மனவெழுச்சி நுண்ணறிவுமனவெழுச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது மனவெழுச்சிகளை உணரும், பயன்படுத்தும், புரிந்துகொள்ளும், நிர்வகிக்கும் மற்றும் கையாளும் திறன் என வரையறுக்கப்படுகிறது. உயர் மனவெழுச்சி நுண்ணறிவு கொண்டவர்கள் தங்கள் சொந்த உணர்ச்சிகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் அடையாளம் கண்டு, சிந்தனை மற்றும் நடத்தைக்கு வழிகாட்டுவதற்கு மனவெழுச்சித் தகவலைப் பயன்படுத்துவர். வெவ்வேறு மனவெழுச்சி உணர்வுகளுக்கு இடையில் பகுத்தறிந்து அவற்றை சரியான முறையில் அடையாளமிடவும் மற்றும் சூழலுக்கு ஏற்ப உணர்ச்சிகளை சரிசெய்யவும் கூடியவர்களாக இருப்பர்.[1] இந்த சொல் முதன்முதலில் 1964-ஆம் ஆண்டில் தோன்றியிருந்தாலும்,[2] 1995 ஆம் ஆண்டு அறிவியல் பத்திரிக்கையாளர் டேனியல் கோல்மேன் எழுதிய மனவெழுச்சி நுண்ணறிவு என்ற புத்தகத்தின் வழியாக இது பிரபலமடைந்தது. கோல்மேன் மனவெழுச்சி நுண்ணறிவு என்பதைத் தலைமைத்துவ செயல்திறனைத் தூண்டும் திறன்கள் மற்றும் பண்புகளின் வரிசையாக வரையறுத்தார்.[3] சில ஆராய்ச்சியாளர்கள் மனவெழுச்சி நுண்ணறிவைக் கற்றுக் கொள்ளவும் பலப்படுத்தவும் இயலும் என்று பரிந்துரைக்கின்றனர், மற்றவர்கள் இது ஒரு பிறவிப் பண்பு என்று கூறுகின்றனர்.[4] மனவெழுச்சி நுண்ணறிவினை அளவிட பல்வேறு மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1987 ஆம் ஆண்டில், கெய்த் பீஸ்லி ஒரு கட்டுரையில் மனவெழுச்சி நுண்ணறிவு ஈவு (EQ) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், இது நுண்ணறிவு ஈவு (IQ) என்ற சொல்லின் அடியொற்றி பெயரிடப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் கான்ஸ்டான்டினோஸ் வி. பெட்ரைட்ஸால் உருவாக்கப்பட்ட பண்பு மாதிரியானது, நடத்தை இயல்புகள் மற்றும் உணரப்பட்ட திறன்களின் சுய அறிக்கையிடலில் கவனம் செலுத்துகிறது.[5] திறன் மாதிரி, (மேயெரெட்., 2023) மனவெழுச்சிசார் தகவலைச் செயலாக்குவதற்கும், சமூகச் சூழலுக்குத் தகுந்தவாறு அதைப் பயன்படுத்துவதற்கும் தனிநபரின் திறனை மையமாகக் கொண்டுள்ளது.[6] கோல்மேனின் அசல் மாதிரியானது இப்போது ஒரு கலப்பு மாதிரியாகக் கருதப்படலாம், இது திறன் சார் மனவெழுச்சி நுண்ணறிவு மற்றும் நடத்தை சார் மனவெழுச்சி நுண்ணறிவு என தனித்தனியாக வடிவமைக்கப்பட்டது. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று மனவெழுச்சியின் அங்கீகாரத்தில் கவனம் செலுத்துகிறது, இது காட்சி மற்றும் செவிவழி சொற்களற்ற குறிப்புகளின் உற்றுநோக்கல்களின் அடிப்படையில் மனவெழுச்சி நிலைகளின் பண்புகளைக் குறிக்கிறது.[7] கூடுதலாக, நரம்பியல் ஆய்வுகள் மனவெழுச்சி நுண்ணறிவின் நரம்பியல்சார் வழிமுறைகளை வகைப்படுத்த முயன்றன.[8] வரலாறு1950களில் ஆபிரகாம் மாஸ்லோவால் மனவெழுச்சியின் வலிமை பற்றிய கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.[9] "மனவெழுச்சி நுண்ணறிவு" என்ற சொல் முதன்முதலில் 1964 ஆம் ஆண்டு மைக்கேல் பெல்டோக்கின் கட்டுரையிலும்,[10]1966 ஆம் ஆண்டு பி. லியூனர் எழுதிய மனவெழுச்சி நுண்ணறிவு மற்றும் விடுதலை என்ற தலைப்பில் குழந்தை உளவியல் மற்றும் குழந்தை மனநல மருத்துவத்தின் உளவியல் சிகிச்சை என்ற இதழில் வெளிவந்தது.[11] 1983 ஆம் ஆண்டில், ஹோவர்ட் கார்ட்னரின் ஃபிரேம்ஸ் ஆஃப் மைண்ட்: தி தியரி ஆஃப் மல்டிபிள் இன்டலிஜென்ஸ்[12], நுண்ணறிவு ஈவு போன்ற பாரம்பரிய நுண்ணறிவு, அறிவாற்றல் திறனை முழுமையாக விளக்கத் தவறிவிட்டது என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. பல்வகை நுண்ணறிவு (மற்ற நபர்களின் நோக்கங்கள், உந்துதல்கள் மற்றும் விருப்பங்களைப் புரிந்து கொள்ளும் திறன்) மற்றும் தனியரிடை நுண்ணறிவு (தன்னைப் புரிந்துகொள்ளும் திறன், ஒருவரின் உணர்வுகள், அச்சங்கள் மற்றும் உந்துதல்களைப் பாராட்டுதல்) ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய பல நுண்ணறிவுகளின் கருத்தியலை அவர் அறிமுகப்படுத்தினார்.[13] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia