மகசா அமினியின் மரணம்
மகசா அமினி ( Mahsa Amini Persian: مهسا امینی), தவிரவும் ஜினா அமினி அல்லது ழினா அமினி (Persian: ژینا امینی, குர்தியம்: ژینا ئەمینی) எனவும்[7]அறியப்படும் 22 அகவை நிரம்பிய ஈரானியப் பெண் செப்டம்பர் 16, 2022 அன்று ஈரானின் தெகுரான் நகரில் காவல்துறையின் வன்செயல் என குற்றஞ்சாட்டுவகையில் ஐயத்திற்குரிய சூழலில் மரணமடைந்தார்.[8][9] ஈரானின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் சட்ட செயலாக்க காவற்படையின் அங்கமான ஒழுக்கப்பண்பு வழிகாட்டுப் படை அரசு விதிமுறைகளுக்கேற்றவாறு ஹிஜாப் அணியாதமைக்காக அமினியைக் கைது செய்தது. காவல்துறையின் கூற்றுப்படி அமினிக்கு காவல்நிலையத்தில் திடீரென்று இதய நிறுத்தம் ஏற்பட்டு தரையில் விழுந்தார்; இரண்டு நாட்கள் ஆழ்மயக்க நிலையில் இருந்து பின் மரணமடைந்தார்.[10][11] அவருடன் கைதானவர்களும் பிற நேரடி சாட்சிகளும் அமினி மிகக் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறினர்; இவற்றையும் கசிந்த மருத்துவ வருடி அறிக்கைகளையும் கொண்டு[4] அமினிக்கு பெருமூளை இரத்த ஒழுக்கு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டிருந்ததாக தனிப்பட்ட நபர்கள் கருதினர்.[12] அமினியின் மரணம் நாடுதழுவிய போராட்டங்களுக்கு வித்திட்டது; இது உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தது.அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ஈரானின் இசுலாமியக் குடியரசில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.[13][14][15][16] உலகெங்கும் பல தலைவர்களும் அமைப்புக்களும் பிரபலங்களும் இந்நிகழ்வைக் கண்டித்ததுடன் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தனர்.[17] ஈரானிய அரசு இந்தப் போராட்டங்களை ஒடுக்க முயன்றது; போராளிகள் மீது சிறுகுண்டுகள், உலோக சிறுகுண்டுகள், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்பீரங்கிகளைக் கொண்டு தாக்கியது.[18] இன்ஸ்ட்டாகிராம், வாட்சப் போன்ற சமூக ஊடக நிரலிகளை தடை செய்தும் இணைய அணுக்கத்தைக் கட்டுப்படுத்தியும் போராட்ட ஒருங்கிணைப்பை அடக்கியது. 2019ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட முழுமையான இணைய முடக்கத்திற்குப் பிறகு இதுவே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளாகும்.[19] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia