற வேளாண்மை, இயற்கை வளங்களின் சிக்கல்களைத் தீர்க்கவேண்டும்.[11]
இம்முறை குறுங்கால, நெடுங்கால பொருளியல் தேவைகளைக் கருதுகிறது. ஏனெனில், பேண்தகவு வேளாண்மை என்பது தொடர்ந்து மீளாக்கம் பெறும்வகையில் வடிவமைக்கப்பட்ட வேளாண்மைச் சூழல் அமைப்பாகும்.[12] இம்முறை வளம்பேணல் தேவையையும் உழவர்கள் வாழ்தல் சார்ந்த தேவைகளையும் சமனிலையில் வைக்கிறது.[13]
இது மாந்தர் வாழிடங்களில் உயிரியற்பன்மையைத் தகவமைத்து சூழலோடு ஒருங்கிணைது வாழ்தலை நிறைவேற்றும் வேளாண்மை முறையாகும்.[14]
↑[1]பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம் Bertschinger, L. et al. (eds) (2004). Conclusions from the 1st Symposium on Sustainability in Horticulture and a Declaration for the 21st Century. In: Proc. XXVI IHC – Sustainability of Horticultural Systems. Acta Hort. 638, ISHS, pp. 509-512. Retrieved on: 2009-03-16.
↑Lal, R. (2008). Sustainable Horticulture and Resource Management. In: Proc. XXVII IHC-S11 Sustainability through Integrated and Organic Horticulture. Eds.-in-Chief: R.K. Prange and S.D. Bishop. Acta Hort.767, ISHS, pp. 19-44.
↑Chrispeels, M. J.; Sadava, D. E. (1994). Farming Systems: Development, Productivity, and Sustainability. Jones and Bartlett. pp. 25–57. ISBN978-0867208719. {{cite book}}: |work= ignored (help)
Gold, Mary (1999) Sustainable Agriculture: Definitions and Terms. Special Reference Briefs Series no. SRB 99-02 Updates SRB 94-5 September 1999. National Agricultural Library, Agricultural Research Service, U.S. Department of Agriculture.
Hayes, B. (2008) Trial Proposal: Soil Amelioration in the South Australian Riverland.