மங்கோலிய மக்கள்
மங்கோலிய மக்கள் (Mongolian people), அல்லது மங்கோலியர்கள் (Mongols, மொங்கோலியம்: Монголчууд, மங்கோல்சுட்) ஒரு கிழக்கு மற்றும் மத்திய ஆசிய இனக் குழு ஆவர். இவர்கள் மங்கோலியா மற்றும் சீனாவின் உள் மங்கோலியா ஆகியவற்றைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். இவர்கள் சீனா (எ.கா. சிஞ்சியாங்) மற்றும் உருசியாவின் பிற பகுதிகளில் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். மங்கோலியர்களின் புரியத் மற்றும் கல்மிக் பிரிவினர் உருசியாவின் புர்யாத்தியா மற்றும் கல்மிகியா பகுதிகளில் வாழ்கின்றனர். மங்கோலியர்கள் ஒரு பொதுவான மரபுவழி மற்றும் இன அடையாளத்தினால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களது பழங்குடி மொழிகளானது ஒட்டுமொத்தமாக மங்கோலிய மொழியாக அறியப்படுகிறது. நவீனகால மங்கோலியர்களின் மூதாதையர்கள் முன்-மங்கோலியர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள். விளக்கம்விரிவாக வரையறுக்கப்படும் போது இச்சொல் சாதாரண மங்கோலியர்கள் (கல்கா மங்கோலியர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்), புர்யத்தியர்கள், ஒயிரட்டுகள் மற்றும் தெற்கு மங்கோலியர்கள் ஆகியவர்களை குறிக்கிறது. தெற்கு மங்கோலியர்களுக்குள் அபகா மங்கோலியர்கள், அபகனர், ஆவோஹன்கள், பாரின்கள், கோர்லோஸ் மங்கோலியர்கள், ஜலையிடுகள், ஜரூட், கிஷிக்டென், கூச்சிட், மூமையங்கன் மற்றும் ஒனிகுட் ஆகிய மக்களும் அடங்குவர். மங்கோலியர்கள் என்ற சொல் சிறிது காலத்திற்கு சீனாவின் தாங் அரச மரபின் பதிவுகளில் எட்டாம் நூற்றாண்டில் சிவேயி பழங்குடியினரை குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்டது. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இச்சொல் மீண்டும் கிதான் மக்களால் ஆளப்பட்ட லியாவோ அரசமரபின் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. 1125 இல் லியாவோ அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலிய பீடபூமியில் கமக் மங்கோலியர்கள் முன்னணி பழங்குடியினராக உருவாகினர். எனினும் சுரசன்களால் ஆளப்பட்ட சின் அரச மரபு மற்றும் தாதர் கூட்டமைப்பு ஆகியவற்றுடனான போர்கள் அவர்களை பலவீனமடையச் செய்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் என்ற சொல் செங்கிஸ்கானின் ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட மங்கோலிய மொழிகளைப் பேசிய அனைத்து பழங்குடியினரையும் குறிக்க பயன்படுத்தப்பட்டது.[14] வரலாறுபல்வேறுபட்ட காலங்களில் மங்கோலிய மக்கள் சிதியர்கள், மகோக் மற்றும் துங்குசிக் மக்களுடன் ஒன்றுபடுத்தப்பட்டு அறியப்பட்டுள்ளனர். சீன வரலாற்று நூல்களின் அடிப்படையில் மங்கோலிய மக்களின் தோற்றமானது டொங்கு மக்களிலிருந்து ஆரம்பித்ததாக அறியப்படுகிறது. டொங்கு மக்கள் கிழக்கு மங்கோலியா மற்றும் மஞ்சூரியாவை ஆக்கிரமித்திருந்த ஒரு நாடோடி கூட்டமைப்பினர் ஆவர். மங்கோலியர்களை சியோங்னுவுடன் (ஹுன்னு) தொடர்புபடுத்துவது இன்றும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. சில அறிஞர்கள் சியோங்னுவை முன்-மங்கோலியர்களாக கருதினாலும் அவர்கள் மங்கோலிய மற்றும் துருக்கிய பழங்குடியினரை உள்ளடக்கிய ஒரு பல இன குழுவாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு.[15] ஹூனர்களின் மொழியானது ஹுன்னுவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.[16][17] ஆனால் டொங்கு மக்களை முன்-மங்கோலியர்கள் என எளிதாக கூற முடியும். ஏனெனில் சீன வரலாறுகள், டொங்கு மக்களிலிருந்து மங்கோலிய பழங்குடியினர் மற்றும் ராஜ்யங்களை (சியான்பே மற்றும் உஹுவன் மக்கள்) மட்டுமே தருவிக்க பெறுகின்றன. சில வரலாற்று நூல்கள் சில மங்கோலிய பழங்குடியினரின் (உதாரணமாக கிதான் மக்கள்) முன்னோர்களாக சியோங்னு-டொங்கு கலப்பினமாக கூறுகின்ற போதிலும் நாம் இவ்வாறு கூற முடியும்.[18] சீன பாரம்பரிய நூல்களில்கி. மு. 699-622 இல் ஷன்ரோங் மக்களுடன் யான் மாநிலத்திற்கு வடக்கே உள் மங்கோலியாவில் டொங்கு மக்கள் இருந்ததாக சிம கியான் என்பவர் கூறியுள்ளார். யி சோவு ஷு ("சோவுவின் தொலைந்த புத்தகம்") மற்றும் மலைகள் மற்றும் கடல்களின் பாரம்பரியம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவை ஷாங் அரசமரபின் (கி. மு. 1600–1046) காலத்திலேயே டொங்கு மக்கள் வாழ்ந்ததாக நமக்கு காட்டுகின்றன. சியான்பே, டொங்கு கூட்டமைப்பின் பகுதியாக இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய காலங்களில் சுதந்திரமாக இயங்கி கொண்டிருந்தது. இதை குவோயு ("晉語八" பிரிவு) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து நாம் அறிய முடிகிறது. அதில் சோவுவின் அரசர் செங்கின் ஆட்சியின் போது (ஆட்சிக்காலம் கி. மு. 1042–1021) அவர்கள் கியாங் (岐阳) (தற்போது கிஷான் கவுண்டி) என்ற இடத்தில் சோவுவின் கீழ் இயங்கிய பிரபுக்களின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக வந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் உடன்படிக்கையின்படி (诸侯) கப்பம் கட்டுபவர்களாக இல்லாத காரணத்தினால் சு மாநிலத்தின் மேற்பார்வையின் கீழ் நெருப்பு விழாவை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டனர். சிவோங் யியுடன் இணைந்து சியான்பே தலைவர் சடங்கு நெருப்பின் கூட்டு பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். இந்த ஆரம்ப கால சியான்பே மக்கள், அருகில் ஓர்டோஸ் பாலைவனத்தில் இருந்த சுகைகோவு கலாச்சாரத்தில் (கி. மு. 2200–1500) இருந்து வருகின்றனர். அவர்களது தாய்வழி டி. என். ஏ. மங்கோலிய தவுர் மக்கள் மற்றும் துங்குசிக் ஈவெங்குகளுடன் பொருந்துகிறது. சுகைகோவு சியான்பே மக்கள் (உள் மங்கோலியா மற்றும் வடக்கு ஷான்க்ஷியின் ஓர்டோஸ் கலாச்சாரத்தின் பகுதியினர்) ஷாங் அரசமரபுடன் வணிக உறவுகள் வைத்திருந்தனர். இரண்டாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் ஹான் அரசமரபின் அறிஞரான ஃபு கியான் (服虔) தனது "சிக்சி" (集解) என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஷன்ரோங் மற்றும் பெயிடி ஆகியோர் தற்கால சியான்பேவின் முன்னோர்கள் ஆவர்". மேலும் உள் மங்கோலியாவின் அடிப்படை மங்கோலிய சியான்பே பகுதியுடன் தொடர்புடைய மற்றுமொரு பகுதி மேல் சியாஜியாடியான் கலாச்சாரம் (கி. மு. 1000–600) ஆகும். அக்கலாச்சார பகுதியில்தான் டொங்கு கூட்டமைப்பு மையம் கொண்டிருந்தது. சியோங்னு அரசர் மொடு சன்யு, டொங்குவை தோற்கடித்த பிறகு சியான்பே மற்றும் உஹுவான் ஆகியவை கூட்டமைப்பின் முக்கிய எஞ்சியவையாக நீடித்தன. முன்-மங்கோலிய குமோ சியின் முன்னோர் உஹுவானின் டடுன் கான் (இறப்பு கி. பி. 207) ஆவார்.[19] உஹுவான், டொங்குவின் நேரடி தேசிய மதிப்பு வாய்ந்த வழி வந்தவர்கள் ஆவர். டாங்கின் புதிய புத்தகம் கி. மு. 209 இல் கூறுவதன் படி மொடு சன்யு, உஹுவானை தோற்கடித்தார். அப்புத்தகத்தில் டொங்கு என்ற வார்த்தை உஹுவானுக்கு பதிலாக குறிப்பிடப்படவில்லை. எனினும் சியான்பே பிந்தைய டொங்கு வழி வந்தவர்களாவர். உஹுனுவுடன் அவர்கள் ஒரே மொழியை பகிர்ந்து கொண்ட போதிலும் அவர்களுக்கு என்று தனித்துவமான அடையாளம் இருந்தது. ஹான் பேரரசர் குவாங்வுவிடமிருந்து பரிசுகளைப் பெற்றுக் கொண்ட பிறகு கி. பி. 49 இல் சியான்பே ஆட்சியாளர் பியன்ஹே (பயன் கான்?) சியோங்னு மீது ஒரு ஓட்டத்தை நடத்தி அவர்களை தோற்கடித்தார். 2000 பேரை கொன்றார். சியான்பே அரசு தன்சிகுவாய் கானின் ஆட்சியின் (ஆட்சிக்காலம் 156–181) கீழ் அதன் உச்சபட்ச பரப்பளவை அடைந்தது. அவர் அதன் பரப்பளவை விரிவாக்கினார். சிறிது காலம் நீடித்த சியான்பே மாநிலத்தை (93–234) உருவாக்கினார். சீன வரலாறுகளின்படி சியான்பே மாநிலத்தில் இருந்து பிரிந்த மூன்று முக்கிய குழுக்கள்: ரூரன் (சிலரால் பன்னோனிய ஆவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள்), கிதான் மக்கள் மற்றும் சிவேயி (இதன் துணை பழங்குடி இனமான "சிவேயி மெங்கு"வில் இருந்துதான் செங்கிஸ்கானின் மங்கோலியர்கள் தோன்றியதாக கருதப்படுகிறது).[20] இந்த மூன்று சியான்பே குழுக்களைத் தவிர முரோங், துவான் மற்றும் துவோபா என பிற குழுக்களும் உள்ளன. அவர்களது கலாச்சாரம் நாடோடி கலாச்சாரம். அவர்களது மதம் ஷாமன் மதம் அல்லது புத்த மதம் மற்றும் அவர்களது ராணுவ வலிமை அளப்பரியது. பெரும்பாலான அறிஞர்கள் ரூரன் மக்கள் முன்-மங்கோலியர்கள் என்பதை ஒத்துக் கொண்ட போதிலும் அவர்கள் மங்கோலிய மொழிகளை பேசியதற்கான நேரடியான ஆதாரம் எதுவும் இன்று வரை கிடைக்கப்பெறவில்லை.[21] எனினும் கிதான் மக்கள் இரண்டு எழுத்து முறைகளை தங்களுக்கென கொண்டிருந்தனர். அவர்களது பாதி அறியப்பட்ட பதிவுகளில் பல மங்கோலிய வார்த்தைகள் உள்ளன. புவியியல் ரீதியாக துவோபா சியான்பே மக்கள் உள் மங்கோலியாவின் தெற்கு பகுதி மற்றும் வடக்கு சீனா ஆகிய பகுதிகளை ஆண்டனர். ரூரன் மக்கள் (யுஜிவுலு செலுன் என்ற அரசர் தான் கி. பி. 402 ஆம் ஆண்டு ககான் என்ற பட்டத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்) கிழக்கு மங்கோலியா, மேற்கு மங்கோலியா, உள் மங்கோலியாவின் வடக்குப் பகுதி மற்றும் வடக்கு மங்கோலியா ஆகிய பகுதிகளை ஆண்டனர். கிதான் மக்கள் கொரியாவுக்கு வடக்கே உள்ள உள் மங்கோலியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். சிவேயி மக்கள் கிதான் மக்களுக்கு வடக்குப் பகுதியில் வாழ்ந்தனர். 555 இல் துருக்கிய ககானேடு, 745 இல் உய்குர் ககானேடு மற்றும் 840 இல் எனிசெய் கிர்கிசு மாநிலங்கள் ஆகியவற்றின் எழுச்சியால் இந்த பழங்குடி இனங்கள் மற்றும் ராஜ்யங்கள் பாதிக்கப்பட்டன. துவோபா மக்கள் இறுதியில் சீனாவுக்குள் இழுக்கப்பட்டனர். ரூரன் மக்கள் மேற்கு நோக்கி கோக்துருக்கியர்களிடமிருந்து தப்பித்து ஓடினர். அவர்கள் என்ன ஆயினர் என்பது தெளிவாக தெரியவில்லை அல்லது சிலர் கூறுவது போல ஐரோப்பா மீது ஆவர்கள் என்ற பெயரில் அவர்களது கான் முதலாம் பயனின் தலைமையில் படையெடுத்தனர். சில ரூரன் மக்கள் தாதர் கான் தலைமையில் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்து தாதர் கூட்டமைப்பை ஏற்படுத்தினர். அக்கூட்டமைப்பு சிவேயியின் ஒரு பகுதியானது. கிதான் மக்கள் குமோ சியில் (உஹுவானில் இருந்து தோன்றியவர்கள்) இருந்து 388 இல் பிரிந்த பிறகு சுதந்திரமாக மஞ்சூரியாவில் ஒரு சிறு சக்தியாக நீடித்தனர். அவர் வழிவந்த அம்பகை (872–926) லியாவோ அரசமரபை (907–1125) லியாவோவின் பேரரசர் தைசு என்ற பெயருடன் நிறுவும் வரை அவர்கள் இவ்வாறு வாழ்ந்தனர். மங்கோலிய பேரரசு மற்றும் வடக்கு யுவானின் சகாப்தம்![]() கிர்கிசுகளால் உய்குர் ககானேடு அழிக்கப்பட்டபோது மங்கோலியாவில் துருக்கிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிர்கிசுகளுக்கு புதிதாக பிடித்த நிலங்களை நாட்டுடன் சேர்க்கும் எண்ணம் கிடையாது; பதிலாக அவர்கள் பல்வேறு மனப்கள் (பழங்குடி இனத் தலைவர்கள்) மூலம் உள்ளூர் பழங்குடியினரை கட்டுப்படுத்தினர். துருக்கிய உய்குர்கள் விட்டுச் சென்ற பகுதிகளை கிதான்கள் ஆக்கிரமித்தனர். தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். எனிசை கிர்கிசு மாநிலம் ககாசியாவில் மையம் கொண்டிருந்தது. அவர்கள் மங்கோலியாவில் இருந்து கிதான்களால் 924 இல் வெளியேற்றப்பட்டனர். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்களது தலைவர் அபவோஜியின் தலைமையில் கிதான்கள் பல்வேறு ராணுவ படையெடுப்புகளை தாங் அரசமரபின் எல்லைக் காவலர்கள், மற்றும் குமோ சி, சிவேயி மற்றும் சுரசன் நாடோடி குழுக்களுக்கு எதிராக எடுத்தனர்.[22] சுரசன்களால் (பிற்காலத்தில் மஞ்சு என்று அழைக்கப்பட்டனர்) தோற்கடிக்கப்பட்ட கிதான்கள் மேற்கு நோக்கி தப்பித்து ஓடினர். கிழக்கு கசகஸ்தானில் காரா கிதை (1125–1218) என்ற அரசை நிறுவினர். 1218 இல் செங்கிஸ்கான் காரா கிதையை அழித்தார். அதன் பிறகு அவர்களது நிலை பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. மங்கோலியப் பேரரசின் விரிவாக்கத்தின் போது மங்கோலிய மக்கள் கிட்டத்தட்ட ஐரோவாசியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பரவினர். அட்ரியாடிக் கடலிலிருந்து இந்தோனேசியாவின் ஜாவா தீவு வரையும், ஜப்பானிலிருந்து பாலஸ்தீனத்தின் காஸா வரையும் ராணுவ படையெடுப்புகளை நடத்தினர். ஒரே நேரத்தில் அவர்கள் பாரசீகத்தின் படிஷாக்கள் ஆகவும், சீனாவின் பேரரசர்களாகவும், மங்கோலியாவின் பெரிய கான்களாகவும், மற்றும் ஒருவர் எகிப்தின் சுல்தானாகவும் (அல்-அடில் கித்புகா) ஆயினர். தங்க நாடோடி கூட்டத்தின் மங்கோலிய மக்கள் 1240 இல் உருசியாவை நிர்வகிக்கும் பொறுப்புக்கு வந்தனர்.[23] 1279 இல் அவர்கள் சாங் அரசமரபை வென்று சீனாவின் அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து யுவான் அரசமரபை தோற்றுவித்தனர்.[23] ![]() பேரரசு சிதறுண்ட போது பல்வேறு இடங்களில் வாழ்ந்த மங்கோலிய மக்கள் சீக்கிரமே தங்களைச் சுற்றி இருந்த பெரும்பாலும் துருக்கிய கலாச்சாரங்களை பின்பற்றி ஆங்காங்கே வாழ்ந்த மக்களுடன் இணைந்தனர். இவ்வாறாக அவர்கள் அசர்பைஜான் மக்கள், உஸ்பெகிஸ்தான் மக்கள், கரகல்பக்குகள், பஷ்கிர்கள், துருக்குமேனியர்கள், உய்குர்கள், நோகைகள், கிர்கிசுக்கள், கசக்குகள், காக்கேசிய மக்கள், ஈரானிய மக்கள் மற்றும் முகலாயர்கள் என ஆங்காங்கே இருந்த மக்களின் ஒரு பகுதி ஆயினர். மொழி மற்றும் கலாச்சார ரீதியாக பாரசீகர்களாக அப்பகுதிகளில் அவர்கள் வாழ ஆரம்பித்தனர். வடக்கு சைபீரியாவுக்கு இடம்பெயர்ந்த பிறகு சில மங்கோலியர்கள் யகுட் இன மக்களுடன் இணைந்தனர். சுமார் 30% யகுட் மொழி வார்த்தைகள் மங்கோலிய மொழியில் இருந்து தோன்றியவை ஆகும். எனினும் பெரும்பாலான யுவான் மங்கோலியர்கள் 1368 இல் மங்கோலியாவிற்கு திரும்பினர். தங்களது மொழி மற்றும் கலாச்சாரத்தை விட்டுவிடாமல் தொடர்ந்தனர். தெற்கு சீனாவில் சுமார் 250,000 மங்கோலியர்கள் இருந்தனர். அவர்களில் பலர் கிளர்ச்சி இராணுவமான மிங் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் தெற்கு சீனாவில் சிக்கிக் கொண்டனர். இறுதியாக அங்கு வாழ்ந்த மக்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்தனர். டோங்க்ஷியாங்குகள், போனன்கள், யுகுர் மற்றும் மோங்குவோர் மக்கள் ஆகியோர் சீனாவின் மிங் அரச மரபால் படையெடுப்புக்கு உள்ளாயினர். 1368 இல் யுவான் அரசமரபின் வீழ்ச்சிக்கு பிறகு மங்கோலிய தாயகத்தில் மங்கோலியர்கள் தொடர்ந்து வடக்கு யுவான் அரசமரபை ஆண்டனர். எனினும் பதினான்காம் நூற்றாண்டில் ஒயிரட்டுகள், போர்சிசின்கள் தலைமையிலான கிழக்கு மங்கோலிய மக்களின் ஆட்சிக்கு சவால் விடுத்தனர். மங்கோலியா இரண்டு பகுதிகளாக பிரிந்தது: மேற்கு மங்கோலியா (ஒயிரட்டுகள்) மற்றும் கிழக்கு மங்கோலியா (கல்கா மங்கோலியர்கள், உள் மங்கோலியர்கள், பர்கா மங்கோலியர்கள் மற்றும் புர்யத்தியர்கள்). முதன்முதலில் கலப்பையை குறிக்கும் எழுத்து பதிவுகள் நடு மங்கோலிய மொழியில் 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றுகின்றன.[24] 1434 இல் கிழக்கு மங்கோலிய தைசுன் கானின் (1433–1452) பிரதம மந்திரியான மேற்கு மங்கோலிய டோகூன் டைஷ் கிழக்கு மங்கோலியாவின் மற்றொரு அரசனான அடையை (கோர்ச்சின்) கொன்ற பிறகு மங்கோலியர்களை ஒன்றிணைக்கிறார். 1439 இல் டோகூன் இறக்கிறார். அவரது மகன் எசன் டைஷ் பிரதம மந்திரி ஆகிறார். மங்கோலிய ஒருங்கிணைப்பு மற்றும் சுதந்திரத்திற்கு வெற்றிகரமான சீர்திருத்தங்களை எசன் நடைமுறைப்படுத்துகிறார். மிங் பேரரசு 14–16 ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியா மீது படையெடுக்க முயற்சித்தது. ஆனால் ஒயிரட்டுகள், தெற்கு மங்கோலியர்கள், கிழக்கு மங்கோலியர்கள் மற்றும் ஒன்றிணைந்த மங்கோலிய ராணுவங்களால் மிங் பேரரசு தோற்கடிக்கப்படுகிறது. 1449 இல் எசனின் 30,000 குதிரைப்படை வீரர்கள் 5 லட்சம் சீன ராணுவ வீரர்களை தோற்கடிக்கின்றனர். கான் பட்டம் பெற்றிருந்த தைசுனை 1453 இல் தோற்கடித்து 18 மாதங்களுக்குள் எசன் பெரிய யுவானின் பெரிய கான் (1454–1455) என்ற பட்டத்தை தனக்கே உரியதாக்கி கொள்கிறார்.[25] தயன் கானின் (1479–1543) ஆட்சியின்போது கல்கா மங்கோலியர்கள் கிழக்கு மங்கோலிய மக்களின் 6 தியுமன்களில் ஒன்றாக எழுச்சி பெறுகின்றனர். அவர்கள் சீக்கிரமே மங்கோலியாவின் சக்தி வாய்ந்த மங்கோலிய இனமாக மாறுகின்றனர்.[26][27] அவர் மங்கோலியர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்கிறார். கிழக்கு மங்கோலிய தியுமன் சசக்த் கானின் ஆட்சியின்போது (1558–1592) மங்கோலியர்கள் தாமாக முன்வந்து கடைசியாக ஒன்றிணைகின்றனர் (இதற்கு முன்னர் மங்கோலியப் பேரரசில் தான் அனைத்து மங்கோலியர்களும் ஒன்றிணைந்து இருந்தனர்). 17ஆம் நூற்றாண்டில் கிழக்கு மங்கோலியா மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது: வெளி மங்கோலியா (கல்கா), உள் மங்கோலியா (உள் மங்கோலியர்கள்) மற்றும் தெற்கு சைபீரியாவின் புர்யத் பகுதி. கடைசி மங்கோலியக் ககான் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த லிக்டன் கான் ஆவார். இவர் மஞ்சு மக்களுடன் சீன நகரங்களை சூறையாடுவதில் பிரச்சனையில் இருந்தார். இதனால் பெரும்பாலான மங்கோலிய பழங்குடி இனங்கள் இவரிடம் இருந்து விலகின. 1618 இல் மிங் அரசமரபுடன் லிக்டன் கான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். அது மஞ்சு மக்களின் தாக்குதலில் இருந்து சீனாவின் வடக்கு எல்லைகளை காப்பதற்கு பதிலாக அவருக்கு ஆயிரக்கணக்கான டயேல் வெள்ளி கிடைக்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தம். 1620 களின்போது சகர் மக்கள் மட்டுமே இவரது ஆட்சியின் கீழ் இருந்தனர். குயிங்-சகாப்த மங்கோலியர்கள்லிக்டன் கானின் தவறான உத்திகள் காரணமாக 1625 மற்றும் 1628 ஆம் ஆண்டுகளில் சகர் ராணுவம் உள் மங்கோலியா மற்றும் மஞ்சு ராணுவங்களால் தோற்கடிக்கப்பட்டது. குயிங் படைகள் 1635 இல் உள் மங்கோலியாவின் மீது தங்களது கட்டுப்பாட்டை நிலைநாட்டின. கடைசி கானான லிக்டன் கானின் ராணுவம் திபெத்திய கெலுபா பிரிவினரின் (மஞ்சள் தொப்பி பிரிவு) படைகளுடன் யுத்தம் புரிய அணிவகுத்தது. கெலுபா படைகள் மஞ்சு மக்களை ஆதரித்தன. அதே நேரத்தில் லிக்டன் கான் திபெத்திய பௌத்த மதத்தின் கக்யு பிரிவை (சிவப்பு தொப்பி பிரிவு) ஆதரித்தார். திபெத்திற்கு செல்லும் வழியில் 1634 இல் லிக்டன் கான் இறந்தார். 1636 ஆம் ஆண்டில் பெரும்பாலான உள் மங்கோலிய உயர்குடியினர் மஞ்சு இனக்குழுவால் தோற்றுவிக்கப்பட்ட குயிங் அரசமரபிடம் அடிபணிந்தனர். 1640 களில் உள் மங்கோலிய டெங்கிஸ் நோயன் குயிங் அரசமரபிற்கு எதிராக புரட்சி செய்தார். கல்கா மங்கோலியர்கள் சுனுட்டை பாதுகாக்க யுத்தம் புரிந்தனர். மேற்கு மங்கோலிய ஒயிரட்டுகள் மற்றும் கிழக்கு மங்கோலிய கல்காக்கள் 15 ஆம் நூற்றாண்டிலிருந்தே மங்கோலியாவில் தத்தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தனர். இப்பிரச்சினையின் காரணமாக மங்கோலியாவின் பலம் குறைந்தது. 1688 இல் டுஷீட் கான் சகுன்டோர்ஜ் (முக்கிய அல்லது நடு கல்கா தலைவர்) மேற்கு மங்கோலிய சுங்கர் கானேட்டின் அரசன் கல்டன் போஷுக்டுவின் தம்பியை கொல்கிறார். இதன் காரணமாக கல்கா-ஒயிரட் போர் ஆரம்பமானது. சகுன்டோர்ஜ் மற்றும் சனபசாரை (முதலாம் சவ்சன்டம்பா குடக்ட், கல்காவின் ஆன்மிகத் தலைவர்) கொன்று விடுவதாக கல்டன் மிரட்டினார். ஆனால் அவர்கள் சுனுட்டுக்கு (உள் மங்கோலியா) தப்பினர். பல கல்கா உயர் குடியினர் மற்றும் நாட்டுப்புற மக்கள் இந்தப் போரினால் உள் மங்கோலியாவிற்கு தப்பி ஓடினர். சில கல்காக்கள் புர்யத் பகுதிக்கு தப்பி ஓடினர். அவர்கள் அடிபணியாவிட்டால் கொன்றுவிடுவதாக உருசியா மிரட்டியது. ஆனால் பெரும்பாலானவர்கள் கல்டன் போஷுக்டுவிடம் அடிபணிந்தனர். 1683 இல் கல்டனின் ராணுவங்கள் தாஷ்கந்து மற்றும் சிர் தர்யாவை அடைந்தன. கசக் மக்களின் இரண்டு ராணுவங்களை நொறுக்கின. அதன் பிறகு கல்டன் கருப்பு கிர்கிசுக்களை அடிபணிய வைத்தார். பெர்கானா பள்ளத்தாக்கை சூறையாடினார். 1685 இல் இருந்து கல்டனின் படைகள் ஆக்ரோஷத்துடன் கசக் மக்களை இடம் பெயர வைத்தன. இவரது தளபதி ரப்டன் தரசை கைப்பற்றிய அதே நேரத்தில் இவரது முக்கிய இராணுவம் கசக் மக்களை மேற்கு நோக்கி இடம் பெயரச் செய்தது.[28] 1687 இல் இவர் துருக்கிஸ்தான் நகரத்தை முற்றுகையிட்டார். அபுல் கயிர் கானின் தலைமையின் கீழ் கசக் மக்கள் சுங்கர்களுக்கு எதிராக பெரும் வெற்றிகளை 1726 இல் புலந்தி ஆற்றங்கரையிலும் மற்றும் 1729 இல் அன்ரகாய் யுத்தத்திலும் பெற்றனர்.[29] ![]() கல்கா மங்கோலியர்கள் இறுதியாக சனபசாரின் முடிவின் படி 1691 இல் குயிங் ஆட்சிக்கு அடிபணிந்தனர். இவ்வாறாக தற்போதைய மங்கோலியாவின் அனைத்து பகுதிகளும் குயிங் அரசமரபின் ஆட்சியின் கீழ் வந்தது. ஆனால் நடைமுறையில் கல்கா மங்கோலியர்கள் கல்டன் போஷுக்டு கானின் ஆட்சியின் கீழ் 1696 வரை நீடித்தனர். 1640 இல் வேற்றுநாட்டு படையெடுப்புக்கு எதிராக ஒயிரட்டுகள் மற்றும் கல்கா மங்கோலியர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் மங்கோலிய-ஒயிரட்டு குறியீடு (ஒரு கூட்டணி ஒப்பந்தம்) கையொப்பமிடப்பட்டது. எனினும் வேற்று நாட்டு படையெடுப்புகளுக்கு எதிராக மங்கோலியர்களால் ஒன்றிணைய முடியவில்லை. 1688 வரை வெளி மங்கோலியாவின் மீதான உருசிய படையெடுப்புக்கு எதிராக சகுன்டோர்ஜ் சண்டையிட்டார். கோவுசுகல் மாகாணத்தின் மீதான உருசிய படையெடுப்பை தடுத்து நிறுத்தினார். போருக்கு முன்னர் ஒயிரட்டுகள் மற்றும் கல்கா மங்கோலியர்களை ஒன்றிணைக்க சனபசார் போராடினார். கல்கா மங்கோலியர்களின் ராணுவத்தை தோற்கடித்த பிறகு கல்டன் போஷுக்டு உள் மங்கோலியாவை "விடுதலை" பெறச் செய்வதற்காக தனது ராணுவத்தை அனுப்பினார். உள் மங்கோலிய உயர்குடியினரை மங்கோலிய சுதந்திரத்திற்கு போரிடுமாறு அழைத்தார். சில உள் மங்கோலிய உயர்குடியினர், திபெத்தியர்கள், குமுல் கானேடு மற்றும் சில மொகுலிஸ்தான் உயர்குடியினர் மஞ்சுக்களுக்கு எதிரான அவரது போரை ஆதரித்தனர். எனினும் உள் மங்கோலிய உயர்குடியினர் குயிங் அரசமரபுக்கு எதிராக போர் புரியவில்லை. கல்கா மங்கோலியர்களுக்கு மூன்று கான்கள் இருந்தனர். மேற்கு கல்கா தலைவரான சசக்ட் கான் ஷர் என்பவர் கல்டனின் கூட்டாளியாக இருந்தார். கிழக்கு கல்காத் தலைவரான செட்சன் கான் இந்த பிரச்சனையில் இருந்து விலகியே இருந்தார். கிழக்கு மங்கோலியாவில் கல்டன் போரிட்டுக் கொண்டிருந்தபோது அவரது உறவினரான செவீன்ரவ்டன் சுங்கரிய அரியணையை 1689 இல் கைப்பற்றினார். இந்த நிகழ்வு குயிங் பேரரசுக்கு எதிராக கல்டன் போரிடுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டது. உருசிய மற்றும் குயிங் பேரரசுகள் இந்த செயலை ஆதரித்தன. ஏனெனில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு மேற்கு மங்கோலிய வலிமையை பலவீனமாக்கியது. 1696 இல் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த குயிங் இராணுவத்தால் கல்டன் போஷுக்டுவின் ராணுவம் தோற்கடிக்கப்பட்டது. அவர் 1697 இல் இறந்தார். புரியத் மற்றும் உள் மங்கோலியா ஆகிய பகுதிகளுக்கு தப்பி ஓடிய மங்கோலியர்கள் இப்போருக்கு பிறகு திரும்பினர். சில கல்காக்கள் புரியத் மக்களுடன் கலந்து வாழ்ந்தனர். ![]() புர்யத்தியர்கள் உருசிய படையெடுப்புக்கு எதிராக 1620 களிலிருந்தே போரிட்டு வந்தனர். ஆயிரக்கணக்கான புர்யத்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். புர்யத் பகுதியானது அதிகாரப்பூர்வமாக 1689 மற்றும் 1727 ஆகிய ஆண்டுகளில் உருசியாவுடன் ஒப்பந்தங்கள் மூலம் இணைக்கப்பட்டது. அந்நேரத்தில் பைக்கால் ஏரியின் இருபக்கமும் இருந்த பகுதிகள் மங்கோலியாவில் இருந்து பிரிக்கப்பட்டன. 1689 இல் தற்போதைய எல்லைக்கு வடக்கே மஞ்சூரியாவின் வடக்கு எல்லையை நெர்ச்சின்ஸ்க் ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது. மங்கோலியாவுக்கு வடக்கே இருந்த பைக்கால் ஏரி மற்றும் அர்குன் ஆற்றுக்கு இடைப்பட்ட பகுதியை உருசியர்கள் தக்க வைத்துக் கொண்டனர். கியாக்தா ஒப்பந்தம் (1727) மற்றும் நெர்ச்சின்ஸ்க் ஒப்பந்தம் ஆகியவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை ஏகாதிபத்திய உருசியா மற்றும் குயிங் பேரரசுக்கு இடையே இருந்த உறவை கட்டுப்படுத்தின. இது மங்கோலியாவின் வடக்கு எல்லையை நிறுவியது. சைபீரியாவின் ஒகா ஆற்றின் அருகே வசித்த புர்யத்தியர்கள் 1767 இல் புரட்சி செய்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருசியா முழுவதுமாகக் புர்யத் பகுதியை வென்றது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை உருசியா மற்றும் குயிங் எதிரிப் பேரரசுகளாக இருந்தன. எனினும் இரண்டு பேரரசுகளும் நடு ஆசியர்களுக்கு எதிராக ஒன்றிணைந்த கொள்கைகளை செயல்படுத்தின. ![]() 1720 களில் குயிங் பேரரசு, மேல் மங்கோலியா அல்லது ஒயிரட்களின் கோஷுக்ட் கானேட்டை வென்றது. 80,000 மக்கள் கொல்லப்பட்டனர்.[30] அந்நேரத்தில் மேல் மங்கோலியாவின் மக்கள் தொகை 200,000 ஐ எட்டி இருந்தது. 1755–1758 இல் சுங்கர் கானேடு குயிங் அரசமரபால் வெல்லப்பட்டது. ஏனெனில் அவர்களது தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் பிரச்சினை செய்து கொண்டிருந்தனர். 1755–1758 இல் சுங்கர் கானேட்டை குயிங் அரசமரபு வென்ற காலத்தில் சுங்கர் மக்கள் தொகையில் சுமார் 80% மக்கள் போர் மற்றும் நோய்களால் அழிக்கப்பட்டதாக சில அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.[31] இனப்படுகொலை பற்றி ஆய்வு செய்கின்ற மார்க் லெவின் என்கிற வரலாற்றாளர்,[32] கூறுவதன்படி "சுங்கர்களை ஒழித்துக்கட்டியது தான் பதினெட்டாம் நூற்றாண்டின் பெரிய இனப்படுகொலை ஆகும்."[33] 1755 இல் சுங்கர் மக்களின் மக்கள் தொகை 600,000 எட்டியது. சுமார் 200,000–250,000 ஒயிரட்டுகள் மேற்கு மங்கோலியாவில் இருந்து இடம்பெயர்ந்து வோல்கா ஆற்றின் அருகில் 1607 இல் வசிக்கத் தொடங்கினர். கல்மிக் கானேட்டை நிறுவினர். தோர்குத்துக்கள் அவர்களது தயிசியான ஹூ ஓர்லோக்கால் தலைமை தாங்கப்பட்டனர். அவர்களது தாக்குதல் பற்றி உருசியா கவனம் செலுத்தியது. ஆனால் கல்மிக்குகள் உருசிய கூட்டாளிகள் ஆயினர். கல்மிக்குகள் மற்றும் உருசியாவுக்கு இடையில் தெற்கு உருசிய எல்லையைப் பாதுகாக்க ஒரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. 1724 இல் கல்மிக்குகள் உருசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். ஆரம்பகால பதினெட்டாம் நூற்றாண்டின் போது சுமாராக 300–350,000 கல்மிக்குகளும் 15,000,000 உருசியர்களும் இருந்தனர்.[சான்று தேவை] உருசிய ஜார் ஆட்சி கல்மிக் கானேட்டிற்கு சுயாட்சி என்கிற தனது நிலைப்பாட்டில் இருந்து படிப்படியாக விலக ஆரம்பித்தது. இந்தக் கொள்கைகள், உதாரணமாக கல்மிக்குகள் சுதந்திரமாக உலாவித் திரிந்த மற்றும் தங்களது மந்தைகளை மேய்த்த புல்வெளிகளில் உருசிய மற்றும் செருமானிய குடியிருப்புகளை ஏற்படுத்த ஊக்கப்படுத்தியது. மேலும் ஜார் அரசாங்கம் கல்மிக் கானின் மீது ஒரு சபையை திணித்தது. இதன் மூலம் கானின் அதிகாரம் குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் உருசியாவுக்கு போரிடுவதற்கு கல்மிக் கான் தொடர்ந்து குதிரைப் படைகளை கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்தது. உருசிய மரபுவழி திருச்சபை புத்தமத கல்மிக்குகளை மரபுவழி கிறித்தவத்தை பின்பற்றுமாறு அழுத்தம் கொடுத்தது. ஜனவரி 1771 இல் சுமாராக 200,000 (170,000)[34] கல்மிக்குகள் பஷ்கிர் மற்றும் கசக் எதிரிகளின் பகுதிகளின் வழியே வோல்கா ஆற்றின் இடது கரையில் இருந்த தங்களது புல்வெளிகளில் இருந்து சுங்கரியாவுக்கு (மேற்கு மங்கோலியா) இடம் பெயர ஆரம்பித்தனர். கடைசி கல்மிக் கானான உபஷி கான் மங்கோலிய சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இந்த இடம் பெயருதலுக்கு தலைமை தாங்கினார். 1768–1769 இல் நடைபெற்ற உருசிய-துருக்கிய போருக்கு தனது 30,000 குதிரைப்படை வீரர்களை இடம் பெயருவதற்கு முன்பு ஆயுதங்களை பெற உபஷி கான் அனுப்பினார். பேரரசியான உருசியாவின் இரண்டாம் கத்தரீன் உருசிய ராணுவம், பஷ்கிர்கள் மற்றும் கசக்குகள் ஆகியோருக்கு அனைத்து குடியேறுபவர்களையும் ஒழித்துக்கட்டுமாறு ஆணையிட்டார். கல்மிக் கானேட்டை பேரரசி அழித்தார்.[34][35][36][37][38] பால்கசு ஏரியின் அருகில் கிர்கிசுக்கள் அவர்களை தாக்கினர். 1771 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் வோல்கா ஆறு உறையவில்லை. இதன் காரணமாக வோல்கா ஆற்றின் மேற்குக்கரையில் குடியிருந்த 100,000–150,000 கல்மிக்குகளால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. உருசியாவின் இரண்டாம் கத்தரீன் செல்வாக்கு மிகுந்த உயர்குடியினரை கொன்றார். 7 மாத பயணத்திற்கு பிறகு பயணத்தைத் தொடங்கிய உண்மையான குழுவில் மூன்றில் ஒரு பங்கு (66,073)[34] கல்மிக்குகள் மட்டுமே சுங்கரியாவை (பால்கசு ஏரி, குயிங் பேரரசின் மேற்கு எல்லை) அடைந்தனர்.[39] குயிங் பேரரசு அங்கு வந்த கல்மிக்குகளை ஐந்து வெவ்வேறு பகுதிகளுக்கு அவர்களது புரட்சியை தடுப்பதற்காக அனுப்பியது. கல்மிக்குகளின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் சீக்கிரமே இறந்தனர் (மஞ்சுக்களால் கொல்லப்பட்டனர்). 1659 இல் மங்கோலிய ஒடுக்குமுறையால் புர்யத்தியா சுய விருப்பத்தின் பெயரில் உருசியாவுடன் இணைந்ததாகவும் 1609 இல் கல்மிக்குகள் சுய விருப்பத்தின் பெயரில் உருசிய ஆட்சியை ஏற்றுக் கொண்டதாகவும் உருசியா கூறுகிறது. ஆனால் சார்சியர்கள் மட்டுமே சுயவிருப்பத்தின் பேரில் உருசிய ஆட்சியை ஏற்றுக் கொண்டனர்.[40][41] ஆரம்பகால இருபதாம் நூற்றாண்டின் போது "புதிய கொள்கைகள்" அல்லது "புதிய நிர்வாகம்" (சின்செங்) என்ற பெயரில் பிந்தைய குயிங் அரசாங்கம் மங்கோலிய நிலங்களை ஹான் சீனர்கள் காலனிப்படுத்த ஊக்கப்படுத்தியது. இதன் காரணமாக சில மங்கோலியர்கள் (குறிப்பாக வெளி மங்கோலியாவில் இருந்தவர்கள்) மங்கோலிய சுதந்திரத்தை கேட்க முடிவு செய்தனர். சின்ஹாய் புரட்சிக்குப் பிறகு, 30 நவம்பர் 1911 இல் வெளி மங்கோலியாவில் நடைபெற்ற மங்கோலிய புரட்சி 200 வருடங்களுக்கு மேலாக நீடித்த குயிங் அரசமரபின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. குயிங் சகாப்தத்திற்கு பிறகு![]() வெளி மங்கோலியாவின் சுதந்திரத்திற்கு பிறகு மங்கோலிய இராணுவமானது கல்கா மற்றும் கோவுத் பகுதிகளை (தற்கால கோவுத் மற்றும் பயன்-ஒல்கீ மாகாணங்கள்) கட்டுப்படுத்தியது. ஆனால் வடக்கு சிஞ்சியாங் (குயிங் பேரரசின் அல்தாய் மற்றும் இலி பகுதிகள்), மேல் மங்கோலியா மற்றும் உள் மங்கோலியா ஆகிய பகுதிகள் புதியதாக உருவாக்கப்பட்ட சீனக் குடியரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பிப்ரவரி 2, 1913 இல் மங்கோலியாவின் போக்ட் கானேடு உள் மங்கோலியாவை சீனாவிடம் இருந்து "சுதந்திரம் பெற" செய்ய மங்கோலிய குதிரை படைகளை அனுப்பியது. உருசியா போக்ட் கானேட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்ய மறுத்தது. உருசிய ஜார் மன்னரான இரண்டாம் நிக்கோலாஸ் இச்செயலை "மங்கோலிய ஏகாதிபத்தியம்" என்று கூறினார். மேலும் ஐக்கிய ராஜ்யம் உருசியாவை மங்கோலிய சுதந்திரத்தை ஒழிக்குமாறு வலியுறுத்தியது. ஏனெனில் "மங்கோலியர்கள் சுதந்திரமடைந்தால், நடு ஆசியர்கள் கிளர்ச்சி செய்வார்கள்" என்று கூறியது. 10,000 கல்கா மற்றும் உள் மங்கோலிய குதிரைப் படையினர் (சுமார் 3,500 உள் மங்கோலியர்கள்) 70,000 சீன வீரர்களை தோற்கடித்தனர். கிட்டத்தட்ட உள் மங்கோலியாவின் அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்; எனினும் 1914 இல் மங்கோலிய ராணுவம் ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் பின்வாங்கியது. 400 மங்கோலிய வீரர்கள் மற்றும் 3,795 சீன வீரர்கள் இப்போரில் இறந்தனர். கல்காக்கள், கோவுத் ஒயிரட்டுகள், புர்யத்தியர்கள், சுங்கரிய ஒயிரட்டுகள், மேல் மங்கோலியர்கள், பர்கா மங்கோலியர்கள், பெரும்பாலான உள் மங்கோலியர்கள் மற்றும் சில துவன் தலைவர்கள் மங்கோலிய ஒருங்கிணைப்புக்கான போக்ட் கானின் அழைப்பிற்கு ஆதரவு கொடுக்குமாறு அறிக்கைகளை அனுப்பினர். ஆனால் நடைமுறையில் பெரும்பாலானவர்கள் போக்ட் கானின் ஆட்சியில் இணையும் முயற்சியில் அதிக விவேகத்தை கடைபிடித்தோ அல்லது அவசரமற்றோ இருந்தனர்.[42] 1914 இல் சீனாவின் சுயாட்சி பகுதியாக மங்கோலியா வருவதற்கு உருசியா ஊக்கப்படுத்தியது. 1915 இல் கியாக்தா ஒப்பந்தத்தின் படி சுங்கரியா, துவா, மேல் மங்கோலியா மற்றும் உள் மங்கோலியா ஆகிய பகுதிகளை மங்கோலியா இழந்தது. அக்டோபர் 1919 இல் மங்கோலிய நாட்டுப்பற்று மிக்க உயர் குடியினரின் சந்தேகத்திற்குரிய மரணத்திற்குப் பிறகு சீனக் குடியரசு மங்கோலியாவை ஆக்கிரமித்தது. 3 பிப்ரவரி 1921 இல் பாரோன் உங்கெர்ன் தலைமையிலான பெரும்பாலும் சுய விருப்பத்தின் பேரில் இணைந்த மங்கோலிய குதிரைப் படையினர், மற்றும் புர்யத் மற்றும் தாதர் கொசக்குகள் அடங்கிய உருசிய வெள்ளை ராணுவம் மங்கோலிய தலைநகரை சுதந்திரம் பெற செய்தது. பாரோன் உங்கெர்னின் குறிக்கோளானது சோவியத் யூனியனை தோற்கடிக்க கூட்டாளிகளை தேடுவதாகும். 1921 இல் மங்கோலிய புரட்சித் தலைவர்களால் மங்கோலியாவின் மறு ஒருங்கிணைப்புக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் சோவியத் யூனியன் சீனக் குடியரசுடனான ரகசிய பேச்சு வார்த்தையின்போது 1924 இல் மங்கோலியாவை சீனாவின் பகுதியாக கருதியது. எனினும் 1945 இல் சோவியத் யூனியன் அதிகாரபூர்வமாக மங்கோலிய சுதந்திரத்தை அங்கிகரித்தது. ஆனால் 1991 இல் சோவியத் யூனியன், தான் வீழ்ச்சி அடையும் வரை மங்கோலிய விடுதலை மற்றும் பிற எல்லை மீட்பு கொள்கை கொண்ட இயக்கங்களுக்கு எதிராக பல்வேறு கொள்கைகளை (அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார) செயல்படுத்தியது. 10 ஏப்ரல் 1932 இல் மங்கோலியர்கள் அரசாங்கத்தின் புதிய கொள்கை மற்றும் சோவியத்துக்கு எதிராக புரட்சி செய்தனர். அரசாங்கம் மற்றும் சோவியத் வீரர்கள் எதிர்ப்பாளர்களை அக்டோபரில் தோற்கடித்தனர். உருசிய ஒடுக்குமுறை காரணமாக 1900களில் புர்யத்தியர்கள் மங்கோலியாவிற்கு இடம்பெயர ஆரம்பித்தனர். ஜோசப் ஸ்டாலினின் ஆட்சி 1930 இல் இந்த இடம் பெயருதலை தடுத்தது. புதிதாக வருபவர்கள் மற்றும் மங்கோலியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்யும் வேலையை ஆரம்பித்தது. மங்கோலியாவில் ஸ்டாலின் சகாப்த ஒடுக்குமுறைகளின் போது கிட்டத்தட்ட அனைத்து வயது வந்த புர்யத் ஆண்கள் மற்றும் 22–33,000 மங்கோலியர்கள் (மொத்த மக்கள்தொகையில் 3–5% பேர், பொதுமக்கள், பிக்குகள், மங்கோலிய சுதந்திர ஆதரவாளர்கள், தேசியவாதிகள், நாட்டுப்பற்றாளர்கள், நூற்றுக்கணக்கான ராணுவ அதிகாரிகள், உயர்குடியினர், அறிஞர்கள் மற்றும் முக்கிய நபர்கள்) சோவியத் கட்டளைகளின்படி சுட்டுக் கொல்லப்பட்டனர்.[43][44] சில அறிஞர்கள், மதிப்பீடானது 100,000 நபர்கள் வரை அதிகம் என கூறுகின்றனர்.[44] பிந்தைய 1930களின் போது மங்கோலிய மக்கள் குடியரசு மொத்தமாக 700,000 முதல் 900,000 வரை மக்கள் தொகையைக் கொண்டு இருந்தது. 1939 இல் சோவியத்துகள் கூறியதாவது "நாம் அதிகப்படியான மக்களை ஒழித்துக் கட்டி விட்டோம், மங்கோலியாவின் மக்கள்தொகையானது சில நூறு ஆயிரங்களே எஞ்சி உள்ளது". மக்கள் தொகையைப் பொறுத்து கொல்லப்பட்ட நபர்களின் விகிதமானது சோவியத் யூனியனில் நடத்தப்பட்ட பெரிய ஒழித்துக் கட்டலை விட அதிகமாக இருந்தது. ![]() ஜப்பானியப் பேரரசின் (1868–1947) கைப்பாவை மாநிலமான மஞ்சுகுவோ (1932–1945) பர்கா மற்றும் உள் மங்கோலியாவின் சில பகுதிகள் மீது ஜப்பானிய உதவியுடன் படையெடுத்தது. 1945 இல் சோவியத்-ஜப்பானிய போரின் (மங்கோலிய பெயர்: 1945 இன் சுதந்திரப் போர்) போது மங்கோலிய இராணுவமானது சீன பெருஞ்சுவரை நோக்கி முன்னேறியது. ஜப்பானியர்கள் உள் மங்கோலிய மற்றும் பர்கா மக்களை மங்கோலியர்களுக்கு எதிராக போர் புரிய கட்டாயப்படுத்தினர். ஆனால் அவர்கள் மங்கோலியர்களிடம் சரணடைந்து தங்களது ஜப்பானிய மற்றும் மஞ்சு கூட்டாளிகளுக்கு எதிராக சண்டையிட ஆரம்பித்தனர். மார்ஷல் கோர்லூகீன் சோயிபல்சன் உள் மங்கோலியர்கள் மற்றும் ஒயிரட்டுகளை போரின் போது மங்கோலியாவிற்கு இடம் பெயருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் சோவியத் இராணுவம் உள் மங்கோலிய குடியேறுபவர்களின் வழிகளை தடுத்தது. இது மங்கோலிய ஆதரவாளர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். சில ஒயிரட்டுகள் மற்றும் உள் மங்கோலியர்கள் (ஹூச்சிட்கள், பர்காக்கள், துமேட்கள், சுமார் 800 உசெம்சின்கள்) மங்கோலியாவிற்கு வந்தனர். 1911 ஆம் ஆண்டில் இருந்தே உள் மங்கோலியாவை மங்கோலியாவுடன் இணைப்பதற்கான கொள்கைகளை உள் மங்கோலிய தலைவர்கள் செயல்படுத்தி வந்தனர். 1929 இல் அவர்கள் உள் மங்கோலிய ராணுவத்தை நிறுவினர். ஆனால் இரண்டாம் உலகப் போரை முடித்துக் கொண்ட பின்னர் உள் மங்கோலிய ராணுவம் கலைக்கப்பட்டது. ஜப்பானிய பேரரசு மங்கோலிய ஆதரவாளர்களை 1910 களில் இருந்தே ஆதரித்து வந்தது. ஆனால் மங்கோலியா மற்றும் ஏகாதிபத்திய ஜப்பானுக்கு இடையில் உருசிய எதிர்ப்பு காரணமாக செயல்படக்கூடிய உறவு என்றுமே இருந்ததில்லை. 1936 இல் ஜப்பானின் ஆதரவுடன் உள் மங்கோலியாவில் பெயரளவில் சுதந்திரமான மெஞ்சியாங் மாநிலம் (1936–1945) நிறுவப்பட்டது. மேலும் 1919 இல் ஜப்பானின் ஆதரவுடன் சில புர்யத் மற்றும் மங்கோலிய உயர்குடியினர் மங்கோலிய ஆதரவு அரசாங்கத்தை நிறுவினர். ![]() 1945 இல் உள் மங்கோலியர்கள் சிறிது காலமே நீடித்த உள் மங்கோலிய குடியரசை நிறுவினர். சோயிபல்சனின் திட்டத்தின் மற்றொரு பகுதியானது உள் மங்கோலியா மற்றும் சுங்கரியாவை மங்கோலியாவுடன் இணைப்பதாகும். 1945 இல் சீன பொதுவுடைமைவாத தலைவர் மாவோ சேதுங் சோவியத்துகளை மங்கோலிய ஆதரவாளர்களை தடுத்து நிறுத்துமாறு கூறினார். ஏனெனில் சீனா உள் மங்கோலியாவின் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்தது. உள் மங்கோலிய ஆதரவின்றி பொதுவுடமைவாதிகளால் ஜப்பான் மற்றும் குவோமின்டங்கை தோற்கடிக்க முடியவில்லை. 1930–1940 களில் மங்கோலியா மற்றும் சோவியத் யூனியன் ஆதரவு பெற்ற சிஞ்சியாங் உய்குர்கள் மற்றும் கசக்குகளின் பிரிவினைவாத இயக்கத்தை ஆதரித்தன. சீனப் பொதுவுடமைக் கட்சி மற்றும் மங்கோலியா ஆகியவற்றுடனான கூட்டணி அழுத்தத்தில் இருந்த பிரிவினைவாதிகளுடனான உறவிற்கு தடையாக மாற ஆரம்பித்த பிறகு 1945 இல் சோவியத் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மறுத்தது. சிஞ்சியாங்கின் ஒயிரட்டுகளின் போராளிக் குழுக்கள் துருக்கிய மக்களுடன் இணைந்து செயலாற்றின. ஆனால் அவர்களது குறைவான மக்கள் தொகை காரணமாக ஒயிரட்டுகளால் தலைமைப் பொறுப்புக்கு வர முடியவில்லை. பசுமச்சிகள் அல்லது துருக்கிய மற்றும் தஜிக் போராளிகள் 1942 வரை நடு ஆசியாவின் (சோவியத் நடு ஆசியா) சுதந்திரத்திற்காக சண்டையிட்டனர். பிப்ரவரி 2, 1913 இல் மங்கோலிய அரசாங்கம் மற்றும் திபெத்திற்கு இடையிலான நட்பு மற்றும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 1920களில் திபெத்தில் இருந்த ஆட்சியை மாற்ற சோவியத்துகள் நடத்திய ரகசிய திட்டங்களை மங்கோலிய முகவர்கள் மற்றும் போக்ட் கான் ஆகியோர் பாதிப்படையச் செய்தனர். அக்டோபர் 27, 1961 இல் ஐக்கிய நாடுகள் சபை மங்கோலிய சுதந்திரத்தை அங்கீகரித்தது. மங்கோலியாவிற்கு தனது சபையில் முழு உறுப்பினருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது. உருசிய ஜார் ஆட்சி, உருசியப் பேரரசு, சோவியத் யூனியன், முதலாளித்துவ மற்றும் பொதுவுடைமைவாத சீனா ஆகியவை பல்வேறு இனப்படுகொலை மற்றும் செயல்களை மங்கோலியர்களுக்கு (தன் வயப்படுத்துதல், மக்கள் தொகையை குறைத்தல், மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு, மதம் மற்றும் இன அடையாளம் ஆகியவற்றை அழித்தல்) எதிராக செய்தன. மகா பேதுரு பின்வருமாறு கூறினார்: "எனிசை ஆறு உற்பத்தியாகும் இடம் உருசிய நிலமாக தான் இருக்க வேண்டும்".[45] உருசியப் பேரரசு கல்மிக்குகள் மற்றும் புரியத்தியர்களை மக்கள் தொகையை குறைப்பதற்காக போருக்கு (முதலாம் உலகப் போர் மற்றும் பிற போர்கள்) அனுப்பியது. சோவியத் விஞ்ஞானிகள் கல்மிக்குகள் மற்றும் புரியத்தியர்களிடம் அவர்கள் மங்கோலியர்கள் அல்ல என ஒத்துக் கொள்ள வைக்கும் முயற்சிகளை இருபதாம் நூற்றாண்டின் போது செய்தனர் (மங்கோலியர் அல்லாதவராக்கும் முயற்சி). 1927 இல் கிளர்ச்சியின்போது 35,000 புரியத்தியர்கள் கொல்லப்பட்டனர். 1900கள்–1950களுக்கு இடையில் உருசியாவில் இருந்த மூன்றில் ஒரு பங்கு புரியத்தியர்கள் இறந்தனர்.[46][47] 1930களில் ஸ்டாலினின் கட்டளையின்படி புரியத்- மங்கோலிய சுயாட்சி சோவியத் சோசலிச குடியரசில் இருந்த 10,000 புரியத்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[48] 1919 இல் உருசியாவின் கிசிங்கின்ஸ்கி மாவட்டத்தில் புரியத்தியர்கள் ஒரு சிறிய மத சார்புடைய பலகட் மாநிலத்தை நிறுவினர். 1926 இல் புரியத் மாநிலம் வீழ்ந்தது. 1958 இல் புரியத்-மங்கோலிய சுயாட்சி சோவியத் சோசலிச குடியரசிலிருந்து "மங்கோலியர்" என்ற பெயர் நீக்கப்பட்டது. 22 ஜனவரி 1922 இல் கல்மிக் பஞ்சத்தின்போது கல்மிக்குகளை இடம்பெயர செய்ய மங்கோலியா பரிந்துரைத்தது. ஆனால் போல்ஷ்விக் உருசியா மறுத்தது. 1921–22 இல் உருசிய பஞ்சத்தின்போது 71–72,000 (93,000?; கிட்டத்தட்ட பாதி மக்கள் தொகை) கல்மிக்குகள் இறந்தனர்.[49] 1926, 1930 மற்றும் 1942–1943 ஆகிய ஆண்டுகளில் கல்மிக்குகள் சோவியத் யூனியனுக்கு எதிராக புரட்சி செய்தனர். 1913 இல் உருசியாவின் ஜார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ் பின்வருமாறு கூறினார்: "நாம் வோல்கா தாதர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கல்மிக்குகள் அவர்களை விட ஆபத்தானவர்கள். ஏனெனில் கல்மிக்குகள் மங்கோலியர்கள் ஆவர். எனவே அவர்களது மக்கள் தொகையை குறைப்பதற்காக அவர்களை போருக்கு அனுப்புங்கள்".[50] 23 ஏப்ரல் 1923 இல் உருசிய பொதுவுடைமைவாத தலைவர் ஜோசப் ஸ்டாலின் பின்வருமாறு கூறினார்: "மங்கோலியர்களுடன் தொடர்புடைய கல்மிக்குகள் மீது நாம் தவறான கொள்கையை செயல்படுத்தி வருகிறோம். நமது கொள்கை மிகவும் அமைதியான கொள்கையாக உள்ளது".[50] மார்ச் 1927 இல் சோவியத் 20,000 கல்மிக்குகளை சைபீரியா, தூந்திரப் பகுதி மற்றும் கரேலியா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பியது. 22 மார்ச் 1930 இல் கல்மிக்குகள் இறையாண்மையுடைய ஒயிரட்-கல்மிக் குடியரசை நிறுவினர்.[50] ஒயிரட் மாநிலம் ஒரு சிறிய ராணுவத்தை மட்டுமே கொண்டிருந்தது. 200 கல்மிக் வீரர்கள் 1,700 சோவியத் வீரர்களை கல்மிகியாவின் துர்வுட் மாகாணத்தில் தோற்கடித்தனர். ஆனால் ஒயிரட் மாநிலம் சோவியத் இராணுவத்தால் 1930 இல் அழிக்கப்பட்டது. கல்மிகிய தேசியவாதிகள் மற்றும் மங்கோலிய ஆதரவாளர்கள் கல்மிக்குகளை மங்கோலியாவிற்கு இடம்பெயரச் செய்ய 1920களில் முயற்சி செய்தனர். சோவியத் யூனியனின் மங்கோலியர்களை மங்கோலியாவிற்கு இடம்பெயரச் செய்ய மங்கோலியா 1920களில் பரிந்துரைத்தது. ஆனால் உருசியா பரிந்துரைகளை ஏற்கவில்லை. 1943 இல் ஸ்டாலின் அனைத்து கல்மிக்குகளையும் சைபீரியாவிற்கு நாடு கடத்தினார். 1957 இல் அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் கல்மிக் மக்களில் கிட்டத்தட்ட பாதி மக்கள் (97–98,000) இறந்தனர்.[51] நாடு கடத்தலின் போது சோவியத் யூனியனின் அரசாங்கம் கல்மிக் மொழியை கற்பிப்பதை தடை செய்தது. கல்மிக்குகளின் முக்கியமான நோக்கம் மங்கோலியாவிற்கு இடம்பெயருவதாகும். பல கல்மிக்குகள் செருமானிய ராணுவத்தில் இணைந்தனர். மார்ஷல் கோர்லூகீன் சோயிபல்சன் நாடுகடத்தப்பட்ட கல்மிக்குகளை மங்கோலியாவிற்கு இடம் பெயரச் செய்ய முயற்சித்தார். தன்னுடைய உருசிய பயணத்தின்போது அவர்களை சைபீரியாவில் சந்தித்தார். ஏப்ரல் 26, 1991 இன் உருசிய கூட்டமைப்பின் "நாடுகடத்தப்பட்ட மக்களின் மறுவாழ்வு" சட்டத்தின் கீழ் கல்மிக்குகள் மற்றும் பிற மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையானது இனப்படுகொலைக்கு சமமானதாக கருதப்படும். ![]() இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு சியாங் கை-ஷேக்கின் தலைமையிலான சீன தேசியவாதிகள் (குவோமின்டங்) மற்றும் மாவோ சேதுங் தலைமையிலான சீன பொதுவுடைமை கட்சிக்கும் இடையில் சீன உள்நாட்டு போர் மீண்டும் தொடர்ந்தது. டிசம்பர் 1949 இல் சியாங் தன்னுடைய அரசாங்கத்தை தைவானுக்கு கொண்டு சென்றார். லட்சக்கணக்கான உள் மங்கோலியர்கள் 1960களில் கலாச்சாரப் புரட்சியின் போது படுகொலை செய்யப்பட்டனர். இப்புரட்சியின் போது சீனா மங்கோலியா கலாச்சாரங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் மங்கோலிய மொழிகளில் கற்பிப்பதை தடை செய்தது. உள் மங்கோலியாவில் சுமார் 790,000 மக்கள் துன்பப்படுத்தப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் போது சுமாராக 1,000,000 உள் மங்கோலியர்கள் கொல்லப்பட்டனர்.[52][சான்று தேவை] 1960 இல் சீன பத்திரிகை பின்வருமாறு எழுதியது: "ஹான் சீனர்களின் இன அடையாளமே சீன சிறுபான்மையினரின் இன அடையாளமாக இருக்க வேண்டும்".[சான்று தேவை] சீன-சோவியத் பிரிவின் காரணமாக 1960கள் முதல் 1980கள் வரை சீன-மங்கோலிய உறவுகள் பதற்றத்துடனேயே இருந்தன. அக்காலகட்டத்தில் பல்வேறு எல்லை மோதல்களும் நடைபெற்றன.[53] இரு எல்லைகளுக்கு இடையிலான மங்கோலியர்களின் நடமாட்டமும் தடுக்கப்பட்டது. 3 அக்டோபர் 2002 இல் சீனக் குடியரசின் வெளிநாட்டு உறவுகளுக்கான அமைச்சரவை தைவான் மங்கோலியாவை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தது.[54] எனினும் மங்கோலியாவிற்கு உரிமை கோருகின்ற தன் அரசியல் அமைப்பிற்கு பதில் கூறுமாறு எந்த ஒரு சட்டமன்ற நடவடிக்கைகளையும் அது எடுக்கவில்லை.[55] மங்கோலியா மற்றும் திபெத்திய உறவுகள் ஆணைக்குழு போன்ற வெளி மங்கோலியா மீது உரிமை கோர தைவானால் நிறுவப்பட்ட அலுவலகங்கள் செயலற்றே இருக்கின்றன.[56] புரியத்தியர்களின் எதிர்ப்பையும் மீறி 2008 இல் அகின்-புரியத் பிராந்தியம் மற்றும் உஸ்ட் ஓர்டா-புரியத் பிராந்தியம் ஆகியவை இர்குட்ஸ்க் ஒப்ளாஸ்ட் மற்றும் சிடா ஒப்ளாஸ்ட் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டன. 2011 இல் சிறிய அளவிலான போராட்டங்கள் உள் மங்கோலியாவில் நடைபெற்றன. உள் மங்கோலிய மக்கள் கட்சியானது பிரதிநிதித்துவப்படுத்தப்படாத நாடுகள் மற்றும் மக்களின் அவையின் உறுப்பினர் ஆகும்.[57] இதன் தலைவர்கள் ஒரு இறையாண்மையுடைய மாநிலத்தை நிறுவுவதற்கு அல்லது உள் மங்கோலியாவை மங்கோலியாவுடன் இணைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ![]() மொழி![]() மங்கோலிய மொழி மங்கோலியாவின் தேசிய மொழி ஆகும். 2010 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இம்மொழி அங்கு கிட்டத்தட்ட 28 லட்சம் மக்களால் பேசப்படுகிறது.[58] இது சீனாவின் உள் மங்கோலியா சுயாட்சி பகுதிக்கு மாகாண அலுவல் மொழியாகும். அங்கே குறைந்தது 41 லட்சம் மங்கோலிய இனத்தவர்கள் வசிக்கின்றனர்.[59] சீனா முழுவதும் இம்மொழி 2005 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி அந்நாட்டின் 58 லட்ச மங்கோலிய இனத்தவர்களில் பாதி பேரால் பேசப்படுகிறது.[58] எனினும் சீனாவில் உள்ள மங்கோலிய மொழி பேசுபவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஏனெனில் சீனாவில் வசிக்கும் குடிமக்களின் மொழி பற்றிய தரவு கிடையாது. சீனாவில் மங்கோலிய மொழியின் பயன்பாடானது குறிப்பாக உள் மங்கோலியாவில் அதன் பயன்பாடு பல்வேறு ஏற்ற இறக்கங்களை கடந்த சில நூற்றாண்டுகளில் சந்தித்துள்ளது. இம்மொழி பிற்கால குயிங் காலத்தில் சரிவைச் சந்தித்தது. 1947 மற்றும் 1965க்கு இடையில் மீண்டும் பயன்பாட்டில் ஏற்றங்கண்டது. 1966 மற்றும் 1976க்கு இடையில் இரண்டாவது முறையாக மீண்டும் சரிவை சந்தித்தது. 1977 மட்டும் 1992க்கு இடையில் இரண்டாவது முறையாக ஏற்றங்கண்டது. 1995 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மூன்றாவது முறையாக சரிவை சந்தித்தது.[60] உள் மங்கோலியாவின் நகர்ப்புற பகுதிகளில் மற்றும் கல்வி சரகங்களில் மங்கோலிய மொழி சரிவை சந்தித்த போதிலும், சீன மொழி பேசும் நகர்புற மங்கோலியர்களின் இன அடையாளமானது நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நகர்புற இனக்குழுக்கள் காரணமாக அவை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.[61] உள் மங்கோலியாவின் பல மொழி பேசும் நிலைமையானது மங்கோலிய இனத்தவர் தங்களது மொழியை பாதுகாத்துக் கொள்வதில் எந்தவித இடையூறையும் ஏற்படுத்தவில்லை.[62][63] எண்ணிக்கை தெரியாத அளவிற்கு சீனாவில் உள்ள துமேட்கள் போன்ற மங்கோலியர்கள் தங்களது மொழியை பேசும் சக்தியை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ இழந்து விட்ட நிலையிலும், அவர்கள் இன்றும் தங்களை மங்கோலிய இனத்தவர் என்றே பதிவு செய்கின்றனர். தங்களை மங்கோலிய இனத்தவர் என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.[58][64] மங்கோலிய-சீன இனத்தவருக்கு இடையில் நடைபெறும் திருமணங்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளும் தங்களை மங்கோலிய இனத்தவர் என்று தான் பதிவு செய்து கொள்கின்றனர்.[65] மங்கோலிய மொழிகள் மற்றும் தொடர்புடைய பழங்குடியினர்களின் குறிப்பிடத்தகுந்த தோற்றம் தெளிவாக இல்லை. மொழியியலாளர்கள் பாரம்பரியமாக துங்குசிக் மற்றும் துருக்கிய மொழிக் குடும்பங்களுடன் தொடர்பு இருப்பதாக பரிந்துரைக்கின்றனர். மங்கோலிய மொழியை பெரிய குழுவான அல்டைக் மொழிகளுடன் இணைக்கின்றனர். எனினும் இது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. தற்காலத்தில் மங்கோலிய மக்கள் பல்வேறு மங்கோலிய மொழிகளில் மங்கோலியம், புரியத், ஒயிரட், டோங்க்ஷியாங், டு, போனன், ஹசாராகி மற்றும் அயிமக் ஆகியவற்றில் குறைந்தது ஒன்றை பேசுகின்றனர். கூடுதலாக பல மங்கோலியர்கள் உருசியம் அல்லது மாண்டரின் சீனத்தை இனங்களுக்கு இடையில் தகவல் தொடர்பிற்கு பயன்படுத்துகின்றனர். மதம்![]() மங்கோலிய மக்களின் உண்மையான மதம் ஷாமன் மதம் ஆகும். சியான்பே மக்கள் கன்பூசியம் மற்றும் தாவோயியத்துடன் தொடர்பில் இருந்தனர். ஆனால் இறுதியில் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். எனினும் மங்கோலியா மற்றும் ரூரன் ககானேட்டில் இருந்த சியான்பே மக்கள் ஷாமன் மதத்தின் ஒரு வடிவத்தை பின்பற்றினர். ஐந்தாவது நூற்றாண்டில் பௌத்த பிக்குவான தர்மப்பிரியா ரூரன் ககானேட்டின் ராஜ குருவாக ஆனார். அவருக்கு 3000 குடும்பங்கள் கொடுக்கப்பட்டன. சில ரூரன் உயர்குடியினர் பௌத்த மதத்தினர் ஆயினர். 511 இல் ரூரன் ககானேட்டின் கான் ஆகிய தோவுலுவோபுபடோவுபா கான் கோங் சுவானை துவோபா அவைக்கு முத்தால் இழைக்கப்பட்ட புத்தரின் சிலையை பரிசாகக் கொடுத்து அனுப்பினார். துவோபா சியான்பே மற்றும் கிதான்கள் பெரும்பாலும் புத்த மதத்தினராக இருந்தனர். அவர்கள் தங்களது உண்மையான மதமான ஷாமன் மதத்தை விட்டுவிடாமல் இருந்தபோதிலும் புத்த மதத்தினராக இருந்தனர். தங்களது தலைநகரத்திற்கு மேற்கில் துவோபா "பலிகொடுக்கும் கோட்டையை" கொண்டிருந்தனர். அங்கு ஆன்மாக்களுக்கான விழாக்கள் நடைபெற்றன. அந்த பலிகொடுக்கும் கோட்டையின் உச்சியில் ஆன்மாக்களின் மரச்சிலைகள் எழுப்பப்பட்டன. இத்தகைய ஒரு சடங்கின் படி 7 இளவரசர்கள் படைக்கப்பட்ட பாலுடன் படிகளில் 20 பெண் ஷாமன்களுடன் ஏறி பிரார்த்தனை செய்தனர். புனிதமான பாலை சிலைகளின் மீது தெளித்தனர். கிதான்கள் தங்களது மிகப் புனிதமான கோயிலை முயே மலை மீது வைத்திருந்தனர். அங்கு அவர்களது முதல் முன்னோரான கிஷோவு கான், அவரது மனைவி கெதுன் மற்றும் அவர்களது 8 மகன்களின் படங்கள் 2 கோயில்களில் வைக்கப்பட்டிருந்தன. மங்கோலிய மக்கள் மேற்கிலிருந்து வந்த சமயங்களான சொராட்டிய நெறி, மனிச்சேயிய மதம், நெசுத்தோரியக் கிறித்தவம், கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் இஸ்லாம் ஆகியவற்றையும் பற்றி அறிந்திருந்தனர். மங்கோலிய மக்கள் குறிப்பாக போர்சிசின்கள் அவர்களது மிகப் புனிதமான கோயிலை புர்கான் கல்துன் மலைமீது கொண்டிருந்தனர். அங்குதான் அவர்களது முன்னோரான போர்ட்டே சினோ (நீல ஓநாய்) மற்றும் குவோ மரால் (அழகான பெண் மான்) ஆகியோர் மங்கோலியர்களுக்கு பிறப்பை கொடுத்தனர். தனது படையெடுப்புகளுக்கு முன்னர் பொதுவாக செங்கிஸ்கான் விரதமிருந்து, பிரார்த்தனை செய்து மற்றும் தியானத்திலும் இம்மலையின் மீது ஈடுபட்டார். ஒரு இளைஞனாக அவர் தனது வாழ்க்கையை காப்பாற்றியதற்காக இம்மலைக்கு நன்றி தெரிவித்தார். இம்மலையின் அடிவாரத்தில் பிரார்த்தனை செய்து படையல்களை தெளித்தார். தனது கழுத்தை சுற்றிலும் பெல்ட்டை வைத்து தனது தொப்பியை நெஞ்சின் மீது வைத்து கிழக்கு நோக்கி 9 தடவை குனிந்து வணங்கினார். செங்கிஸ்கான் சில நேரங்களில் தனது அதிகாரத்துடன் பிரச்சினை செய்த மங்கோலிய உச்ச ஷாமனாகிய கொகோசு தெப் தெங்கிரி மீது ஒரு உற்றுநோக்கிய கவனத்தை கொண்டிருந்தார். பிற்காலத்தில் செங்கிஸ்கானின் ஏகாதிபத்திய வழிபாடு (எட்டு வெள்ளை கெர்கள் மற்றும் ஓர்டோசில் இருந்த ஒன்பது வெள்ளை பதாகைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது) மங்கோலிய மொழியில் வேதங்களை கொண்ட ஒரு சிறந்த அமைப்புடன் கூடிய உள்ளூர் மதமாக வளர்ந்தது. மங்கோலிய மக்களின் உள்ளூர் தார்மீக கருத்துக்கள் வாய்வழி ஞான கதைகள், ஆன்டா அமைப்பு (இரத்த-சகோதரன்) மற்றும் பண்டைய நூல்களான சிங்கிஸ்-உன் பிலிக் (செங்கிஸ்கானின் ஞானம்) மற்றும் ஒயுன் துல்கூர் (நுண்ணறிவு விசை) ஆகியவை மூலம் புனிதமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. தார்மீக கருத்துக்கள் பாடல் வடிவில் கூறப்பட்டன. பொதுவாக உண்மை, நம்பகத்தன்மை, கஷ்டத்தில் உதவுதல், ஒற்றுமை, சுய-கட்டுப்பாடு, மனோபலம், இயற்கையை வழிபடுதல், அரசை வழிபடுதல் மற்றும் பெற்றோரை வழிபடுதல் ஆகியவற்றை இந்த தார்மீக கருத்துக்கள் உள்ளடக்கியிருந்தன. ![]() 1254 இல் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்த கரகோரம் நகரத்தில், மோங்கே கான் முறையான மதங்களுக்கிடையேயான விவாதத்தை (இவ்விவாதத்தில் ரூபிரக்கின் வில்லியம் பங்கேற்றார்) கிறித்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பௌத்த மதத்தினருக்கு இடையே நடத்தினார். மங்கோலியப் பேரரசு அதன் சமய சகிப்புத் தன்மைக்காக அறியப்பட்டது. ஆனால் பௌத்த மதத்திற்கு என சிறப்பு சார்பு தன்மையை கொண்டிருந்தது. தெங்கிரியை (வான் கடவுள்) வழிபட்டுக் கொண்டே கிறித்தவ மதம் மீதும் அனுதாபம் கொண்டிருந்தது. மங்கோலிய தலைவர் அபகா கான், லியோனின் இரண்டாவது அவைக்கு (1274), 13-16 நபர்கள் அடங்கிய ஒரு குழுவை அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக அக்குழுவின் தலைவர் 'சகனுஸ்' பொது மக்களிடையே ஞானஸ்நானம் செய்யப்பட்டபோது. ஃப்ராங்கோ-மங்கோலிய கூட்டணியின் மூலமாக ஒரு இணைந்த சிலுவை படையெடுப்புக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் 1276 இல் திருத்தந்தை பத்தாம் கிரிகோரி இறந்ததன் காரணமாக அது நடைபெறவில்லை. மூன்றாம் யபல்லகா (1245–1317) மற்றும் ரபன் பர் சவுமா (அண்ணளவாக 1220–1294) ஆகியோர் புகழ்பெற்ற மங்கோலிய நெசுத்தோரிய கிறித்தவர்கள் ஆவர். நடு மங்கோலியாவில் வாழ்ந்த கெரயிடுகள் கிறித்தவர்கள் அவர். பைசாந்திய-மங்கோலிய கூட்டணியின் நினைவாக இஸ்தான்புல்லில் மங்கோலியர்களின் புனித மேரியின் தேவாலயம் நிற்கிறது. மேற்கு கானேடுகள் எனினும் படிப்படியாக இஸ்லாம் மதத்தை (பெர்கே மற்றும் கசனுக்குக் கீழ்) ஏற்றுக் கொண்டன. துருக்கிய மொழிகளையும் (அவற்றின் வணிக முக்கியத்துவம் காரணமாக) அவர்கள் இறுதியில் ஏற்றுக்கொண்டனர். பெரிய கானுக்கான விசுவாசம் மற்றும் மங்கோலிய மொழிகளின் பயன்பாடானது 1330 களிலும் காணப்பட்ட போதும் இவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டனர். 1521 இல் முதல் முகலாயப் பேரரசரான பாபர் சகதை கானேடு ராணுவ பதாகை பால்-தெளிக்கும் விழாவில் பங்கேற்றார். அங்கு அந்த நேரத்திலும் கூட மங்கோலிய மொழி பயன்பாட்டில் இருந்தது. எகிப்தின் மங்கோலிய சுல்தானாகிய அல்-அதில் கித்புகா (ஆட்சி 1294-1296) மற்றும் பாதி மங்கோலியரான அன்-நசீர் முகம்மது (1341 வரை ஆட்சி செய்தார்) ஆகியோர் எகிப்தின் கெய்ரோவில் அல்-நசீர் முகமது மதரஸாவை கட்டினர். அன்-நசீரின் மங்கோலிய தாயின் பெயர் அஷ்லுன் பின்ட் ஷக்டை ஆகும். யுவான் அரசமரபின் காலத்தின்போது மங்கோலிய உயர்குடியினர் கன்பூசியத்தை படித்தனர், கன்பூசிய கோயில்களை கட்டினர் (பெய்ஜிங் கன்பூசிய கோயில் உட்பட) மற்றும் கன்பூசிய நூல்களை மங்கோலிய மொழிக்கு மொழி பெயர்த்தனர். ஆனால் பொதுவாக திபெத்திய பௌத்த மதத்தின் சக்ய பள்ளியை, பக்ஸ்-பாவின் தலைமையின் கீழ் பின்பற்றினர். பொதுமக்கள் அந்த நேரத்திலும்கூட ஷாமன் மதத்தைத்தான் பின்பற்றிக் கொண்டிருந்தனர். டோங்க்ஷியாங் மற்றும் போனன் மங்கோலியர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டனர். ஆப்கானிஸ்தானில் மோகோல் மொழி பேசிய மக்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டனர். 1576 இல் திபெத்திய பௌத்த மதத்தின் கெலுக் பள்ளி மங்கோலியாவின் அரச மதமாக மாறியது. திபெத்திய பௌத்த மதத்தின் சிவப்புத் தொப்பி பள்ளியானது மஞ்சள் தொப்பி பள்ளியுடன் ஒருங்கிணைந்து நடந்து கொண்டிருந்தது. மஞ்சள் தொப்பி பள்ளியை பாதி மங்கோலியரான ஜெ சோங்கபா (1357-1419) நிறுவினார். ஷாமன் மதமானது அரசாங்கத்தின் மதமான பௌத்த மதத்தால் உள்ளிழுக்கப்பட்டது. அதன் தூய்மையான வடிவங்கள் ஒதுக்கப்பட்டு பிற்காலத்தில் தொலைதூர வடக்கு மங்கோலியாவில் மட்டுமே அவை பின்பற்றப்பட்டன. பிக்குகள் மங்கோலியாவில் முன்னணி அறிஞர்களுள் சிலராக இருந்தனர். நவீன காலத்திற்கு முந்தைய காலத்தின் பெரும்பாலான இலக்கியம் மற்றும் கலை படைப்புகளுக்கு முக்கிய காரணமாக விளங்கினார். திபெத் மற்றும் பிற அனைத்து பகுதிகளிலும் தொலைந்துபோன பல்வேறு பௌத்த மத தத்துவ நூல்கள் அவற்றின் பழமையான மற்றும் தூய்மையான வடிவில் மங்கோலிய பண்டைய நூல்களில் (உதாரணமாக மங்கோலிய கஞ்சுர்) பாதுகாக்கப்பட்டு வந்தன. சனபசார் (1635–1723), சயா பண்டிடா (1599–1662) மற்றும் சன்சன்ரவ்சா (1803–1856) ஆகியோர் மங்கோலிய புனிதர்களில் மிகப் புகழ் பெற்றவர்கள் ஆவர். நான்காவது தலாய் லாமா யோன்டன் கியாட்சோ (1589–1617) மட்டுமே திபெத்தியர் அல்லாத ஒரே ஒரு தலாய்லாமா என அறியப்படுகிறார். இவர் ஒரு மங்கோலியர் ஆவார். எனினும் தற்போதைய 14வது தலாய் லாமா மங்கோலிய மோங்குவோர் இனத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[66] தலாய் லாமா என்ற பெயரானது "பெருங்கடல்" என்ற பொருளுடைய மங்கோலிய வார்த்தை மற்றும் "குரு, ஆசான், வழிகாட்டி" என்ற பொருளுடைய திபத்திய வார்த்தையான (ப்லா-மா) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு ஆகும்.[1] உருசிய விரிவாக்கம் காரணமாக பல புரியத்தியர்கள் மரபுவழி கிறித்தவர்களாக மாறினர். சோசலிச காலத்தின்போது மதமானது அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் அது ரகசிய வட்டங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது மங்கோலிய மக்கள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நாத்திகர்களாக அல்லது பகுத்தறிவுவாதிகளாக உள்ளனர். மங்கோலியாவின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் தங்களை நாத்திகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். அதே நேரத்தில் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் மதமாக திபெத்திய பௌத்த மதம் விளங்குகிறது. அது 53% மக்களால் பின்பற்றப்படுகிறது.[67] பொதுவுடைமைவாதிகளால் ஒடுக்கப்பட்டு பிழைத்த பௌத்த மதம் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு மங்கோலியர்களிடையே தற்போது பெரும்பாலும் பின்பற்றப்படும் திபெத்திய பௌத்த மதத்தின் பள்ளியான மஞ்சள் தொப்பி பிரிவாக உள்ளது. மங்கோலியர்களிடையே காணப்படும் கெலுபா பிரிவில் பலம் வாய்ந்த ஷாமன் மத தாக்கம் பரவியுள்ளது. ![]() ராணுவம்மங்கோலியர்கள் ஐரோவாசியாவில் இருந்த மிக சக்தி வாய்ந்த ராணுவங்கள் மற்றும் வீரர்களுக்கு எதிராக போர் புரிந்துள்ளனர்.[சான்று தேவை] கெண்டி சத்தம் மற்றும் புகை சமிக்ஞை ஆகியவை யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறிகள் ஆகும். இவர்கள் பயன்படுத்திய யுத்த அணிவகுப்புகளில் ஒன்றானது 5 படைப்பிரிவுகள் அல்லது அலகுகளை கொண்டிருந்தது. பொதுவாக படைப்பிரிவுகள் அணிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. முதல் இரண்டு அணிகள் முன்வரிசையில் இருந்தன. இந்த வீரர்கள் கடினமான கவசம் மற்றும் ஆயுதங்களை கொண்டிருந்தனர். பிற்பகுதியில் இருந்த மூன்று அணிகள் முன் பக்கம் இருந்த அணிகளுக்குள் பிரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் தங்களது அம்புகள் மூலம் முதன் முதலில் தாக்குவர்.[68] படைகள் சாதாரணமாக தங்களது எதிரிகளிடமிருந்து தொலைவிலேயே இருப்பர். எதிரிகளை தங்களது அம்பு மழைப்பொழிவின் மூலம் கொல்வர். "அந்த நேரத்தில் வில்லாளர்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி குறி வைக்க மாட்டார்கள். மாறாக 'கொல்லும் பகுதி' அல்லது இலக்கு பகுதி என ஏற்படுத்தப்பட்ட பகுதிக்குள் தங்களது அம்புகளை எய்வர்".[69] மங்கோலியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட ராணுவங்களில் இருந்த பொறியாளர்களை தங்களது ராணுவத்துடன் இணைந்து கொண்டனர். பொறியாளர்களை தங்களது ராணுவத்தின் நிரந்தரமான ஒரு பகுதியினராக ஆக்கினர். இதன் மூலம் அவர்களது ஆயுதங்கள் மற்றும் எந்திரங்கள் சிக்கலானவையாகவும் மற்றும் திறமையானவையுமாக இருந்தன.[70] சொந்தம் மற்றும் குடும்ப வாழ்க்கை![]() பாரம்பரிய மங்கோலிய குடும்பமானது ஆணாதிக்க, தந்தைவழி மற்றும் கணவன் வழி கூட்டத்தின் இருப்பிடத்தை மையமாகக் கொண்டதாகும். ஒவ்வொரு மகனுக்கும் மனைவியர் கொண்டுவரப்பட்டனர். அதே நேரத்தில் மகள்கள் பிற பழங்குடியினர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர். பெண் எடுக்கும் இனங்கள் பெண் கொடுக்கும் இனங்களைவிட தாழ்வாகவே கருதப்பட்டன. இவ்வாறாக பெண் கொடுக்கும் இனங்கள் "முதிர்ந்த" அல்லது "பெரிய" இனங்களாக கருதப்பட்டன. பெண் எடுக்கும் இடங்கள் "இளைய" அல்லது "சிறிய" இனங்களாக கருதப்பட்டன.[71][72] "முதிர்ந்த" மற்றும் "இளைய" அல்லது "பெரிய" மற்றும் "சிறிய" என அடையாளப்படுத்தப்பட்ட இந்த வேறுபாடு இனங்களுக்குள் மற்றும் குடும்பங்களுக்குள்ளும் கூட இருந்தது. ஒரு பரம்பரையின் அனைத்து உறுப்பினர்களும் தலைமுறை மற்றும் வயது ஆகியவற்றால் வயது முதிர்ந்தவர் முதல் இளையவர் வரை சொற்கள் மூலம் வேறுபடுத்தப்பட்டனர். பாரம்பரிய மங்கோலிய குடும்பத்தில் ஒவ்வொரு மகனும் திருமணம் செய்து கொள்ளும் பொழுது தங்களது குடும்பத்திற்கு சொந்தமான கால்நடைகளில் ஒரு பகுதியினை பெற்றனர். இதில் இளைய மகனை விட மூத்த மகனுக்கு அதிகமான பங்கு கிடைக்கும். இளைய மகன் தன்னுடைய பெற்றோரின் கூடாரத்தில் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக தங்கிவிடுவார். பெற்றோரின் இறப்பிற்கு பிறகு இளைய மகன் தன்னுடைய பங்காக பெற்ற கால்நடைகளுடன் பெற்றோருக்கு சொந்தமான கூடாரத்தையும் பெறுவார். இந்தப் பரம்பரை அமைப்பானது செங்கிஸ்கான் உருவாக்கிய யசா போன்ற சட்ட விதிகளால் ஆணையிடப்பட்டுள்ளது.[73] இதைப் போலவே ஒவ்வொரு மகனும் தன் குடும்பத்திற்கு சொந்தமான கூடாரமிடும் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை பெற்றனர். இதிலும் மூத்த மகன் இளையமகனை விட அதிக பரப்பளவு உள்ள நிலப் பகுதிகளை பெறுவார். முதல் மகன் தொலைவில் உள்ள கூடாரமிடும் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை பெறுவார். இதைப் போலவே ஒவ்வொரு மகனும் கூடாரமிடும் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை பெற்றோரின் கூடாரத்திற்கு அருகில் பெற்றுக் கொண்டு வருவர். கடைசியாக இளைய மகன் பெற்றோரின் கூடாரத்திற்கு மிக அருகில் உள்ள நிலங்களை பெறுவார். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை சில தலைமுறைகளுக்குப் பிறகு அதிகமாகும்போது குடும்பத்தை பிரிப்பது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எனினும் பெரும்பாலும் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று அருகிலேயே இருந்து தங்களுக்குள் உதவி புரிந்து கொண்டு வாழும். சாத்தியமான வகையில் பார்க்கும் போது யசாவானது வழக்கமான சட்டத்தின் கொள்கைகளை எழுதப்பட்ட சட்டமாக்கியது என்பது தெளிவாகிறது.
படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia