யோன் மெட்சிங்கர்
யோன் டொமினிக் அந்தனி மெட்சிங்கர் (Jean Dominique Antony Metzinger) என்னும் முழுப்பெயர் கொண்ட யோன் மெட்சிங்கர் (யூன் 24, 1883 – நவம்பர் 3, 1956) 20ம் நூற்றாண்டின் முக்கியமான பிரெஞ்சு ஓவியரும், கோட்பாட்டாளரும், எழுத்தாளரும், திறனாய்வாளரும், கவிஞரும் ஆவார். இவர், அல்பர்ட் கிளெய்சு (Albert Gleizes) என்பவருடன் சேர்ந்து கியூபிசத்துக்கான கோட்பாடு அடிப்படைகளை உருவாக்கினார்.[1][2][3][4] 1900க்கும் 1904க்கும் இடைப்பட்ட இவரது தொடக்ககால ஆக்கங்கள் யோர்ச் சோரா, என்றி எட்மன்ட் குரொசு ஆகியோரின் புது-உணர்வுப்பதிவுவாதப் பாணியின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தன. 1904க்கும், 1907க்கும் இடையில் செசானியக் கூறுகளைக் கொண்ட பிரிப்பிய, போவியப் பாணிகளிலான ஆக்கங்களை உருவாக்கினார். இவை முன்கியூபிசத்தின் முதற் சில ஆக்கங்களுக்கு வழிகோலின. 1908 இலிருந்து வடிவங்களைப் பட்டைமுகங்களாகக் காட்டும் சோதனைகளில் ஈடுபட்டார். இப்பாணியே விரைவில் கியூபிசம் எனப்படும் பாணியானது. கியூபிசத்தில் இவரது தொடக்ககால ஈடுபாடு இவரை ஒரு செல்வாக்குள்ள ஓவியராகவும், முதன்மையான கோட்பாட்டாளராகவும் இனம்காட்டியது. பல்வேறு பார்வைநிலைகளில் இருந்து ஒரு பொருளைப் பார்ப்பதற்காக அப்பொருளைச் சுற்றி நகர்வதான கருத்துரு முதன் முதலாக 1910ல் வெளியிடப்பட்ட மெட்சிங்கரின் Note sur la Peinture என்னும் கட்டுரையில் கையாளப்பட்டது.[5] கியூபிசத்தின் தோற்றத்துக்கு முன்னர் ஓவியர்கள் ஒற்றைப் பார்வை நிலையில் இருந்தே தமது ஆக்கங்களை உருவாக்கினர். மெட்சிங்கரே முதன் முறையாக அவரது Note sur la peinture இல் வெளி காலம் ஆகிய இரு சூழல்களிலும் தொடர்ச்சியானதும், அகவயமானதுமான பொருட்களின் அநுபவங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதில் ஆர்வத்தை உருவாக்கினார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia