முடக்கொத்தான்
முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) என்பது ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில்[1] ஏராளமாக காணப்படும் உயரப் படரும் ஏறுகொடி ஆகும். இதன் பிளவுபட்ட இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இதன் காய்கள் பலூன் போன்ற அமைப்பை உடையவை, அவற்றை கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டும்போது பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒலி உண்டாக்கும். இதன் காரணமாக சிறுவர்கள் இதன் காய்களை, ‘பட்டாசுக் காய்’ என்றும் ‘டப்பாசுக் காய்’ என்றும் அழைப்பதுண்டு. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகியன மருத்துவப் பயன்பாடுடையவை. இவை பெரும்பாலும் சாலையோரங்களிலும், ஆற்றோரங்களிலும் பரவலாக களைபோல வளர்ந்து இருப்பதைக் காணலாம். அது ஆன்டிடிராரிஹோலை [2] மற்றும் ஹோமியோபதி மருத்துவம்[1] ஆகியவற்றில் ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் இதன் இலைகளை அரைத்து தோசை மாவுடன் கலந்து முடக்கத்தான் தோசை என்ற பெயரில் செய்வார்கள். பழங்காலத் தமிழகத்தில் போரின்போது அரண்களை முற்றுகையிடும்போது, அதன் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் உழிஞைத் திணை என்ற திணை அமைந்துள்ளது.[3]
படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia