வலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டம்
வலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டம் (Stop Online Piracy Act, SOPA), அவை வரைவு என்றும் அறியப்படும் சட்ட வரைவு அமெரிக்க கீழவையில் அக்டோபர் 26, 2011 அன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அவையின் நீதித்துறைக் குழுவின் தலைவர் லாமர் எஸ். ஸ்மித் மற்றும் இரு கட்சிகளையும் சேர்ந்த 12 துவக்க முன்மொழிவாளர்களாலும் கொண்டு வரப்படுள்ளது. இது சட்டமானால், அமெரிக்க சட்டச் செயலுறுத்தும் முகவர்கள் மற்றும் பதிப்புரிமையாளர்களால் இணையத்தில் பதிப்புரிமை உடைய அறிவுசார் சொத்துரிமை மற்றும் போலி பொருட்களின் விற்பனையை எதிர்த்து போராடும் திறனை கூட்டும்.[2] தற்போது அவையின் நீதித்துறை குழுவில் உள்ள இந்த சட்டவரைவு இதனை ஒத்த 2008ஆம் ஆண்டின் புரோ-ஐபி சட்டம் மற்றும் செனட்டில் விவாதிக்கப்படும் இயைந்த அறிவுசார் சொத்துரிமை காப்பு சட்டம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டுள்ளது.[3] துவக்க வரைவின்படி பதிப்புரிமை மீறலை வசதிப்படுத்தும் அல்லது இயல்விக்கும் இணையத்தளங்கள் மீது அமெரிக்க உள்துறை அமைச்சான நீதித்துறைக்கும் பதிப்புரிமையாளர்களுக்கும் நீதிமன்ற ஆணைகளைப் பெற வாய்ப்பு நல்கும். யார் மனு கொடுத்தார்கள் என்பதைப் பொறுத்து நீதிமன்ற ஆணை இணைய விளம்பரதாரர்கள் மற்றும் பேபால் போன்ற பண பட்டுவாடாநிறுவனங்கள் இந்த விதிமீறல் இணையத்தளங்களுடன் வணிகம் செய்வதை தடை செய்யவும் இணையத் தேடல்பொறிகள் இந்த இணையத்தளங்களுக்கு இணைப்புக் கொடுப்பதை தடுக்கவும் இணையச் சேவை வழங்கிகள் இந்த தளங்களின் அணுக்கத்தை தடை செய்யவும் வழிவகை செய்யலாம். இந்தச் சட்டம் பதிப்புரிமையுடைய ஆக்கங்களின் அனுமதியற்ற ஊடக ஓடை வழங்குதலை குற்றமாக ஆக்கி ஆறு மாதங்களுக்குள் பத்துமுறை மீறுவோருக்கு கூடுதல் பட்சமாக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவும் வகை செய்கிறது.[4] இத்தகைய விதிமீறல் இணையத்தளங்கள் மீது தாமாகவே நடவடிக்கை எடுக்கும் இணையச்சேவை வழங்கிகளுக்கு சட்டவிலக்களிப்பதுடன் தவறான வழக்கு பதியும் பதிப்புரிமையாளர் நட்ட ஈடு வழங்கவும் வகை செய்கிறது.[4] இந்தச் சட்ட ஆதரவாளர்கள் இது அறிவுசார் சொத்துரிமை சந்தையையும் தொடர்பான தொழிலையும் வேலைகளையும் வருமானத்தையும் காக்கிறது; பதிப்புரிமை சட்ட அமலாக்கத்தை, முக்கியமாக வெளிநாட்டு இணையத்தளங்களுக்கு எதிராக, வலுப்படுத்தவேண்டும் என்கின்றனர். [5] கனடிய மருந்தகங்களிலிருந்து பரிந்துரை மருந்துகளை சட்டவிரோதமாக இறக்குமதிச் செய்யத் தூண்டி அமெரிக்க வாடிக்கையாளர்களை குறிவைத்த விளம்பரங்களை வழங்கியதற்காக அமெரிக்க நீதித்துறையுடன் கூகுள் நிறுவனம் செய்துகொண்ட $500 மில்லியன் அறுதியாவணத்தை எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டுகிறார்கள்.[5] இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இது முதல் சட்டத்திருத்தத்தை மீறுவதாகவும்,[6] இணைய தணிக்கைமுறையாகவும்,[7] இணையத்தை முடக்குவதாகவும்,[8] சுதந்திரப் பேச்சு மற்றும் குற்ற முன்னறிவிப்பாளர்களுக்கு பயமுறுத்தலாகவும் உள்ளதாகவும் கூறுகின்றனர்.[6][9] எதிர்ப்பாளர்கள் மனு கொடுத்தல், இந்த சட்டத்தை ஆதரிக்கும் நிறுவனங்களைப் புறக்கணித்தல், அடுத்த அவை நடவடிக்கைகளின்போது முதன்மை இணைய நிறுவனங்கள் திட்டமிடப்பட்ட சேவை இருட்டடிப்புகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வகை எதிர்ப்பு நடவடிக்கைகளை, துவக்கியுளனர். அவையின் நீதித்துறை குழு தனது விசாரணைகளை நவம்பர் 16 மற்றும் திசம்பர் 15, 2011 அன்று நடத்தியது. இந்த உரையாடலை சனவரி 2012இல் தொடர உள்ளது.[10] வெள்ளை மாளிகைதன்னிடம் கொடுக்கப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவிற்கு எதிர்வினையாக ஐக்கிய அமெரிக்காவின் தலைவர் பாரக் ஒபாமாவின் நிருவாகம் சனவரி 14, 2012 அன்று இணையத் தணிக்கை, புதுமைவிழைவை அடக்குதல், குறைந்த இணையப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் கூறுகளடங்கிய சட்டவரைவை ஆதரிக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளது; அதேநேரம் "அனைத்து தரப்பினரும் ஒன்றுசேர்ந்து இந்த ஆண்டுக்குள் சட்ட பராமரிப்பாளர்களும் உரிமை கொண்டோரும் அமெரிக்க எல்லைகளுக்கப்பாலிலிருந்து நடத்தும் இணையவழித் திருட்டை எதிர்கொள்ள வகைசெய்யும் , இந்த எதிர்வினையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களுக்கிணங்க, வலுவான சட்டமொன்றை நிறைவேற்றிட உழைத்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.[11][12][13][14] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia