மிகைல் விளாதிமீரொவிச் மிசூசுத்தின் (Mikhail Vladimirovich Mishustin, உருசியம்: Михаил Владимирович Мишустин, பிறப்பு: 3 மார்ச் 1966) உருசியப் பொருளாதார அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2020 சனவரி 16 இல் உருசியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இவர் 2020 சனவரி 15 இல் உருசியப் பிரதமராக அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டினால் பரிந்துரைக்கப்பட்டார்.[1] சனவரி 16 இல் இவரது நியமனம் அரச தூமா என அழைக்கப்படும் உருசிய நாடாளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2]
தலைமை அமைச்சர்
அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் 2020 சனவரி 15 இல் நிகழ்த்திய நாடாளுமன்ற உரையில் உருசிய அரசியலமைப்பில் பல திருத்தங்களைப் பிரேரித்தார். இதனை அடுத்து பிரதமர் திமித்ரி மெட்வெடெவ் தமது அமைச்சரவையைக் கலைப்பதாகவும், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அரசுத்தலைவரின் அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பகிர்ந்தளிக்கும் பூட்டினின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொருட்டு, தாம் பதவி விலகுவதாக மெட்வெடெவ் அறிவித்தார்.[3] இவரது பதவி விலகலை பூட்டின் ஏற்றுக் கொண்டார்.[4] அன்றே பூட்டின் புதிய தலைமை அமைச்சர் பதவிக்கு மிகைல் மிசூசுத்தினப் பரிந்துரைத்தார்.[1] சனவரி 16-இல், நாடாளுமன்றம் மிசூசித்தினைப் பிரதமராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இவருக்கு எதிராக வாக்களிக்கவில்லை.[5][6] அதே நாளில் பூட்டின் அவரை தலைமை அமைச்சராக அதிகாரபூர்வமாக நியமித்தார்.[7]