பேரரசி டோவாகர் சிக்சி
பேரரசி டோவாகர் சிக்சி (Empress Dowager Cixi - நவம்பர் 29, 1835 – நவம்பர் 15, 1908), சீனாவின் நடைமுறை ஆட்சியாளராக இருந்தார். சீனாவில் வெஸ்ட் டோவாகர்' பேரரசி எனப் பெயர் பெற்றிருந்த இவர் மஞ்சு யாகே நாரா இனக்குழுவைச் சேர்ந்தவர். அதிகார பலமும், மக்களால் விரும்பப்படும் தன்மையும் கொண்டவராக இருந்த இவர், 1861ல் தனது கணவர் இறந்ததிலிருந்து 1908ல் தான் இறக்கும்வரை 48 ஆண்டுகள் மஞ்சு சிங் வம்ச ஆட்சியின் நடைமுறை (de facto) ஆட்சியாளராக இருந்தார். சாதாரண மஞ்சு குடும்பதைச் சேர்ந்தவராக இருந்தாலும், பேரரசர் சியாபெங்கின் வைப்பாட்டியாக இருந்ததனால், கணவன் இறந்தபின்னர், அவரது மகன் பேரரசர் டாங்சியையும், மருமகன் பேரரசர் குவாங்சுவையும் பெயரளவிலான பேரரசராக வைத்துக்கொண்டு நடைமுறையில் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னிடமே வைத்துக்கொண்டு ஆண்டுவந்தார். இவ்விரு பேரரசர்களுமே ஆட்சிக் கட்டுப்பாட்டைத் தம்மிடமே எடுத்துக்கொள்ள முயன்றும் அது அவர்களால் முடியாமற்போனது. இவர் தனது ஆட்சிக் காலத்தில் ஒரு பழைமைவாதியாக விளங்கினார். அரசியல் முறையைச் சீரமைப்பதை அவர் எதிர்த்துவந்தார். இவரது ஆட்சியை ஒரு தனிமனித ஆட்சியாகக் கருதும் வரலாற்றாளர்கள், சிங் வம்சத்தினதும், இதனால் சீனப் பேரரசினதும் வீழ்ச்சிக்கு இவரது ஆட்சியை முக்கிய காரணியாகக் குறிப்பிடுகின்றனர். |
Portal di Ensiklopedia Dunia