யசிந்தா ஆடர்ன் (Jacinda Ardern, பிறப்பு: 26 சூலை 1980) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்தின் 40-ஆவது தலைமை அமைச்சராவும், நியூசிலாந்து தொழிற்கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் 1 மார்ச் 2017 அன்று பதவி விலகினார்.[3] அதைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜசிந்தா ஆர்டெர்ன் 1 ஆகஸ்ட் 2017 அன்று பதவியேற்றுக் கொண்டார். பிறகு 23 செப்டம்பர் 2017இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தினார். அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி 46 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. பிறகு அக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.[4] 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.[5] மார்ச் 2019 இல், கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலை நிகழ்வுகளின் பின்னர், துப்பாக்கிகள் வைத்திருப்பது சம்பந்தமாகக் கடுமையான விதிகளை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.[6]கோவிடு-19 பெருந்தொற்றை 2020 முழுவதும் வெற்றிகரமாகக் கையாண்டார்.[7][8] 2020 அக்டோபர் 17 இல் நடந்த பொதுத்தேர்தலில் இவரது தலைமையிலான தொழிற்கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.[9]
2023 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் நாள் தான் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் நியூசிலாந்து நாட்டின் தலைமை அமைச்சர் பதவியிலிருந்தும் 2023 பிப்ரவரி 7 ஆம் நாள் விலகுவதாக அறிவித்தார்.[10][11][12] இவரது இடத்திற்கு கிறிசு இப்கின்சு கட்சித் தலைவராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, யசிந்தா ஆடர்ன் பிரதமர் பதவியில் இருந்து 2023 சனவரி 25 இல் விலகினார்.[13]