முகம்மது நசீது
முகம்மது நசீது (Mohamed Nasheed, திவெயி: މުހައްމަދު ނަޝީދު; பிறப்பு: 17 May 1967) மாலைத்தீவு அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும்,[1] 2008 முதல் 2012 வரை மாலைத்தீவு அரசுத்தலைவராக இருந்தவரும் ஆவார்.[2] இவர் மாலைத்தீவுகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அரசுத்தலைவரும்,[3] மாலைத்தீவு சனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.[4] 2008 அரசுத்தலைவர் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பில், முகம்மது நசீது 25% வாக்குகளைப் பெற்றார், அதன் பின்னர் 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்த மாமூன் அப்துல் கயூமிற்கு எதிரான பொது எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். நசீது 2008 நவம்பர் 11 இல் அரசுத்தலைவராகப் பதவியேற்றார். 2011-12 இல் எதிர்க்கட்சிகள் ந்சீதுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கின. இராணுவத்தினரும், காவல்துறையினரும் இதில் இணைந்து கொண்டனர். இதனை அடுத்து 2012 பெப்ரவரி 7 இல் நசீது பதவியில் இருந்து விலகினார். இராணுவத்தினரால் அதான் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து விலகுவதற்கு வற்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.[5] கயூமின் செல்வாக்கு மிக்க ஆதரவாளர்களின் உதவியுடன் இராணுவப் புரட்சி மூலம் அவர் பதவியில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது.[6] இவருக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த முகமது வாகித் அசன் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது குறித்து விசாரணை செய்த மாலைத்தீவு தேசிய விசாரணைகள் ஆணைக்குழு நசீதின் குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறியது.[7] அவர் பதவியில் இருந்த போது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகம்மது என்பவரைக் கைது செய்தமைக்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நசீது 2015 மார்ச்சில் கைது செய்யப்பட்டு,[8] 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[9] பன்னாட்டு மன்னிப்பு அவை இதனை "அரசியல் பழிவாங்கல்" எனக் குற்றஞ் சாட்டியது.[8][10] ஐக்கிய அமெரிக்க அரசுச் செயலகம் "விசாரணையின் போது பொருத்தமான குற்றவியல் நடைமுறைகள் இல்லாதது" குறித்துக் கவலை தெரிவித்தது.[9] இந்தியாவும் இது குறித்து வருத்தம் தெரிவித்தது.[11] 2016 இல், நசீது மருத்துவ சிகிச்சைக்காக ஐக்கிய இராச்சியம் சென்ற போது, அவருக்கு அந்நாடு அரசியல் புகலிடம் அளித்தது.[12] சட்டரீதியான தடைகளைச் சுட்டிக்காட்டி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது திட்டங்களை அவர் கைவிட்டார். கட்சியின் முதன்மை வாக்கெடுப்பில் தனது வெற்றியை நிராகரிக்க தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று அவர் தெரிவித்தார்.[13] 2018 அரசுத்தலைவர் தேர்தலில், நசீதின் இளமைக்கால நண்பரும், கட்சியின் வேட்பாளருமான இப்ராகிம் முகமது சாலி வெற்றி பெற்றதை அடுத்து, நசீது நாடு திரும்பினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மச்சங்கோலி மேது தொகுதியில் போட்டியிட்டு 1,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[14] அதை அடுத்து அவர் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 மே 6 இல், நசீது அவரது வீட்டுக்கருகில் தனது வாகனத்தில் ஏறும் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் படுகாயமுற்றார்.[15] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia