யோக்யகர்த்தா (Yogyakarta, /ˌdʒɒɡjəˈkɑːrtə,ˌjɒɡ-/;[2] மற்றும் ஜோகியா அல்லது ஜோகஜாகர்த்தா) இந்தோனேசியாவின்சாவகத் தீவில் அமைந்துள்ள நகரமும் அதே பெயரிலுள்ள யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியின் தலைநகரமும் ஆகும். இது இந்தோனேசிய தேசியப் புரட்சிக் காலத்தில், 1945 முதல் 1949 வரை, இந்தோனேசியத் தலைநகரமாகவும் இருந்துள்ளது. யோக்யகர்த்தாவின் ஒரு பகுதியான கோட்டாகெடே 1575 முதல் 1640 வரை மாதாராம் சுல்தான்களின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்த நகரம் கல்வி மையமாகவும் (கோட்டா பெலாஜார்), பத்தீக் , பாலே நடனம், நாடகம், இசை, கவிதை, பொம்மலாட்டக் கலைகள் போன்ற செம்மைச் சாவக நுண்கலை மற்றும் பண்பாடுகளின் மையமாகவும் விளங்குகின்றது.
இந்நகரின் மக்கள்தொகை 2010இல் 388,627 ஆகும். இந்தோனேசியாவிலேயே மிக உயர்ந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் 0.837 கொண்டுள்ள யோக்யகர்த்தா மிக வளர்ந்த நகரமாக கருதப்படுகின்றது.[3]