துடுப்பாட்டம் (ஆங்கிலம்:Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும்.
துடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு ரீதியாக விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றுள்ளன.
2011ஆம் ஆண்டு சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் காட்சி
இருபது20 என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் ஒன்றாகும். இது இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கவுண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளின் போது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 போட்டியில் இரண்டு அணிகள் தலா ஒரு ஆட்டப் பகுதிகயைக் கொண்டிருப்பதோடு ஒரு அணிக்கு உச்ச வரம்பாக 20 நிறைவுகள் மட்டையாட வழங்கப்படுகின்றது.
இருபது20 துடுப்பாட்டப் போட்டியின் ஒவ்வொரு ஆட்டப் பகுதியும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு 3 மணி 30 நிமிடத்தில் மொத்த ஆட்டமும் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கென்சிங்டன் ஓவல் மைதானம்மேற்கிந்தியத்தீவுகள் தலைநகர் பிரிஜ்டவுனுக்கு மேற்கில் பார்படோசு தீவில் அமைந்துள்ளது. இத்தீவின் விளையாட்டு மையமான இம்மைதானம் துடுப்பாட்டத்துக்கு முக்கிய இடம் அளிக்கிறது. இம்மைதானம் உள்ளூர் துடுப்பாட்டத்துக்கு முக்கிய மையமாதலால் "துடுப்பாட்டத்தின் மெக்கா" என இது உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறது. இதன் 120 ஆண்டு வரலாற்றில் உள்ளூர், பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளையும் நடத்தியுள்ளது